Saturday, December 18, 2010

பூச்சரம்

பூச்சரம்
“ஆன்மீக அரும்புகளினாலான அழகு மாலை” எனும் தலைப்பிலான வலைப்பூ (blog) ஆரம்பித்து இன்று (18.12.2010) ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
ஒவ்வொரு கட்டுரையும் அரும்பு போல அமைந்து, அவையனைத்தையும் கோர்த்தால் வரும், வாசம் மிக்க மலர் மாலை போல, இக்கட்டுரைகள் அனைத்தும் இறைவனுக்கு ஆன்மீக மாலையாக அமையும் வண்ணம், இறைவனுக்கு அர்ப்பணிக்கும் உணர்வோடு எழுதப்படுகின்றது.
இறைவனின் துணைகொண்டு,
அமரரான என் தந்தையின் வழிநின்று,
அன்பர்களின் பலரின் வழிகாட்டுதலில்,
அடியேன் அறிந்த ஆன்மீக விஷயங்களை அனைவருக்கும் அறிவிக்கும் எண்ணத்தில் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
(கதம்பம் எனும் பதிவைக் காணவும்)
வலைப்பூ (blog) ஆரம்பப்பிதற்கு முன் பல வருடங்களாக, ஆன்மீகக் கட்டுரைகளை பல பத்திரிகைகளுக்கு எழுதி வந்தேன்.
அவற்றை வலையேற்ற தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்களிடம் பேசநேர்ந்தது.
அச்சமயம், வியதீபாத தரிசனம் எனும் கட்டுரையை அவரின் blog-ல் பதிவிடக் கேட்டுக்கொண்டேன்.
எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக அக்கட்டுரையை அவரின் blog-ல் பதிவிட்டார். அது தான் எனக்கு முதல் தொடக்கமாக இருந்தது.
அதன்பின், தனியாகவே ஒரு வலைப்பூ ஆரம்பிக்க ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தக்க வழிகாட்டினார்கள்.
வலைப்பூ ஆரம்பித்தாகிவிட்டது. அடியேன் எழுதியிருந்த பல கட்டுரைகளை ஒவ்வொன்றாக இணையத்தில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால், இதுவரை அவற்றில் சிலவற்றையே பதிவிட்டிருக்கின்றேன்.
நண்பர்களின் பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒவ்வொரு மாதமும் நிகழும் முக்கியமான ஆன்மீக நிகழ்வுகள் சம்பந்தமாகவும், தமிழ் இலக்கியம் சார்ந்தும், அடியேன் ரசித்த விஷயங்களையும் எழுத ஆரம்பித்தேன்.
ஆன்மீக சம்பந்தமான நண்பர்கள் பலர் கிடைத்தார்கள்.
அவர்களின் கேள்விகள், ஆலோசனைகள், மேலும் பல விஷயங்களைத் தேடச் செய்தது.
ஆகவே அவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
வலைப்பூவிற்கு விஜயம் செய்த அத்துணை பேருக்கும் அனேக நன்றிகள்.
வலைப்பூவிலிருந்து சில தேர்ந்தெடுத்தக் கட்டுரைகளை, மதிப்பு மிகுந்த “ஞான ஒளி” (ஆன்மீக மாத இதழ் - தபோவனம், ஞானானந்த மிஷன் வெளியீடு) எனும் அற்புதமான புத்தகத்தில் வெளியிடுக்கொண்டிருக்ன்றார்கள்.
அப்பத்திரிகையின் ஆசிரியர் என்.ஆர். ரங்கநாதன் அவர்களுக்கு அனேக நன்றிகள்.
மாதம் மூன்று கட்டுரைகள் வீதம் எழுத நினைத்திருந்தேன்.
அதற்கு சற்றே ஒரு சிறு ஓய்வு கொடுக்க எண்ணியிருக்கின்றேன்.
சிறிது காலத்திற்குப் பிறகு தொடர்ந்து கட்டுரைகளை எழுதலாம் என்றிருக்கின்றேன்.
இது நாள் வரை எழுதிய கட்டுரைகளின் தலைப்புகளை தனித்தனி hyperlink ஆக கொடுத்திருக்கின்றேன்.
அத்தலைப்புகளின் மீது க்ளிக் செய்தால் அக்கட்டுரை விரியும்.
ஆன்லைனில் படிக்க இயலாதவர்கள், டவுன்லோடு செய்து ஆ•ப்லைனில் படிக்க வசதியாக அனைத்துக் கட்டுரைகளையும் (சற்றே திருத்தியமைத்து) ஒரே FILE ஆக PDF FORMAT –ல் இங்கே கொடுத்திருக்கின்றேன்.
இத்தொகுப்பை அச்சிடவும் ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கின்றேன்.
அன்பர்கள் வழக்கம்போல் தமது கருத்துக்களைக் கூறி, இந்த blog மேலும் சிறப்படைய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கின்றேன்.
அனைவருக்கும் அனேக நன்றிகள்.
எனது முந்தையக் கட்டுரைகள் :
தைப் பூச நடனம், வியதீபாத தரிசனம், மார்கழி மஹோத்ஸவம், காசி யாத்திரை, ஆழ்வார்கள் அருளிய அமுதம், தியாகராஜர் ஆராதனை, சாளக்ராம வழிபாடு, கூடாரைவல்லி, நால்வர் காட்டிய நல்வழி, சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர், கவிக்கோ(ர்) காளமேகம், அதிசய அற்புத பாடல்கள், பாம்பு இயற்றிய பாடல், நடராஜ பத்து, திருப்பல்லாண்டு, மஹா சிவராத்திரி, வசந்த நவராத்திரி, நவாவரண பூஜை கதம்பம், கால கணிதம் (1,2,3,4 & 5), காளியின் அருள் பெற்ற காளிதாசன் (பகுதி - 1), ஆனித் திருமஞ்சனம் (2010) திருவள்ளுவர் கண்ட திருநடனம், ஆஷாட நவராத்திரி, அருள் நிறைத்த ஆஷாட நவராத்திரி ! ஆனந்தம் அளித்த ஆஷாட நவராத்திரி காளியின் அருள்பெற்ற காளிதாசன் (பகுதி - 2), விநாயகர் சதுர்த்தி - 2010 மஹா சங்கடஹர சதுர்த்தி, ஆடிப் பூரம் - வளையல் அலங்காரம், நமஸ்காரம் (இணக்கம் ஏற்படுத்தும் வணக்கம்), பிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் !, சியமந்தக மணி, மஹா அன்னாபிஷேகம், நவராத்திரி, அன்னதானம் திருமுருகாற்றுப்படை * ஸ்கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், சங்காபிஷேகம்,
என்றும் அன்புடன் நி.த. நடராஜ தீக்ஷிதர் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை நெய்வேலி, ஸத்சங்கம் – மணித்வீபம் பூஜகர் செல் : 94434 79572 Mail : yanthralya@yahoo.co.in, yanthralaya@gmail.com

Wednesday, December 1, 2010

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம் (11.01.2017 -  புதன் கிழமை)

சிதம்பரம்.
ஸ்ரீ நடராஜ ராஜர் என்றும், எப்பொழுதும் திருநடனம் புரிந்துகொண்டிருப்பதால், தினம் தினம் திருநாள் தான், தினம் ஒரு உத்ஸவம் தான்.
சிதம்பரத்தின் மஹோத்ஸவங்களில் மிக முக்கியமானதும், மணி மகுடம் போன்றதும் விளங்குவது மார்கழி ஆருத்ரா தரிசனம்.
கைலாய மலை பனி படர்ந்தது. அங்கு வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு உகந்த, பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள் மஹா உத்ஸவத்தின் உச்சகட்ட நிகழ்வு.
மார்கழி ஆருத்ரா தரிசன தினத்தின் மதியப் பொழுதில் (ஸ்ரீ நடராஜ ராஜர் - பகல் வேளையில் தான் தன் கணங்கள் அனைத்தோடும் வந்திறங்கினார்) சித்ஸபா பிரவேசம் எனும் பொன்னம்பலம் புக்கும் காட்சியே - பெரும் புண்யங்களை அளிக்க வல்லது.
மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் - கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி (02.01.2017 - காலை 6.30க்கு மேல் 07.15 மணிக்குள்) அதை தொடர்ந்து, உத்ஸவ யாகசாலையில் காலை மாலை இரு வேளைகளிலும், மிகச் சிறப்பு வாய்ந்த ஹோமங்கள் செய்து, ஒவ்வொரு நாள் இரவிலும் மற்றும் காலையிலும், உத்ஸவ நாயகர்களாகிய ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - நாதஸ்வர இசை முழங்க, வேத பாராயணம் முழங்கிட வீதி வலம் வந்து காட்சி நல்குவார்கள்.
ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி சிறப்பு வாய்ந்த வாகனங்களில் வலம் வருவார்.
தங்கத்தினாலான மஞ்சம் (02.01.2016),
சந்திர பிரபை (03.01.2017),
சூர்ய பிரபை (04.01.2017),
பூத வாகனம் (05.01.2017),
ஸகோபுரம் எனும் தெருவடைச்சான் என்று அழைக்கப்படக்கூடிய ரதம் (கோபுர வடிவத்திலான, தெரு முழுவதும் அடைத்து வரக்கூடிய விதத்தில் அமைந்தது - 06.01.2017),
யானை வாகனம் (07.01.2017),
தங்க கைலாய மலையெடுத்த வெள்ளி ராவணன் வாகனம் (மிக அற்புதமான அமைப்பு, ராவணன் உருவம் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒன்பது தலைகளும், கையில் ஒரு தலையை வீணையின் தலைப்பாகமாக அமைத்து காம்போதி ராகம் மீட்டும் வகையில் அமைந்தது - 08.01.2017) என்று முறையே வலம் வந்து அருள்பாலிப்பார்.
எட்டாம் திருநாளில் (09.01.2017) பிக்ஷாடனராக வலம் வருவார்.
ஒன்பதாம் திருநாள் (10.01.2017) - தேர் உத்ஸவம்.
பத்தாம் திருநாள் (11.01.2017) - ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம்.
மறுநாள் (12.01.2017) - முத்துப்பல்லக்கில் வீதியுலா.

மாணிக்க வாசகர் தரிசனம் :
சமய நால்வர்களில் முக்கியமானவர், காலத்தால் முந்தையவர் ஸ்ரீ மாணிக்கவாசகர். பாண்டிய மன்னரின் மந்திரியாக பதவி வகித்து, கல்லால மரத்தின் கீழ் வீற்றிருந்த ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியால் ஆட்கொள்ளப்பட்டு, பெரும் சிவத் தொண்டு ஆற்றியவர்.
இவருக்காகவே, சிவபெருமான் நரிதனை பரியாக்கி, வைகையை பெருக்கச் செய்து, பிட்டுக்கு மண் சுமந்து - போன்ற திருவிளையாடல்களை நிகழ்த்தியவர்.
இறைவனாலேயே மணிவாசகர் என்று போற்றப்பட்டவர். தில்லையின் அம்பலத்தினுள்ளே இரண்டறக் கலந்தவர். இவரின் திருவாசகத்துக்கு உருகாதவர் யாருமில்லை. திருவாசகம் - நெஞ்சை நெக்குருகச் செய்யும் விதத்தில், ஒவ்வொரு வாசகமும் மாணிக்கம் போன்ற அழகுற அமைந்தமையால், மாணிக்கவாசகர் என்று போற்றப்படுபவர்.
இவர் எழுதிய திருவெம்பாவை - மார்கழி மாதத்தில் மிகச் சிறப்பாக பாடப்பெறும். சிதம்பரத்தில், மாணிக்கவாசரின் தனிச்சிறப்பு மிக்க மாணிக்கவாசகர் விக்ரஹத்திற்கு இந்த மஹோத்ஸவ காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
இங்கு மட்டுமே மாணிக்க வாசகரின் - கைகள் மற்ற ஆலயங்களில் உள்ளது போல் அல்லாமல், தெய்வங்களுக்கு உரிய சின் முத்திரையோடு அமைந்திருக்கும். இங்கு மட்டுமே மாணிக்கவாசகர் தெய்வத்திற்கு நிகராக கருதப்பட்டு, வழிபாடு செய்யப்படுகிறார்.
மார்கழி மஹோத்ஸவத்தின் பத்து தினங்களிலும், மாணிக்க வாசகர் தனி மஞ்சத்தில் எழுந்தருளிச் செய்து, பொன்னம்பலத்திற்கு அடுத்த கனகசபையின் வாசலில், ஸ்ரீ நடராஜருக்கு எதிரே நிற்கச் செய்து, மிக சிறப்பான வழிபாடுகள் செய்யப்படும்.
மாலை வேளை சாயரக்ஷை எனும் ஸாயங்கால கால பூஜை முடிந்த பிறகு, மாணிக்க வாசகருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படும்.
அவருடைய திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு, ஒவ்வொரு பாடல் முடிவிலும் சிறப்பு நிவேதனங்கள் நைவேத்யம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெறும்.
இருபத்தோரு தீபாராதனைகளோடு நடைபெறும் இக்காட்சி மாணிக்கவாசகர் தீபாராதனை என அழைக்கப்படும்.
தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த பூஜையைக் காண எண்ணற்ற பக்தர்கள் பார்த்து மகிழ்வார்கள்.
மறுநாள் காலை பஞ்சமூர்த்திகள் (ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர்) திருவீதி வலம் வரும்போது, மாணிக்க வாசகர் ஸ்ரீ ஸோமாஸ்கந்தரை வணங்கியவாறே பின் நோக்கி வலம் வரும் காட்சி மிகவும் அற்புதமானது.தேர்த் திருநாளின் அதிகாலை 05.00 மணியிலிருந்து 05.30 மணிக்குள் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ ராஜர் அழகுமிகு அரிய அணிமணிகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட திருக்கோலத்தோடு யாத்ராதான நிகழ்ச்சியாக - சித்ஸபையின் கனகசபையிலிருந்து தேருக்குப் புறப்படும் திருக்காட்சி நடைபெறும்.
தேர் மிக அழகிய வடிவம் வாய்ந்தது. மிக உயர்ந்த தோற்றம். ரதலக்ஷணம் எனும் சாஸ்திர முறைப்படி சக்கரங்கள், ஆர் தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு, கிடுகு முதலியவற்றால் ஆனது. தேரிலுள்ள மர சிற்பங்கள் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டது. சிவலீலைகளின் காட்சிகள் மிக அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கும். தேரின் நடுவில் உள்ள ஊஞ்சலில் நடராஜர் அமர்த்தப்படுவார்.தேரில் அமர்த்தியபிறகு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற பிறகு, சேந்தனாரின் திருப்பல்லாண்டு பாடல்கள் இசைக்க, வேத கோஷங்கள் முழங்க, திருமுறைகள் ஓதப்பட, நாதஸ்வரம் இன்னிசைக்க, உற்சாக கோஷங்கள் நிரம்ப, உலுக்கும் மரம் எனும் நெம்புகோல் வடிவம் தேரை உந்தித் தள்ள, உத்ஸவத்தின் மிக முக்கிய கட்டம் இனிதே தொடங்கும்.
நடராஜரின் ஆட்டத்திற்கு தாளம் இசைப்பது போல தேரில் இருக்கும் மணிகள் ஒலியெழுப்பும்.
நடராஜரின் முன் தோற்றத்தை ரசிப்பவர்களைப் போல, அழகுமிகு பின் தோற்றத்தை கண்டு ரசிப்போரும் உண்டு. தேர் தரிசன உத்ஸவத்தில் மட்டுமே பின் தோற்றத்தை கண்டு ரசிக்கமுடியும்.
கருநிற இரண்டு (நடராஜர் & சிவகாமசுந்தரி) தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வருவது இரு யானைகள் அழகாக அசைந்து அசைந்து வருவதைப் போன்ற இக்காட்சியை காணும்போது, காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன் என்ற திருநாவுக்கரசர் கூறியதே நினைவுக்கு வருகின்றது.பொதுவாக இலக்கியங்களில், தெய்வங்களை யானைக்கு ஒப்பிடுவது இயல்பானது. யானையின் காலைப் பிடித்தால் தான் அதன் உதவியோடு தலையில் ஏறமுடியும். அதுபோல தெய்வத்தின் காலடியில் சரணடைந்தால் மிக உயர்ந்த இடமாகிய மோட்சம் கிடைக்கும் என்பதை உணர்த்தவே தெய்வங்களை யானைக்கு உருவகப்படுத்துகின்றனர்.
யானையின் வளைந்த காலைப் பிடித்து அதன் தலையில் ஏறுவதைப் போல, நடராஜரின் வளைந்த திருப்பாதமாகிய குஞ்சிதபாதத்தை சரணடைந்தால், மிக உயரிய பேறு கிடைக்கும் என்பது திண்ணம்.
மதியம் உச்சிகால பூஜை தேரிலேயே நடைபெற்று நிலைபெறும்.
சற்றே இடைவெளிக்குப் பிறகு, செம்படவர் மண்டகப்படி எனும் மீனவர்கள் எடுத்துவரும் மண்டகப்படி எனும் மரியாதைகளை நடராஜர் ஏற்று பிறகு தேர் மறுபடி கிளம்பி, ஈசான திசை திரும்பி, தேர் கிளம்பிய இடத்திற்கே வந்து நிலைபெறும்.
தேரிலேயே சாயரக்ஷை - மாணிக்கவாசகர் தீபாராதனை விசேஷ நிவேதனங்களுடன் நடைபெறும்.
தேரிலிருக்கும் தெய்வங்கள் கோயிலினுள்ளே ஆயிரங்கால் மண்டபத்தில் வரவழைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் நூறு தீக்ஷிதர்கள் நின்று, ஏக கால லக்ஷார்ச்சனை நடைபெறும்.
ஆயிரங்கால் மண்டபம் மிக பிரம்மாண்டமானது. ஆயிரம் தூண்கள் கொண்டது. மண்டபத்தினுள்ளே விதானம் எனும் மேற்கூரையில் உள்ள ஓவியங்கள் சிதம்பர புராணத்தைப் பகிரும் விதத்தில் வரையப்பட்டது. ஆடல்வல்லானின் அழகு மிகு நடனக் காட்சிகள், சித்தர் பீடங்கள் முதலான ஓவியங்களைக் காண கண்கள் கோடி வேண்டும். ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும்.
அதன் பின், ருத்ராபிஷேக ஹோம பூஜைகளுடன், மஹாபிஷேகம் நடைபெறும். அபிஷேக திரவிங்கள் பெருமளவில் சேகரிக்கப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் ஸகல திரவிய அபிஷேகமாக நடத்தப்படும். இறுதியில் புஷ்பாஞ்சலி எனும் பலவித மலர்களால் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.அரிய அணிமணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு அர்ச்சனை ஆராதனைகள் நடத்திய பிறகு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்தபிறகு, மதிய வேளையில், ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து சித்ஸபைக்கு அம்பிகையும், ஈசனும் திருநடனம் புரிந்துகொண்டே செல்லும் அற்புத காட்சிதான் ஆருத்ரா தரிசனம் ஆகும்.இந்தக் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
தில்லையில் திருநடம்புரியம் சித்ஸபேசரின் திருநடன திருக்காட்சியைக் கண்டவர்கள் பெரும் பேறு பெற்றவர்களாவார்கள்.
வேண்டிய வரங்களும், நீடித்த ஆயுளும், பெரும் செல்வமும் அருளக்கூடிய தேர் தரிசனக் காட்சியை அனைவரும் கண்டுகளிப்போம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- Mail : yanthralaya@yahoo.co.in, yanthralaya@gmail.com
www.facebook.com/deekshidhar
- Cell : 94434 79572, 93626 09299..









Friday, November 26, 2010

சங்காபிஷேகம்




சங்காபிஷேகம்

ஒவ்வொரு வருட கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும்.

சங்கு.
கடலில் இருந்து கிடைக்கும அரிய தெய்வீகப் பொருள்.
சங்கிற்கு பவித்ர (புனிதமான) பாத்திரம் எனப் பெயருண்டு. அதில் விடப்படும் தீர்த்தம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
சங்கு பஞ்சபூதங்களாலும் மாறுபடாதது.
நீரில் கிடைப்பது. நெருப்பால் உரு மாறாதது. இதிலுள்ள துவாரத்தினில் காற்றைச் செலுத்தினால் சுநாதமான ஒலியை வழங்குவது.
பவழம், முத்து மற்றும் பாண லிங்கம், சாளகிராமம் ஆகியவை உயிரினங்களிலிருந்து கிடைத்து பூஜைக்குரிய பொருட்களாக விளங்குவதுபோல் சங்கும் கடலில் கிடக்கப்பெறும் பூச்சியினத்தின் மேல் ஓடு. இதுவே பூஜைப் பொருளாகக் கருதப் படுகிறது.
பொதுவாக சங்குகள் இரண்டு வகைப்படும்.
1. வலம்புரி சங்கு, 2. இடம்புரி சங்கு.
இதை எளிதாக அடையாளம் காண இடது கையால் பிடித்துக் கொண்டு ஊதுவதற்கு வசதியாக அமைந்திருப்பது வலம்புரி சங்கு கும்.
வலது கையால் பிடித்து ஊதும் அமைப்பில் உள்ளது இடம்புரி சங்கு.
லட்சம் இடம்புரி சங்குகள் கிடைத்தால் ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும். மிக அரிதாக வலம்புரி சங்கு கிடைக்கிறது.

மனிதன் பிறந்தவுடன் சங்கில் பால், மருந்து முதலியவைகளை ஊட்டுவதே மரபாகும். இறந்த பிறகு சங்கு ஊதுவதன் மூலம் இறந்தவரின் ஆத்மா ஸ்வர்க்கம் அடையும் என்றும் நம்பப்படுகின்றது.
சங்கிலிருந்து எழும் ஒலி பிரணவமாகிய ஓங்கார ஒலி.
மருத்துவத் துறையிலும் சங்கை இழைத்து தேன் முதலியவற்றுடன்,  ளிக்க பல நோய்களை தீர்க்கும் என்கின்றது வைத்ய சாஸ்திரம்.
சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டிற்கு அருகாமையில் உள்ள திருக்கழுக்குன்றம் எனும் ஸ்தலத்தில் உள்ள சங்கு தீர்த்தம் எனும் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு கிடைப்பதாகவும், அவற்றை ஆலயத்தில் சேகரித்து வைப்பதாகவும் ஆலயக் குறிப்புகள் தெரியப்படுத்துகின்றன. (கடலில் சங்கு கிடைப்பது வழக்கம். ஆனால், குளத்தில் சங்கு கிடைப்பது அரிதிலும் அரிதானது)
***
நவக்ரஹ நாயகர்களில் ஒருவரான சந்திரன் மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாகவும் (சந்த்ரமா மனஸோ ஜாத: - புருஷ ஸூக்தம்), பாற்கடல் கடைந்த போது தோன்றியதாகவும் (சந்த்ர ஸஹோதரி ஹேமமயே - பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மியுடன் பிறந்தவர் - லக்ஷ்மி ஸ்தோத்ரம்) அறியமுடிகின்றது.
பெரும் தவம் செய்து கிரஹ பதவி பெற்றவர் சந்திர பகவான்.
சந்திரனுக்கு, தக்ஷ பிரஜாபதி எனும் மஹரிஷி, தன் குழந்தைகளான நக்ஷத்திர பதவி பெற்ற அஸ்வினி முதல் ரேவதி வரையிலான - 27 பேரையும் மணம் முடித்து வைத்தார்.
சந்திரன், 27 நக்ஷத்திர பெண்களில் கிருத்திகை மற்றும் ரோஹிணி மங்கையர்களிடம் மட்டும் அதிக அன்பு பாராட்டுவதைப் பொறுக்காத மற்ற நக்ஷத்திர பெண்கள், தந்தையாகிய தக்ஷ பிரஜாபதியிடம் முறையிட, கோபம் கொண்ட தக்ஷன் தன் தவ வலிமையை உபயோகித்து, சந்திரன் ஒவ்வொரு நாளும் தேயட்டும் என்று சாபமிட்டார்.
அவ்வாறே சந்திரனும் முழுமையாக தேய்ந்து போனான். (அ - இல்லை, மா - சந்திரன், வஸ்யை - இருப்பது ; சந்திரன் இருப்பது இல்லை, சந்திரன் இல்லாத தினமே அமாவாஸ்யை).
தன் ஒளி முற்றிலும் குன்றிய சந்திரன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ய, சந்திரனின் தவத்திற்கு மனமிரங்கிய சிவன், அவனைத் தன் சடாமுடியில் வைத்து ஆறுதல் கூறினார். (மாகேஸ்வர மூர்த்தங்கள் எனும் சிவபெருமானின் 25 வடிவங்களில் ஒன்று சந்திரசேகர மூர்த்தி).
சந்திரன் தனது குளிர்ந்த தன்மையினால், தன்னிடமிருந்து பெருகும் அமிர்த தாரையினால் சிவனுக்கு அபிஷேகம் செய்தான். இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான் அவனை வாழ்த்தி, நாளும் நீ வளர்ந்து பூரணமாவாய் என்று வரம் அளித்தார். (பூரணம் - முழுமை. பூர்ணிமா - பௌர்ணமி - முழு சந்திரன் உள்ள நாள்).
(சந்திரகாந்தக் கல் - இந்தக் கல்லில் இருந்து தானாகவே நீர் சுரக்கும். இதுவும் சந்திரனின் அம்சமாகவே கொண்டாடப்படுகின்றது. ஆனால், கிடைப்பதற்கு மிக மிக அரிதானது)
ஆக, சந்திரன் சிவபெருமானை வழிபட்டே வளர்ச்சி பெற்றான்.

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம்.
சூர்யாக்னி, கார்த்திகை அக்னி, அங்காரக அக்னி மூன்றும் சேர்ந்த நாளில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகின்றது. (இதற்கு முந்தைய பதிவான கார்த்திகை தீபம் * சொக்கப்பனை காணவும். அல்லது இங்கே க்ளிக் செய்யவும்).
கார்த்திகை மாதம் முழுக்க சிவபெருமானை தீப ஒளியாலேயே குளிப்பாட்ட வேண்டும் என்று சிவாகம சாஸ்திரங்கள் கூறுகின்றன (ஒவ்வொரு மாத சிவ அபிஷேகம் பற்றி காண அன்னாபிஷேகம் பதிவைக் காணவும் அல்லது இங்கே க்ளிக் செய்யவும்).

கார்த்திகை மாதத்தில் தீப ஒளியால் ஏற்படும் வெப்பத்தை சமன் செய்யவும், சிவரூபத்தை குளிர வைக்கவும் சங்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.

கடலில் இருந்து கிடைக்கும் சங்கு, பாற்கடலில் இருந்து தோன்றிய சந்திரனின் அம்சமாகப் போற்றப்படுகின்றது.
சங்கினில் நிரப்படும் தீர்த்தம் மேலும் குளிர்ந்து, அதைக் கொண்டு அபிஷேகம் செய்கையில் சிவபெருமான் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு வரம் அளித்ததைப் போல, பக்தர்களுக்கு என்றும் வளமான வாழ்க்கையை அளிப்பார் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமை சந்திர பகவானுக்கு மிக உரியது.

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம் என அழைக்கப்படும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக (பலமிழந்து) அமைவார்.

கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து
சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய
ஸோமவாரம் எனும் திங்கட்கிழமைகளில்,
சந்திர அம்சமான சங்குகளுக்கு பூஜை செய்து,
சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது,
சந்திரன் பலம் பெற்று வளர்ந்ததைப் போல,
நம் வாழ்க்கையையும் நல்வளங்கள் அனைத்தும் பெருகும்.

சந்திரன் இன்பங்களுக்கு அதிபதியாக விளங்குபவர். ஸோமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர். ஔஷதம் எனும் மருந்துப் பொருட்களுக்கும், மூலிகைகளுக்கும் அதிபதியாக விளங்குபவர்.

சந்திர அம்சமான சங்கு கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் அதைக் காண்பதும், எல்லையற்ற இன்பங்களையும், நோயற்ற நல்வாழ்க்கையையும் அருளும்.

சந்திரனுக்கு சுய ஒளி இல்லை என்றும் சூரியனின் யிரக்கணக்கான கிரணங்களுள் ஒன்றான சுஷ்முனா அல்லது சுஷ்மா எனும் ஒளிக்கீற்றினால் சந்திரன் ஒளிபெறுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆகையினால், சந்திர அம்சம் கொண்ட சங்கிற்கு, பூஜைகளின் போது, சூர்யனின் காயத்ரி மந்திரத்தையேச் சொல்லி பூஜிக்க வேண்டும் என்ற நியதியையும் சாஸ்திரங்கள் வகுக்கின்றன.

சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்து ஸோமவாரம் எனும் கார்த்திகை மாதத் திங்கட் கிழமைகளிலும், சங்கு அபிஷேகம் காணப் பெறுவது பெரும் பேற்றினை அருளக் கூடியது.
சங்கு அபிஷேகம் காண்போம் ! சங்கடங்கள் நீங்கப் பெறுவோம் !!



- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் நடராஜர் லய டிரஸ்டி & பூஜை
- mail : yanthralaya@yahoo.co.in, yanthralaya@gmail.com
- cell : 94434 79572.

Tuesday, November 16, 2010

கார்த்திகை தீபம் * சொக்கப்பனை

கார்த்திகை தீபம் * சொக்கப்பனை * 

06.12.2022 *  திருவண்ணாமலை தீபம்
07.12.2022 *  ஸர்வ ஆலய தீபம்

உலகமும் உயிர்களும் தோன்ற முழு முதற்காரணம் அக்னி தான் என ஆன்மீகமும், விஞ்ஞானமும் ஒத்துக் கொள்கின்றது.
"அக்னிர் ஆப:" உபநிஷதங்கள் உரைக்கும் வார்த்தை. ஆகாசம் எனும் பரந்த பால் வெளியில் இருந்து அக்னி தோன்றிய பிறகு தான் நீர் தோன்றியது. நீரிலிருந்து தான் உயிர்கள் தோன்றின.
இதே கருத்தை விஞ்ஞானமும் ஏற்கின்றது.
பெருவெடிப்பு (big bang) நடந்த பிறகு, ஒரு விசையிலிருந்து வெளியேறிய வாயுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி (மைய ஈர்ப்பு & விலகல் விசையால்) நெருப்புக் கோளமாகி, காலப் போக்கில் குளிர்ந்து கோள்கள் ஆகின. குளிர்ந்ததால் ஏற்பட்ட நீரிலிருந்துதான் ஒரு செல் உயிரினம் தோன்றி, பரிணாம வளர்ச்சி அடைந்து தற்போது மனிதப் பிறவி வரை வந்திருக்கின்றது.
ஆக, ஆதி காரணம் அக்னி எனும் உஷ்ணம் தான். பெருவெடிப்பின் தாக்கம் ஒவ்வொரு அணுவிலும் உள்ளது. உயிர்கள் அனைத்தும் உஷ்ணத்தைத் தன்னுள் கொண்டிருக்கின்றது. அந்த உஷ்ணம் அணைந்தால் உயிர் மரிக்கின்றது.
அகச்சிவப்புக் கதிர் (infra red camera) காமிரா கொண்டு பார்த்தால், உயிருள்ளவை அனைத்தும் ஒளிர்ந்து தெரியும். ஏனெனில், ஒவ்வொரு உயிர் கொண்ட உடலில் இருந்தும் வெளியேறும் உஷ்ணம் தான் அகச்சிவப்புக் கதிர் காமிராவில் பதிவாகின்றது.
ஆதி மந்திரமும், பழமையான வேதமும் ஆகிய ரிக் வேதத்தின் முதல் வார்த்தையே அக்னி என்ற வார்த்தை கொண்டே ஆரம்பிக்கின்றது. "அக்னிமீளே புரோஹிதம்".
வேதங்கள் நான்கும் அக்னியை பெரும்பான்மையான மந்திரங்களால் போற்றுகின்றன. ஆதி மனிதனின் முதல் கண்டுபிடிப்பு wheel எனும் உருளை தான் என்றாலும், அக்னியை மனிதன் கையாளத் தெரிந்தபின் தான் மனித வாழ்க்கை மென்மேலும் மேம்பட்டது.
மனிதன் முதலில் கண்டு பயம் கொண்டது இயற்கை நிகழ்வுகளைப் பார்த்து தான். அக்னியைக் கண்டு பயந்து பிறகு அதை எப்படி உருவாக்குவது என்றும் கற்றுக் கொண்டான். நெருப்பைப் பாதுகாப்பதே அக்காலத்து மனிதர்களுக்கு பெரும் வேலையாக இருந்தது. அதையே ஆராதனையும் செய்து பெரும் மதிப்பும் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
அக்னி வழிபாடே ஆதி வழிபாடு. அக்னி சுத்தமானது.
ஹோம அக்னி சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யவும் கூடியது. காற்றிலிருக்கும் கெட்ட வாயுக்களை அகற்றக் கூடியது. ஹோமம் செய்வதால் உண்டாகும் அக்னி குளோரின் போன்ற கெட்ட வாயுக்களை மேல் தள்ளக் கூடியது.
ஒவ்வொரு மனிதருள்ளும் ஒரு அக்னி இருக்கின்றது. உயிரின் உள்ளுக்குள் இருக்கும் அக்னியை மென்மேலும் தூய்மையாக்கி இறைநிலை அடைய முடியும் என்று யோக சாஸ்திரங்கள் வழிகாட்டுகின்றன.
வாழ்வினங்களுக்கு அக்னியே உயிர் போன்றது போல, இந்து மதத்திற்கு உயிர் போன்றது அக்னி வழிபாடு.
ஆலயத்தில் தீபம் ஏற்றுவது, ஹோமம் செய்வது, தீமிதி செய்வது, தெய்வங்களுக்கான தீப ஆராதனை செய்வது என்று நமது ஆன்மீக வாழ்க்கையில் அக்னி மிக முக்கியம் இடம்பெறுகின்றது.
அக்னி வழிபாட்டை வேதங்கள் பல விதங்களில் போற்றுகின்றன.
அதே போல், பண்டைய தமிழ் இலக்கியங்களும் தீப வழிபாட்டினை போற்றுகின்றன.
தமிழ்த் திருமுறைகள் அனைத்தும் ஒரே ஒரு கருத்தை அடிக்கடி சொல்கின்றன. அது இறைவன் ஜோதி வடிவானவன். ('சொற்றுணை வேதியன் சோதி வடிவானவன்', 'அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்')
வைணவ பிரபந்தங்களும் தீப வழிபாட்டைப் போற்றுகின்றன. ('வையந்தகளியா வார்கடலே நெய்யாக')
அனைத்து தேவர்களும், ரிஷிகளும், உயிரினங்களும் தீப வடிவில் (ஷோடச உபசார தீபங்கள்) வழிபாடு செய்வதாகக் கருதிதான் தெய்வங்களுக்கான தீப ஆராதனை நடக்கின்றது.
அக்னி வழிபாட்டில் மிக எளிமையானதும், பெரும் புண்ணியம் தருவதும் ஆவது தீப வழிபாடு.
ஆகவே தான் ஆலயங்களில் தீபம் ஏற்றுவது பெரும் புண்ணியத்தினையும், முக்தியையும் நல்குவதாக புராணங்கள் பகர்கின்றன.
பிரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடி காண முடியாத ஒரு பெரும் சோதியைத் தேடியதாகவும், சிவபெருமான் - தானே அந்த ஜோதி என்று பிரம்ம விஷ்ணுக்களுக்கு காட்சி அளித்ததாகவும் லிங்க புராணம் கூறுகின்றது.
ஒரு சமயம், சிவாலயம் ஒன்றில், அங்குள்ள எலி ஒன்று தன்னையும் அறியாமல் அங்குள்ள தீபவிளக்கில் திரியை மேலும் தீண்டி ஜோதியைப் பெரிதாக்குகின்றது.
இதன் பயனாகத்தான், அந்த எலி அடுத்தப் பிறவியில் மஹா பலி சக்ரவர்த்தியானதாகவும், பெருமாளின் பாதத்தால் முக்தி அடைந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
தான் என்ன செய்கின்றோம் என்பதையே அறியாத எலி ஆலய தீபத்தைச் சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்ததால் முக்தி அடைந்தது என்றால், மனதில் தெய்வ நம்பிக்கையுடன் ஆலயத்தில் ஏற்றச் செய்யும் விளக்கிற்கு மனிதர்களுக்கு பெரும் பாக்கியத்தைத் தரக்கூடியதாகும்.
தீபம் ஏற்றுவதால் அக்ஞான இருள் நீங்கி, மெய்ஞான வெளிச்சம் கிடைக்கின்றது. இதுவே உயிர்களுக்குப் பேரானந்தத்தைத் தரக்கூடியது.
தீபவழிபாடு பற்றி சங்க இலக்கியங்களில் இருந்து திருஞான சம்பந்தர் தேவாரம் வரை பல குறிப்புகள் கிடைக்கின்றன.
"மைம்மிசை யின்றி மலைவிளக்குப் போலோங்கிசெம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள்" - என்று தொல்காப்பியம் புறத்திணையும்,
"வானம் ஊர்ந்த வளங்கொளி மண்டிலம்நெருப்பெனச்சிவந்த உருப்பு அவிர் அம்கட்டு - என்னும் ஒளவையார் கூற்றும் (அகநாநூறு),
'தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே' என்று, மாணிக்கவாசகரின் மணிவாசகமும்,
ஒளிவளர் விளக்கே எனும் ஒன்பதாம் திருமுறையும்,
'கார்த்திகை விளக்கீடு காணாதே போதியோ' என்று திருஞானசம்பந்தர் தேவாரமும் தீப வழிபாட்டினைப் போற்றுகின்றன.
தீப வழிபாடு தமிழர்களின் வழிபாடு. அது பண்டைய காலத்திலிருந்து தொடர்ந்து வருகின்றது.
கார்த்திகை மாதம், கார்த்திகை (பெளர்ணமி) நக்ஷத்திரம் கூடிய நன்னாளின் மாலை நேரத்தில் வீடுகளில் தீப விளக்குகள் வரிசையாக ஏற்றிக் கொண்டாடப்படும்.
இந்த நன்னாளின் முக்கியத்துவத்தைக் காண்போம்.

கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசிப்பார்.
சூர்யன் அக்னிக் கோளம்.
விருச்சிக ராசி செவ்வாய் பகவானுக்கு உரியது. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்.
கிருத்திகை நக்ஷத்திரத்திற்கு உரிய தெய்வம் தெய்வம் அக்னி பகவான்.
சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பஞ்சபூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலம். அந்த ஆலயத்தில் கார்த்திகை தீபம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் கொண்டாடப்படுகின்றது. (அன்றைய தினத்தில் திருவண்ணாமலை க்ஷேத்ரத்தில் சிவனும் சக்தியும் இணைந்த வடிவாகிய அர்த்தநாரீஸ்வரருக்கு தீபம் ஏற்றிய பிறகு தான் மலை மேல் தீபம் ஏற்றப்படும்).
ஏனைய சிவாலயங்களிலும், முருகப்பெருமான் குடிகொண்ட ஆலயங்களிலும் - அந்தந்த ஆலய ஆகம மற்றும் காலம் காலமாக கடைபிடிக்கும்  வரைமுறைப்படி - ஸர்வாலய தீபமாகக் கொண்டாடப்படுகின்றது.
கார்த்திகை தீபத்தினை ஏற்றுவதும், காண்பதும் நம் வாழ்வில் ஏற்படும் இருள் எனும் துன்பங்களை நீக்கி, மகிழ்ச்சி எனும் ஒளிவெள்ளத்தை அளிக்கும் என்பது திண்ணம்.

சொக்கப்பனை :
திருக்கார்த்திகை தினத்தில் சொக்கப்பனை ஏற்றுவது வழக்கம்.
சொக்கப்பனை என்பது சொர்க்கப் பனை, சுவர்க்கப் பனை, சொக்கர் (சிவபெருமான்) பனை என்பனவற்றின் திரிபாக அறிஞர்கள் கூறுவார்கள்.
திரிபுரஸம்ஹாரத்தினையும், அடிமுடி தெரியாவண்ணம் பிரம்ம விஷ்ணுக்களுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக நம்பப்படுகின்றது.
சொக்கப்பனை - பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது.

வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது.

பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.
நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை பற்றிய முந்தைய பதிவில் மேலும் பல விஷயங்கள் தெரிவிக்க உள்ளன என்றாலும், தீபத் திருநாள் சம்பந்தமாக ஒரு அருமையான கருத்து அதில் அமைந்துள்ளது.
கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரம் அன்று புதுமணமகளைக் கொண்டு, புது தீபம் ஏற்றச் சொல்வதும், பால் காய்ச்சச் செய்வதும், மணல் படாத கார் அரிசியைக் கொண்டு செய்யப்படும் அவல் - வெல்ல இனிப்பைச் செய்து நிவேதனம் செய்வதும், தீபங்களை வீடுகளிலும், தெருக்களிலும் ஏற்றச் செய்வதும் பற்றி அகச் செய்யுள்களில் நக்கீரனார் குறிப்பிடுகின்றார்.
கார்த்திகை தினத்தன்று அவல் பொரி இனிப்பு செய்து நிவேதனம் செய்வது காலகாலமாக நடந்துவருவதை இந்தப் பழங்காலச் செய்யுள் அறிவிக்கின்றது.
தீபம் ஏற்றி சிவபதம் அடைந்தவர்களை பெரியபுராணம் (கணம்புல்ல நாயனார்) அற்புதமாக விளக்குகின்றது.
தீபம் ஏற்றுவோம் ! தீவினைகள் நீங்கப் பெறுவோம் !!
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜை
- செல் : 94434 79572, 936260299
www.facebook.com/deekshidhar
http://natarajadeekshidhar.blogspot.com

Sunday, November 7, 2010

ஸ்கந்த சஷ்டி

திருமுருகாற்றுப்படை * ஸ்கந்த சஷ்டி (02.11.2019 - சனிக் கிழமை)


முருகன். அழகன். தமிழ்க் கடவுள். குமரன். ஆறுமுகன். ஸ்கந்தன்.
முருகனையே முழு முதற்கடவுளாக வணங்க செய்யும் வகை கௌமாரம் ஆகும்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை அக்னி பகவான் கங்கையில் விட, கங்கை சரவணப்பொய்கையில் விட, அந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக, அந்த ஆறு குழந்தைகளுக்கும் கிருத்திகை முதலான நக்ஷத்ர தேவதைகள் பாலூட்ட, பார்வதி தேவியானவள் அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஸ்கந்தர் ஆக்கினள். (ஸ்கந்தம் என்பதற்கு சேர்த்தல் என்று பொருள்).

முருகப்பெருமான் ஆறுமுகமும், பன்னிரு தோள்களும் கொண்டு, படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாவிடம் பிரணவத்திற்குப் பொருள் கேட்க, அவர் அதை அறியாததால், பிரம்மாவை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார்.

சிவபெருமான், முருகப் பெருமானிடம் பிரணவப் பொருள் கேட்டு உணர்ந்தார். பிரணவத்தை தந்தைக்கே உபதேசம் செய்தார். முருகப்பெருமான், அறிவிற்கும் - வயதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உலகிற்கு உணர்த்தியவர்.
வேத மந்திரங்களில் ஓம் எனத் தொடங்கி ஓம் என முடியுமாறு இரண்டு தெய்வங்களுக்கு மட்டுமே அமைந்துள்ளன.

ஒன்று, 'ஓம் ஈசான .... ஸதாசிவோம்' என்று அமைந்த, ஓங்காரத்தின் விளக்கத்தை முருகப் பெருமானிடமிருந்து கேட்டறிந்த சிவபெருமானுக்கு உரியது.
மற்றொன்று, 'ஓம் குமாரஸ்சித் பிதரம் .... ஸுப்ரஹ்மண்யோம்' என்று அமைந்த பிரணவத்தை உபதேசித்த முருகப் பெருமானுக்கு உரியது.
தேவர்களை வருத்திய சூரன் எனும் அரக்கனை தன் படைகள் கொண்டு வதம் செய்தவர். அதுவே சூரஸம்ஹாரம். ஐப்பசி மாத வளர்பிறை ஆறாவது தினமாகிய ஸ்கந்த சஷ்டி அன்று முருகப் பெருமானுக்கு மிக உகந்த நன்னாள். அசுரரை வதம் செய்த, எதிர்ப்புகளை நீக்கிய, மகிழ்வை அளித்த பொன்னாள். முருகனை வழிபட்டால் முன்வினைகள் நீங்கி முழுமையான வாழ்வு கிட்டும்.

தமிழ்க் கடவுளாக போற்றப்படுபவர் முருகப் பெருமான். தமிழ்ச் சங்கத்தினை காத்தருளிய கடவுள். காலக்கணக்கின் படி, நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் நூல்களை வகைப்படுத்திப் பார்த்தோமானால், சங்க இலக்கியங்களே முதல் வரிசையில் இருக்கின்றது. (சங்க இலக்கியங்களுக்கு முன்னதான - குமரிக்கண்டம், பஃறுளியாறு காலத்திய - இலக்கியங்கள் கடல் கொண்டதாக தமிழறிஞர்கள் கூறுகின்றனர்.)

சங்க இலக்கியங்களில் உள்ள அறநானூறு மற்றும் புறநானூறு போன்றவை காதல், வீரம், அறம் போன்றவற்றை இயம்பினாலும், தனிப்பட்ட முறையில் ஒரு தெய்வத்தினை போற்றி வழிபடும் வகையில் அமையவில்லை.

சங்க இலக்கியங்களுக்கு அடுத்தபடியாக, தமிழ் இலக்கிய கால வரிசையில் அமைவது பத்துப்பாட்டு எனும் தொகுப்பாகும்.
அவை,
1. திருமுருகாற்றுப்படை, 2.குறிஞ்சிப் பாட்டு, 3.மலைபடுகடாம், 4. மதுரைக் காஞ்சி, 5. முல்லைப்பாட்டு, 6. நெடுநல்வாடை, 7. பட்டினப் பாலை, 8. பெரும்பாணாற்றுப்படை, 9.பொருநராற்றுப்படை, 10.சிறுபாணாற்றுப்படை
தமிழன்னையின் நெற்றிப் பொட்டு போல அமைந்தது பத்துப்பாட்டில் முதன்மையானதாக அமைவது திருமுருகாற்றுப்படை ஆகும். இந்தப் பத்துப்பாட்டு தொகுப்பிற்கும் கடவுள் வாழ்த்து போலவும் அமைந்திருக்கின்றது.

நக்கீரர் இயற்றியது திருமுருகாற்றுப்படை. தமிழிலக்கியத்தின், முதல் தனிப்பட்ட தெய்வத்தினைப் போற்றி அமைந்த தன்னிகரற்ற திருமுருகாற்றுப்படை - முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளைப் போற்றிச் சொல்வதாக அமைந்தது.

தமிழிலக்கியத்தின் முதல் காவியமாக, தமிழ்க் கடவுளான முருகனைப் பற்றி அமைந்திருப்பது என்னே பொருத்தமாக அமைந்துள்ளது !

சங்க இலக்கியங்களில் மிக முக்கியமான இலக்கியமாக விளங்குவது ஆற்றுப்படை என்பதாகும். (ஆறு – வழி, படை - காட்டுதல் = தெய்வத்திடம் வழிகாட்டும் பாடல்கள், அதாவது தான் பெற்ற இன்பத்தை மற்றோரும் பெறச்செய்யல்).

தமிழ்க் கடவுளான முருகனின் அருள் பெற்ற ஒரு புலவன், கந்தனருள் பெற விரும்புபவருக்கு நல்வழி காட்டும் வகையில் அமைந்தது.

திருப்பரங்குன்றம், பழமுதிர்ச் சோலை தலங்களின் இயற்கை வளம், முருகன் உருவச் சிறப்பு, ஊர்திகள், மாலைகள், கொடிகள் பற்றிய செய்திகளுடன் அமைந்துள்ளது. திருமுருகாற்றுப்படை, சுவாமிமலை முருகன் ஆலயத்தில் அர்ச்சகர் ஈரமான ஆடையுடன் மிக ஆசாரமாக பூசைகள் புரியும், வரலாற்றுச் செய்திகளைக் கூறுகிறது.

இந்நூலின் சிறப்பை "பத்துப்பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவரோ, எத்துணையும் பொருட்கிசையும், இலக்கணமில் கற்பனையே" என மனோன்மணியமும், "மூத்தோர் பாடியருள் பத்துப்பாட்டு" என தமிழ் விடு தூதும் போற்றுகின்றன.

பண்டை இலக்கியமான இதில், திருவேரகம், பழமுதிர்ச்சோலை போன்ற இடங்களில் உள்ள ஆலயங்கள் போற்றப் படுகின்றன. தமிழர்களின் தொன்று தொட்ட ஆன்மீக உணர்வை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது.

பழங்கால இலக்கியப் புலவரான நக்கீரர் ஒரு சமயம் தவத்திலிருந்த போது, அருகிலிருக்கும் சுனையிலிருந்து சலசலப்பு எழுந்தது. தவம் கலைந்து பார்த்தபோது, சுனையில் ஒரு வித்தியாசமான படைப்பாக, பறவையும், மீனும் இணைந்த பிணைப்பாக உருவைக்கண்டார். மீன் தான் வாழ, பறவையை நீருக்குள் இழுத்தது; பறவையோ தான் வாழ வானில் பறக்க சிறகடித்தது. இரண்டும் வெவ்வேறு வாழ்விடங்களைக் கொண்டவை. ஒன்று வாழ இன்னொன்று மடிய வேண்டிய படைப்பை கடவுள் படைத்தானே என்று எண்ணி, தவத்தை சிறிது மறந்தார்.

உடனே ஒரு பூதம், இவர் முன் தோன்றி, "இதைப் படைத்தது நானே, சிவ வழிபாட்டில் மனம் வேறானவர்கள் ஆயிரம் பேர்களை சிறைப் பிடித்து பலி கொடுக்கும் முயற்சியில் நீங்கள் ஆயிரமாவது மனிதர்" எனக் கூறி, நக்கீரரை சிறையில் அடைத்தது.

நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாட, முருகனின் வேல் வந்து இவருடன் சிறையிலிருந்த தவஞானியரையும் விடுவித்தது என்று புறப்பாடல் ஒன்று திருமுருகாற்றுப்படை தோன்றிய வரலாறைக் குறிக்கிறது.

திருமுருகாற்றுப்படையை படிப்பதனால் அறுபடை வீடுகளிலுள்ள முருகப் பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும். (திருமுருகாற்றுப்படை படிக்கவும், அதன் அர்த்தம் தெரிய விரும்பவும் அன்பர்கள் கீழ்க்கண்ட லிங்க் சென்று அறிந்து கொள்ளலாம்.  http://kaumaram.com/tmpadai/tmpadai01u.html

முருகப் பெருமானின் முழு திருவிளையாடல்களையும் அறிவிப்பது கந்தபுராணம் ஆகும்.

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஆதிசைவ குலத் தென்றல் ஆகிய கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றியது.

சிவபெருமான் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு 'தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என்றும், 63 நாயன்மார்களின் வரலாற்றைப் புகழும் பெரியபுராணம் எழுத சேக்கிழாருக்கு 'உலகெலாம்' என்றும் முதல் அடியெடுத்துக் கொடுத்தது போல,
முருகப் பெருமான் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு 'திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்று முதல் அடி எடுத்துக் கொடுக்க, கந்தபுராணம் முழுதும் எழுதப்பட்டது.

கந்தபுராணத்தை அரங்கேற்றும் செய்யும் நேரத்தில், திகடசக்கரம் என்ற முதல் வார்த்தையே தவறானது என்று அரங்கில் உள்ள ஆன்றோர்கள் ஆட்சேபம் தெரிவிக்க, திகைத்த கச்சியப்பர், முருகப் பெருமானை உளமார பிரார்த்திக்க, முருகப் பெருமான் ஒரு வேதியவர் வடிவில் வந்து, வீரசோழியம் எனும் தமிழிலக்கண நூலில் இருந்து, திகடசக்கரம் எனும் வார்த்தைக்கு திகழ் + தச + கரம் என பொருள் உரைக்க கந்தபுராணம் அரங்கேற்றப்பட்டு, உலகம்  முழுவதும் பரவியது. (திகழ் தச கரம் கொண்டவர் சிவபெருமான். ஐந்து தலைகளும், பத்து கரங்களும் கொண்ட சிவபெருமானின் மைந்தனாம் கந்தனின் வரலாற்றை உரைப்பது கந்தபுராணம்)

முருகப் பெருமான் ஒரு வரப்ரஸாதி.

"சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்" எனும் வழக்கு மொழிக்கு - சஷ்டி தினத்தில் விரதம் இருந்து முருகனை வழிபடும் மங்கையருக்கு, அகப்பையாகிய கருப்பையில் கரு வளர்ந்து வம்சம் விளங்கும் என்பது தான் முழு அர்த்தமாக விளங்கும்.

காவடிச் சிந்து எனும் பாடல் வகை முருகப் பெருமானுக்காகவே அமைந்தது.
முருகனைத் துதித்த 'வள்ளி கணவன் பேரை' பாடலை https://www.youtube.com/watch?v=zdZiGrEcBq0 லிங்க் சென்று  கேட்கலாம்.

அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய அற்புதமான காவடி சிந்து ஆகிய சென்னிகுல நகர் வாசன் எனத் தொடங்கும் பாடலை https://www.youtube.com/watch?v=BOzaOxeRKdE லிங்க் சென்று கேட்கலாம்.

முருகனை தரிசித்தால் கிடைக்கும் பலனை விவரிக்கும், கவி குஞ்சரபாரதி இயற்றிய  வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீ முத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ் பாடலின் கடைசி பாடல் :

பங்கயம் திகழ் தகு சரவணைப் பொய்கை மூழ்கில் பவத்திருளை நீக்கி வைக்கும்
படியில் நின் கிரியை பிரதட்சிணம் செய்திடில் பாக்கியங்கள் வந்தடுக்கும்
துங்கமிகு நின் பாத சேவை செய்வோர் மனத்துயரங்கள் தனை அகற்றும்
துய்ய வெண்பொடி நுதலில் இட்டிடில் பிரபஞ்ச தோஷ சங்கைகள் பறக்கும்
தங்கு கிருத்திகை விரதம் உற்றவர்கள்பால் பிணிகள் சற்றும் அணுகாது காக்கும்
சஷ்டி விரதம் ஓம்பும் மலடிக்கு உன்னருள் புத்திர சந்ததி தனைக் கொடுக்கும்
மங்கல கல்யாண சுகுணங்கள் என் சொல்லுகேன் மோகவள்ளி குஞ்சரி மணாளா
வனசமலரயன் மதனையருள் சரச கோபால மருக சரவண முருகனே.
(இதன் ஆடியோ மிக விரைவில் இப்பக்கத்திலேயே வலையேற்ற உள்ளோம்.)

முருகன் திருவடியைப் போற்றுவோம்!

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
http://natarajadeekshidhar.blogsopt.in
- mail : yanthralaya@gmail.com
cell : 94434 79572, 93626 09299.
www.facebook.com/deekshidhar

Monday, November 1, 2010

அன்னதானம்

அன்னதானம்.
தானம்.
நம்மிடம் இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈந்து - கொடுப்பவரும், பெறுபவரும் மகிழ்ச்சி அடைவதால் ஏற்படும் - பெரும் புண்ணியம் பெறுவதற்கான புனிதச் செயல்.
தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம் என்று பொதுவாக மூன்று வகைப்படுத்தப்படுகின்ற தானங்களிலும்,
தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் சுமார் 42 வகை தானங்களிலும்,
மிக மிக உயர்ந்ததாகவும், உன்னதமானதாகவும், அனைவரும் செய்தே ஆகவேண்டிய தானமாகவும் கருதப்படுவது அன்னதானம் மட்டுமே ஆகும்.

உணவின்றி உயிரில்லை. உலகில்லை.
உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது.
வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும்.
மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும்.
ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும்.
ஆகையாலே பூரணமான தானம் - அன்னதானம் மட்டுமே ஆகும்.

எந்த ஒரு பெரும் வைபவத்திலும் இறுதியாக அமைவது அன்னதானம் மட்டுமே. வைபவத்தில், எந்த ஒரு குறையிருந்தாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் களைவது அன்னதானம் மட்டுமே ஆகும்.
உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.
அன்னதாதா சுகி பவ
(அன்னத்தை வழங்குபவர் சுகமாக வாழ்வார்) - என்ற மூதுரையும்,
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி
(திருக்குறள் - 226) என்ற திருக்குறளும் அன்னதானத்தின் அருமைகளை அறிவிக்கின்றன.
அன்னதானத்தின் பெருமைகளை அளவிடமுடியாது. அதைப்பற்றி அறிவிக்க அனேகம் உள்ளன.

தானம் செய்வதில் பெரும் பெயர் அடைந்தவன் - கர்ணன்.
மஹாபாரத இதிகாசத்தில் கர்ணன் - அவன் செய்த கொடையாலும், தர்மத்தாலும், தானத்தாலும் பெரும் பெயர் பெற்றான்.
கர்ணனுக்குப் பிறகு கொடையில்லை என்ற சொல்வழக்கே உண்டு. கர்ணனைப் போல் யாவரும் தானம் செய்தது கிடையாது. அவன் பெருமையை அனேக சம்பவங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.
ஒரு சமயம், கடும் மழையால் அகிலமே நனைந்திருக்கின்றது. அச்சமயம் பார்த்து வேதியர் ஒருவர் தான் செய்யவேண்டிய ஒரு பெரும் யாகத்திற்காக, காய்ந்த ஸமித்துகளும், மரங்களும் பெற வேண்டி, அனைவரிடமும் வேண்டுகின்றார். சமையலுக்குக் கூட விறகு இல்லாத நிலையில் அனைவரும் தங்களிடம் இல்லை என்று கைவிரித்து விடுகின்றனர். இறுதியாக கர்ணனிடம் வந்து யாசிக்கின்றார்.
அவர் கர்ணனிடமிருந்து பெரும் அளவில் காய்ந்த மரங்களை யாகங்களுக்காக மனமகிழ்வுடன் பெற்றுச் செல்கின்றார்.
எங்கிருந்து இந்த அளவுக்குக் காய்ந்த மரங்கள் கிடைத்தன என்று அனைவரும் வியந்தனர்.

அரண்மனையின் உள்ளே சென்று பார்த்தபோது தான் தெரிந்தது, தனது மணிமண்டபத்தினை இடித்து, மண்டபத்தினைத் தாங்கிக் கொண்டிருந்த உத்தரங்களையும், தூண்களையும் (மண்டபத்தின் உள்ளே இருக்கும் தூண்களும், உத்தரங்களும் காய்ந்துதானே இருக்கும்) வெட்டிக் கொடுத்திருக்கின்றான் கர்ணன்.
அந்த அளவுக்கு கொடுப்பதிலே வள்ளல் கர்ணன். வறுமைக்கே வறுமையை வைத்தவன். இடது கை கொடுப்பதை வலது கை அறியாவண்ணம் (இடக்கையில் இருப்பதை வலக்கையில் கொண்டு வரும் நேரம் கூட, தானத்தின் தன்மையை மாற்றிவிடும். ஆகையால், இடக்கையில் எடுத்ததை அக்கையாலேயே வழங்கும் தன்மை கொண்டவன்) கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரத்தை உடையவன்.

கர்ணனின் கொடைக்கு மற்றும் ஓர் உதாரணம்.
மஹாபாரதப் போரில் கர்ணனின் மார்பை அம்புகளால் துளைத்தெடுக்கின்றான் அர்ஜுனன். ஆயினும் கர்ணனின் உயிர் பிரியவில்லை. அவன் செய்த தர்மம் அவனின் தலையைக் காக்கின்றது. பகவான் கிருஷ்ணர் ஒரு வேதியர் வடிவம் கொண்டு கர்ணனிடம், இதுவரை கர்ணன் செய்த புண்ணியத்தை அனைத்தையும் தானமாக வேண்டுகின்றார்.
இதுவரை செய்த தானத்தைக் கொடுப்பதால் அதற்கென்று ஒரு புண்ணியம் வருமே! அந்தப் புண்ணியத்தையும் தானமாக கொடுக்கின்றார் கர்ணன்.
எப்படி?
வேதியர் வடிவம் கொண்ட கிருஷ்ணருக்கு 'இப்பிறப்பில் யான் செய்புண்ணியம் அனைத்தையும் தருகின்றேன்' என்று உரைக்கின்றார்.
செய்புண்ணியம் எனும் வார்த்தை - ஒரு வினைத் தொகை. வினைத் தொகை முக்காலத்தையும் குறிக்கக் கூடியது.
உதாரணமாக ஒரு வினைத்தொகை வார்த்தை : ஊறுகாய். ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறப்போகின்ற காய் என்று அர்த்தம் அமையும்.
அது போல - செய்புண்ணியம் எனும் வார்த்தை - இதுவரை செய்த புண்ணியம், இப்பொழுது செய்கின்ற புண்ணியம், எதிர்வரப் போகின்ற புண்ணியம் என அனைத்தையும் தானமாக கண்ணனுக்கு அளிக்கின்றான் கர்ணன்.
கர்ணனுக்கு அளப்பரிய வகையில் தானம் செய்த பெரும் பெயர் கிடைக்கின்றது. தானம் பெற்றவுடன் வேதியர், தன் சுய உருக்கொண்டு, கர்ணனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டுகின்றார்.
கர்ணன் மடிகின்றான்.
இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கின்றான் கர்ணன். எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்ற உணர்வே கிடையந்தாயிற்றே!
தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு தோன்றுகின்றார்.
கர்ணனிடம் நாரதர், பசி நீங்கவேண்டுமானால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் என்கிறார். அதன்படி, ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால், பசி நீங்குகின்றது. ஆனால், மறுபடிப் பசியெடுக்கின்றது.
மறுபடியும் நாரதரை கர்ணன் நினைக்க, அவர் தோன்றுகின்றார். அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும், ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார்.
அதற்கு, நாரதர் உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய், ஆனால், ஒரே ஒரு தானத்தைத் தவிர. அது அன்னதானம். அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால், இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது. உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் உன்னிடமிருந்து தானம் பெற்றவர் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்றிருக்கின்றாய். நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானத்திற்கான காரணியாக விளங்கிய உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது. ஆகையால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது, சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார்.
அன்னதானம் செய்யாமலேயே, அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால், அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும்.
கர்ணனுக்கு ஒரு எண்ணம் தோன்றுகின்றது. அன்னதானத்தையும் அளப்பரிய வகையில் செய்யத் தோன்றுகின்றது. பரம்பொருளிடம் தன் எண்ணத்தை முன்வைக்கின்றான் கர்ணன்.
....
கி.பி. எட்டாம் நூற்றாண்டு.
மாமல்லபுரத்தைக் கட்டிய நரசிம்ம பல்லவன் காலம்.
நரசிம்ம பல்லவனின் படைத்தளபதி பரஞ்சோதி. மகா வீரர்.
பரஞ்சோதி படைக் கலன்களைக் கையாள்வதில் பெரும் தேர்ச்சி பெற்றிருந்தார். அதேசமயம் சிவத் தொண்டிலும், சிவனடியார்க்குத் தொண்டு செய்வதிலும் மனம் அதிகமாகச் சென்றது.
நரசிம்ம பல்லவனுக்காக, வடபுலம் சென்று வாதாபி எனும் நகரைக் கொளுத்தி வெற்றி வாகை சூடி வருகின்றார்.
பரஞ்சோதி படைத் தளபதியாக இருந்தாலும், ஆழ்மனதில் சிவத்தொண்டு செய்யும் மனப்பாங்கே அதிகமாக இருந்தது.
வெற்றிச் செய்தியை நரசிம்ம பல்லவனுக்குச் சொல்லிய அதே நேரம் தன் உள்ளக் கிடக்கையாகிய சிவத்தொண்டு புரிவதே தன் விருப்பம் என்று சொல்கின்றார்.
மனம் மகிழ்ந்த பல்லவன் பரஞ்சோதியின் விருப்பத்திற்கிணங்க, அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தந்தான்.
திருவெண்காட்டு நங்கை எனும் தன் மனையாளுடன் இல்லறம் நடத்திவந்தார். சீராளன் எனும் செல்வ மகன் பிறந்தான். மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
சிவனடியார்களில் தான் ஒரு சிறு அடியவர் என அறிவித்துக் கொண்டமையால் அவர் சிறுத்தொண்டர் என அன்புடன் அழைக்கப்பட்டார்.
ஒவ்வொரு நாளும் சிவனடியாருக்கு அன்னதானம் இட்ட பிறகே உண்ணும் வழக்கம் கொண்டு, அந்த சிவப் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார். அப்பணியை குடும்பமே உவந்து செய்து வந்தது.
அவரின் சிவத்தொண்டினை உலகறியச் செய்ய சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.
ஒரு நாள், வைரவர் (வடதேசத்திலிருந்து வந்த காபாலிகர். சிவச் சின்னங்களோடு, கையில் மண்டையோடு, சூலாயுதம் தரித்து) வேடம் கொண்டு, சிறுத்தொண்டர் இல்லம் சென்றார்.
அச்சமயம், சிறுத்தொண்டர் சிவனடியார் எவரேனும் இருக்கின்றாரா என்று பார்த்து அழைத்து வர வெளியில் சென்றிருக்கின்றார்.
வைரவர் வேடம் கொண்ட சிவமூர்த்தியைக் கண்ட சிறுத்தொண்டரின் மனைவி ஆவலுடன் அன்னமிட அழைக்கின்றார்.
அவரோ, ஆண்கள் இல்லாத வீட்டில் நுழையமாட்டேன், அருகில் (உள்ள ஆலயமாகிய திருச்செங்காட்டங்குடியின் ஸ்தல விருக்ஷமாகிய) அத்தி மரத்தின் கீழ் அமர்கின்றேன், உன் கணவர் வந்தால் வரச்சொல் என்று சொல்லிச் சென்றுவிட்டார்.
சிவனடியார் எவரையும் காணாமல் மனம் நொந்து வருகின்ற கணவரைக் கண்டு, அவரின் மனைவி நடந்ததைச் சொல்ல, சிறுத்தொண்டரோ மனம் மிக மகிழ்ந்து அத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருந்த வைரவர் கோலம் கொண்ட வடகயிலை நாதனின் பாதத்தில் விழுந்து, அன்புடன் அடியவன் இல்லம் வந்து அமுது கொண்டு, அருள்பாலிக்க அழைக்கின்றார்.
வைரவரோ, நான் கேட்கும் உணவை உன்னால் அளிக்க முடியாது. ஆகையால் உன் இல்லம் வரமுடியாது என்கின்றார்.
சிறுத்தொண்டர், தாங்கள் கேட்கும் உணவை மிக நிச்சயமாக அளிப்பேன் என்று வாக்குக் கொடுக்கின்றார்.
அனைவரும் அதிரும் வண்ணம், வைரவர், 'நான் ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் உணவு கொள்வேன். அந்த உணவு ஐந்து வயதுடைய, குடும்பத்திற்கு ஒரே வாரிசான ஆண் குழந்தையின் கறியை மட்டுமே சாப்பிடுவேன். அதுவும் அக்கறியை அக்குழந்தையின் அன்னை கால்களைப் பிடிக்க, தந்தை அரிவாளால் அரிந்து சமைக்க வேண்டும். இந்தச் செயலைச் செய்யும் போது எவர் கண்ணிலும் கண்ணீர் வரக்கூடாது. மனமகிழ்வுடன் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் தான் சாப்பிடுவேன்' என்கின்றார்.
எந்தக் குழந்தையின் தாய் தன் ஒரே மகனை வெட்டுப்படுவதைப் பார்க்க முடியும்? எந்தத் தந்தைதான் தன் ஒரே குழந்தையை வெட்ட முடியும்? அதுவும் அச்செயலை மனமகிழ்வுடன் எவர்தான் செய்ய முடியும்?
கலங்கிய நிலையில் வீட்டிற்கு வரும் கணவரை ஆவலுடன் கேட்கின்றார் அவரின் மனைவி. நடந்ததை விவரிக்கின்றார் சிறுத்தொண்டர். வேறு எவரிடமும் சென்று உங்கள் குழந்தையை வெட்டிக் கொடுங்கள் என்று கேட்க முடியாதே என்று வருந்துகின்றார்.
இருவரும் சேர்ந்து ஒரு முடிவெடுக்கின்றனர். தமது ஒரே குழந்தையை, ஆசையும் பாசமும் சேர்த்து வளர்த்துவரும், செல்வ மகனை, ஐந்து வயதுடைய சீராளனையே கறி சமைத்து அன்னமிட முடிவெடுக்கின்றனர்.
பாடசாலை சென்றிருந்த சீராளனை அழைத்துவருகின்றார் சிறுத்தொண்டர். ஏதுமறியாக் குழந்தை ஆசையுடன் தந்தையின் கழுத்தைக் கட்டி முத்தமிடுகின்றது. வீட்டிற்கு வந்தவுடன், குழந்தையைக் குளிப்பாட்டி, அழகு செய்து, அமரவைக்கின்றார் திருவெண்காட்டு நங்கை.
நங்கை கால் பிடிக்க, சிறுத்தொண்டர் குழந்தையை அரிவாளால் அரிந்து தர, குழந்தைக் கறி செய்கின்றனர்.
இதை அனைத்தையும் முடித்து வைரவரை அழைக்கின்றார்.
வைரவரும் சிறுத்தொண்டரின் இல்லம் வந்து அன்னமிடச் சொல்கின்றார். நங்கை அன்னத்துடன் குழந்தைக் கறியையும் கொண்டு வந்து பரிமாறுகின்றார்.
அப்போது வைரவர் தன்னுடன் அமர்ந்து சாப்பிட சிறுத்தொண்டரை அழைக்கின்றார். வைரவரின் மனம் கோணக் கூடாது என எண்ணி, அவர் அருகே அமர்கின்றார். சிறுத்தொண்டருக்கும் குழந்தைக் கறியுடன் உணவு பரிமாறப்படுகின்றது. தன் மகனின் கறியை தானே சாப்பிடவும் துணிகின்றார்.
வைரவர் மேற்கொண்டு, சிறுத்தொண்டரை நோக்கி, உனக்கு மகன் இருக்கின்றான் எனில் அவனையும் அழைத்து வந்து சாப்பிடச் சொல்லுங்கள் என்கின்றார்.
தன் மகனின் கறியைத் தான் சமைத்தோம் என்று சொன்னால், இறந்தவர் வீட்டில் வைரவர் சாப்பிட மாட்டாரோ என்று எண்ணி அஞ்சி, 'அவன் உதவான்' என்கின்றார்.
வைரவரோ, 'இல்லை இல்லை. அவன் வந்தால் தான் சாப்பிடுவேன்' என்கின்றார்.
மனம் கலங்கி நின்ற சிறுத்தொண்டரை நோக்கி, வைரவர், உங்கள் மகனை அழையுங்கள் என்கின்றார்.
நிலைதடுமாறி, வாசலில் நின்று 'சீராளா' என்கின்றார்.
மகன் எப்படி வரமுடியும்?
வைரவர் திருவெண்காட்டு நங்கையை நோக்கி, நீங்கள் சென்று அழையுங்கள் என்கின்றார்.
அவரும் தலைவாசல் வந்து 'சீராளா' என்கின்றார்.
அனைவரும் அதிசயக்கும் வகையில், சீராளன் பாடசாலையிலிருந்து வரும் நிலையில், 'அப்பா, அம்மா' என்று அழைத்தபடியே வர, பெற்றோர்கள் அவனை அப்படியே வாரியெடுத்து உச்சிமோர்ந்து, மகிழ்ந்து உள்ளே வர, அங்கே இருந்த உணவையும், வைரவரையும் காணவில்லை.
சிவனும் பார்வதியும் இடபாரூடராகக் காட்சி நல்கினார்கள்.
அனைவரும் நற்கதி பெற்றனர்.
.....
கர்ணனுக்கும், சிறுத்தொண்டருக்கும் என்ன சம்பந்தம்?
சொர்க்கத்திலும் பசியெடுத்த கர்ணன் பரம்பொருளிடம், தான் மறுபடியும் பூலோகத்தில் பிறந்து, கொடைக்கு ஒரு கர்ணன் என்று பெயர் எடுத்தது போல, அன்னதானத்திலும் தான் ஒரு பெரும் பெயரும் பேறும் பெற வேண்டும் என்று பெரும் தவம் செய்து வேண்டிக்கொண்டான்.
(கர்ணனின் முற்பிறப்பு ஸஹஸ்ர(1000)கவசன் என்றும், நரநாராயணர்களால் 999 கவசங்கள் அறுபட்டு, சூரியனிடம் அடைக்கலம் புகுந்தவன் என்றும், அவனே மறுபிறப்பில் ஒரே ஒரு கவசத்துடன் பிறந்த கர்ணன் என்றும் அபிதான சிந்தாமணி கூறுகின்றது.)
அந்தக் கர்ணனின், மறுபிறப்புதான் சிறுத்தொண்டர்.
எவரும் செய்யத் துணியாத வகையில் வைரவருக்கு அன்னமிட்டவர். சிவ பதவி அடைந்தவர். 63 நாயன்மார்களுள் ஒருவராகக் கொண்டாடப்படுபவர்.

அவரின் தூய்மையான பக்தியையும், இறைத் தொண்டினையும், ஆழ்ந்த நம்பிக்கையும், அன்னமிடுதலில் உள்ள அளவிலா அவாவினையும் இன்றளவும் உலகம் மெச்சுகின்றது.

கர்ணன் வேண்டி விரும்பிப் பெற்ற பிறவியே சிறுத்தொண்டர். முழுக்க முழுக்க அன்னதானத்திற்காகவே பிறப்பெடுத்தவர்.

அன்னதானமிட்டு அளப்பரிய பேறு பெற்றவர்.

அருந்தவம் செய்ததாலேயே அன்னதானம் செய்ய முடிந்தது.

அன்னதானம் செய்தால் அடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலைக்காக்கும் என்றும், சந்ததிகளை வளமாக வாழவைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அன்னதானம் செய்வதால் எல்லா விதமான பலன்களும், வேண்டுதல்களும் நிறைவேறும்.

அன்னதானம் செய்வோம் ! அளப்பரிய பலன் பெறுவோம் !!

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- செல் : 94434 79572
- mail : yanthralaya@yahoo.co.in, yanthralaya@gmail.com

Tuesday, October 19, 2010

மஹா அன்னாபிஷேகம்

மஹா அன்னாபிஷேகம் (ஐப்பசி மாத பெளர்ணமி)
http://natarajadeekshidhar.blogspot.com/2010/10/22102010.html
அன்னம்.
உணவு. உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை. அன்னம் எனும் உணவே அனைத்திற்கும் ஆதாரம். வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன.
தைத்ரீய உபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறை சாற்றுகின்றன. அதர்வண வேதத்திலுள்ள அன்னபூர்ணோ உபநிஷத் அன்னத்தின் மேன்மைகளைக் கூறுகின்றது.
அன்னம் ந நிந்த்யாத் - அன்னத்தை நிந்தனை செய்யக் கூடாது.
அன்னம் ப்ராணாவோ அன்னம் - எது உயிர் கொடுக்கின்றதோ அதுவே அது இல்லாமல் போனால் அதுவே உயிர் எடுக்கின்றது. எது ஒன்றை ஒருவர் உண்கின்றாரோ அதுவே அவரை உண்கின்றது.
அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம் - அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.
தெய்வங்களுக்குச் செய்யப்படும் யாகத்தில் அன்னம் மிகப் பெரும் பங்கு வகிக்கும். அந்த அன்னம் மட்டுமே ஹவிர் பாகமாக - தெய்வத்திற்கு உணவாக, பெரும் மரியாதையாக செய்யப்படுவது.
ஹோமத்திற்கான ஹவிர் பாகத்தைப் பெறுவதற்கு என்றும் தெய்வங்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன.
அன்னம் எனும் ஹவிர் பாகத்திற்காகப் பெரும் சண்டையே நடந்திருப்பதைப் புராணங்கள் அனேகம் பகர்கின்றன. சிவனுக்குரிய ஹவிர் பாகத்தைத் தர மறுத்த தக்ஷனின் தலையைக் கொய்திருக்கின்றார் வீரபத்திரம் வடிவம் கொண்ட சிவன்.
இறை வடிவம் கொண்ட அன்னத்தினை அன்னலாருக்கு அபிஷேகம் செய்து காண்பது அளவிற்கடந்த புண்ணியங்களைத் தரவல்லது.
தானத்திலும் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்ன தானம் மட்டுமே. உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.
உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள் என்றும் வீண்போவதில்லை.
சிவலிங்க வடிவம் ஓர் ஒப்பற்ற வடிவம்.
ELLIPTICAL எனும் நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவம் எண்ணற்ற அர்த்தங்களை நமக்குத் தருகின்றது. சிவ லிங்க வடிவம் எல்லையற்ற ஒன்றைக் குறிப்பிடுகின்றது. பிரபஞ்சத்தின் சக்தியைக் குறிக்கக் கூடியது. உலகம் தோன்றிய விதத்தையும், இயற்கையையும், பிரபஞ்ச வடிவத்தையும் விவரிக்கக் கூடியது. சூரியனைச் சுற்றிக் கோள்கள் அனைத்தும் நீள்வட்டப் பாதையான சிவலிங்க வடிவத்திலேயே சுற்றுகின்றன. ஆற்றில் அடித்துவரப்படும் கூழாங்கற்கள் கூட சிவ வடிவத்திலேயே இருக்கின்றன. சிவம் எனும் ஆற்றல் இந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது.
அன்னம் எனும் அரிசியின் வடிவம் கூட நீள்வட்ட வடிவம் தான். அன்னமும் ஒரு சிவ வடிவம் தான். http://natarajadeekshidhar.blogspot.com/2010/10/22102010.html
அண்டம் முழுக்க சிவ வடிவம் தான்.
சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.
சிவ பெருமானை அபிஷேக பிரியர் என்றும், மஹா விஷ்ணுவை அலங்கார பிரியர் என்றும் கூறுவார்கள்.
சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் காண்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பால், தயிர் போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படுவது போல உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது.
வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ஆகும்.
சிதம்பரம் போன்ற ஆலயங்களில் ஒவ்வொரு நாளும் அன்னாபிஷேகம் நடைபெறும்.
ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும்.
அன்னாபிஷேக பிரஸாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் அனைத்தும் அனைவருக்கும் அன்னதானமாக அளிக்கப்படும்.
ஒவ்வொரு மாத பெளர்ணமியன்றும் சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள் உண்டு. ஐப்பசி மாதத்து பௌர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
http://natarajadeekshidhar.blogspot.com/2010/10/22102010.html
அவை,
மாதம் - அபிஷேகப் பொருள் - பலன்
சித்திரை பௌர்ணமி - மருக்கொழுந்து - புகழ்
வைகாசி பௌர்ணமி - சந்தனம்- மனை, வீடு, நிலம், புதையல்
ஆனி பௌர்ணமி - முக்கனி = மா, பலா, வாழை - கேட்ட வரம் கிட்டும்
ஆடி பௌர்ணமி - காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்
ஆவணி பௌர்ணமி - வெல்ல சர்க்கரை - சாபம் தோஷம் பாவம் நீங்கும்
புரட்டாசி பௌர்ணமி - கோதுமை+பசுநெய் கலந்த வெல்ல அப்பம் - அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி பௌர்ணமி- அன்னாபிஷேகம் - கல்வி, கலை தேர்ச்சி, ஞானம் கிட்டும்
கார்த்திகை பௌர்ணமி - பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி பௌர்ணமி - பசு நெய் & நறுமண வென்னீர் - கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை பௌர்ணமி - கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி பௌர்ணமி - பசுநெய்யில் நனைத்த கம்பளி - குழந்தை பாக்கியம் பங்குனி பௌர்ணமி - பசுந்தயிர் - மனைவி, மக்கள், உறவினர் உதவி

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று தமிழ் திருமுறைகள் போற்றும் - சிதம்பரம் ஸ்ரீ ஆதி மூலநாதர் சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் மேற்கண்ட முறையில் விசேஷ அபிஷேகம் நடைபெறும்.

தவக்கனல், அருட்புனல், மண்ணில் வாழ்ந்த, சிவ வடிவாகவே கருதப்படும் காஞ்சி மஹா பெரியவரின் அருளாணையின் படி, பல்வேறு சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.
அதில் மிக முக்கியமாக, கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் எனும் பெரும் சிவ வடிவத்திற்கு நூற்றுக்கணக்கான மூட்டைகள் அரிசி கொண்டு, பெரும் வடிவமாகிய சிவபெருமான் முழுக்க நிறைந்திருக்கும்படி மஹா அன்னாபிஷேகம் நடைபெறும்.
அன்னாபிஷேகம் நிறைவடைந்த பிறகு, அந்த அன்னம் முழுக்க அன்னதானம் செய்யப்படும்.
அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது.
அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது.
அன்னாபிஷேகத்தில் பங்கு கொள்வோம் ! அளவற்ற புண்ணியம் பெறுவோம் !!

எவரும் செய்யத் துணியாத வகையில் அன்னதானம் செய்தவர் பற்றியும், அன்னதானத்தின் பெருமையையும் காண கீழ்க்கண்ட லிங்க் செல்ல்லுங்கள்.  http://natarajadeekshidhar.blogspot.com/2010/11/blog-post.html

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
www.facebook.com/deekshidhar
cell : 94434 79572.

Saturday, October 2, 2010

நவராத்திரி










நவராத்திரி பூஜை
(26.09.2022 - 05.10.2022)
சரஸ்வதி பூஜை (04.10.2022)
விஜயதசமி (05.10.2022)


சாக்த வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் பண்டிகைகளில் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை முதல் நவமி வரை மாலை வேளைகளில் அம்பிகையின் பல ரூபங்களை வழிபடுவது நவராத்திரி பூஜையாகும்.
நவமி அன்று சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படும். நாம் செய்யும் செயல்கள், வித்தைகள் அனைத்திற்கும் அதிபதி சரஸ்வதி. ஆகவே அன்று வீட்டிலுள்ள கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தையும் அழகுற அமைத்து, சரஸ்வதி தேவியின் அருளைப் பெற வேண்டும் நிகழ்ச்சியாக நடைபெறும். அன்று அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களை அன்றே உபயோகிக்காமல் மறுநாள் விஜயதசமி அன்று எடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும்.

விஜய தசமி - வெற்றியைத் தரும் பத்தாம் நாள். பூஜிக்கப்பட்ட கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தும் எடுத்தாளப்படும். அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் அக்ஷராப்யாசம் என்னும் கல்வி கற்கத் தொடங்க அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள்.

வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி, தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம்.

பெண்களின் பெருமையைப் போற்றும் விழா, நவராத்திரி விழா.
பெண்களின் கைவினைத்திறன், கற்பனை சக்தியைத் தூண்டும் விழா.

நவராத்திரி சமயத்தில் வீட்டில் "கொலு" என்னும் அமைப்பில், மூன்று, ஒன்பது அல்லது பனிரண்டு படிகள் அமைத்து, அதில் பல்வேறு வகையான பொம்மைகளை அமைத்து, அம்பிகையை அமைத்து, வழிபாட்டுடன், ஆடலும் பாடலுமாக வீடே சொர்க்க லோகம் போல காட்சியளிக்கும்.

நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம்.

நவராத்திரி வழிபாட்டால்,
பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன்.
கன்னியர்கள் பெறுவது திருமணப் பயன்.
சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன்.
மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு;
எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.

நவராத்திரிகள் கொண்டாடப்படும் காலங்கள் :
சித்திரை மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் வசந்த நவராத்திரி.
ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.
புரட்டாசி மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் சாரதா நவராத்திரியாகும்.
தை மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவராத்திரியாகும்.

புரட்டாசி மாத நவராத்திரி வழிபாடு :
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியையே அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.
புரட்டாசி மாதத்தினை சரத்காலம் என்று கூறுவர்.
இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.

சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.

நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள்.

தேவர்களுக்கு பகல் நேரமாக இருப்பது நமக்கு இரவு நேரமாகும். ஆகவே இரவு நேரத்தில் தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

நவகன்னிகா வழிபாடு
நவராத்திரி என்பது ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.

அதன்படி,
முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி
இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி
மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி
நான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோஹிணி
ஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா
ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா
ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி
எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்கா
ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - ஸுபத்ரா
என்று வணங்கப்படுவார்கள்.
(நவகன்னிகா ஸ்லோகங்கள் (தமிழ் விளக்கத்துடன்) தேவைப்படுவோர் மெயில் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்)

புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.

முதல் (1,2,3) மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.
இடை மூன்று (4,5,6) நாட்கள் லட்சுமி வழிபாடு.
கடை மூன்று நாட்கள் (7,8,9) சரஸ்வதி வழிபாடு.

துர்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ''கொற்றவை'', ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.
அவனை வதைத்த பத்தாம் நாள் 'விஜயதசமி' [ விஜயம் மேலான வெற்றி].

நவதுர்க்கை: வன துர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, சூரி துர்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.

அஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மகா இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி, கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை. ஞான சக்தி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, "ஆற்றங்கரைச் சொற்கிழத்தி" என்று குறிப்பிடுகிறது.

சரஸ்வதி பூஜை :
நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.

சமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூTப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.

விஜய தசமி:
ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்.

அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி

ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.

துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி.

இலட்சுமி: 4. மகாலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி.

சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.

நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம்.

ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை.

நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை. இதனால், நவராத்திரி வழிபாட்டில் பல கன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

புராணங்களில் நவராத்திரி :
வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது.
பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.

நவராத்திரி புராணம் :
முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும், வரமுனியை எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.

அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.

எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப் பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்ட வரத்தை அருளினார் பிரம்ம தேவன்.

மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.

தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவ பெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்புறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூSதையாய் புறப்பட்டாள்.
அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.

அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.

இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.

மற்றொரு கதை:
மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10ம் நாள் மகிஷாசுரனை சமிஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தனியானாள் என்றும் கூறப்படுகிறது. 9 நாட்கள் அம்மன் ஊசி மேல் தவம் நின்று தவம் புரிந்தாள். இதனால் நவராத்திரி தினமான 9 நாட்களும் ஊசியால் துணிகளை தைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

விஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும்.

சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.

காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து வைக்கப்படும்.

நவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.

நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
1. ஏழ்மை வராது
2. அன்பு கிடைக்கும்
3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
4. ஸுவாஸினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்
5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும்
6. கல்வி ஞானம் பெருகும்
7. உத்யோக உயர்வு
8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.
9. மன அமைதி கிடைக்கும்.
10. தேக ஆரோக்கியம்

நவராத்திரியில் கொலு வைக்கும் முறை.
ஒன்பது படிகள் :
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூன்றறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடமி பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறு அறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டுமி.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

நவராத்திரியில் உகந்தவை
(இந்த அட்டவணையை க்ளிக் செய்தால் விபரம் பெரிதாகத் தெரியும்)












நெய்வேலி நகரம், ஸத்சங்கம் - மணித்வீபம் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை ஆலயத்தில் சாரதா நவராத்திரி விழா மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
அம்பிகைக்கு அபிஷேகம், ஒவ்வொரு நாளிலும் சிறப்பு அலங்காரங்கள், மாலை ஸஹஸ்ரநாம அர்ச்சனை, நவாவரண பூஜை, மஹா தீபாராதனை நடைபெற இருக்கின்றது.
விஜய தசமி அன்று சிறப்பான முறையில் ஹோமமும் நடைபெறும்.

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !!

தொகுப்பு :
நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்
செல் : 9443479572, 9362609299
MAIL : yanthralaya@gmail.com
www.facebook.com/deekshidhar
http://natarajadeekshidhar.blogspot.in

Monday, September 20, 2010

பிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் !

பிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் !

அன்னை.
உலகத்தில் பிறந்த அனைவருக்கும் அன்னை உண்டு. .
அன்னையின் அரவணைப்பை அண்டாதவர்கள் யாருள்ளார்கள்?
அன்னையின் அளவற்ற பாசத்தை வேண்டாதவர்கள் உண்டா?தாய்ப் பாசத்திற்கு நிகருண்டா?
தேசத்தைத் தாயாகவும், நதிகளை அன்னையாகவும், தெய்வங்களைக் கூட தாய் வடிவில் காண்கின்றோம்.
வேதங்கள் "மாத்ரு தேவோ பவ" என்றே முதலில் தாயைப் போற்றுகின்றன. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அன்னைக்கே முதலிடம்.
முப்பெரும் தேவர்கள் - பிரம்மா, விஷ்ணு, சிவன்.இவர்கள் மூவருக்கும் ஒரு சமயத்தில் அன்னையின் அரவணைப்புத் தேவையாக இருந்திருக்கின்றது.
பிரம்மா - இவர் விஷ்ணுவின் தொப்புள் தாமரையில் தோன்றியவர். இவருக்கு அன்னையில்லை.
விஷ்ணு - அனாதியானவர். ஆதி என்று ஒன்று இல்லாதவர். பத்து அவதாரங்கள் எடுத்த போதிலும் அன்னையின் பரிபூரண அரவணைப்பைப் பெறாதவர். ராமாவதாரத்தின் போது ராமர் ராஜகுமாரனாக வளர்ந்ததனால், அன்னையிடம் இருந்ததை விட, மற்றவர்களிடம் இருந்ததே அதிகம். பெற்ற கோசலையை விட, கைகேயியையே தாயாக மதித்தவர். கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, பெற்ற தாயான தேவகியை விட, வளர்த்த யசோதையிடம் அதிக அன்பு பெற்றவர். சிறு வயதில் கிருஷ்ணருக்கு விஷமங்கள் செய்வதற்கே நேரமிருந்தது. யசோதைக்கும் கிருஷ்ணரைக் கண்டிக்கவே நேரம் போதவில்லை.
சிவன் - இவருக்கும் பிறப்பு என்று ஒன்றே இல்லை. சிவன் சிலை வடிக்கும் போது, தொப்புள் இல்லாமலே சிவனை வடிப்பார்கள். ஏனெனில், இவர் எவருக்கும் பிறக்கவில்லை என்பதுதான்.
விஷ்ணு எடுப்பது அவதாரம் (பிறப்பு முதல் இறப்பு வரை உண்டு) எனில் சிவன் எடுப்பது அவஸரம் (பக்தர்களுக்கு காட்சி தந்து விட்டு மறைந்துவிடுதல்).சிவன் தாமே முன் வந்து "அம்மே" என்று அழைத்தது காரைக்கால் அம்மையாரை. அவரைப் பற்றி பிறகு பார்ப்போம்.
இந்த மூவருக்கும் ஒரு சமயத்தில், நாம் யாருக்காவது குழந்தையாக மாட்டோமா என்ற நினைப்பு இருந்தது. தாயின் பரிபூரண அரவணைப்பில் அணைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன், மூவரும் தமக்கு ஒருவர் தாயாக, பக்தி சிரத்தையில் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க முனைந்தனர்.
அவர்கள் கண்களில் ஒரு ரிஷி பத்தினி தெரிந்தாள். அவள் அனசூயை.
அனசூயை - மஹா தபஸ்வினி. அத்ரி மஹரிஷியின் தர்ம பத்னி. அத்ரி மஹரிஷியின் தவத்தில் பெரும் உதவிகள் செய்து, தாமும் சதா சர்வ காலமும் பக்தி சிரத்தையுடன் இருந்தாள். அத்ரியும் அனசூயையும் தங்களுக்கு முப்பெருந்தேவர்களின் அம்சங்களாக ஒரு குழந்தை வேண்டும் என்றும் வரம் பெற்றிருந்தார்கள். அந்த வரத்தை மெய்ப்பிக்க பிரம்ம, விஷ்ணு, சிவன் அவர்களிடம் குழந்தையாக வளர சித்தம் கொண்டார்கள்.
அதன்படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரு நாள் அத்ரியின் ஆசிரமம் சென்று, அநசூயையைத் தாயாகப் பெற வேண்டி நின்றார்கள்.
அநசூயையும் பெரும் மகிழ்வு கொண்டு, தன் கணவரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தைக் கொண்டு மூவரையும் சிறு குழந்தையாக்கினாள்.
அநசூயை தாயாக, முப்பெருந்தேவர்களும் மூன்று குழந்தைகளாக அத்ரி ஆசிரமத்தில் மிக மகிழ்வாக இருந்து வந்தனர். அநசூயையின் அளவற்ற, எல்லைகள் இல்லாத, களங்கம் எதுவும் இல்லாத நிர்மலமான, நிர்வாணமான அப்பழுக்கற்ற பாசத்தினை - குழந்தைகளான பிரம்ம விஷ்ணு சிவன் அனுபவித்து வந்தனர்.
நெடுநாட்களாக - பிரம்மன் இல்லாமல் பிரம்ம லோகம் இருண்டது. விஷ்ணுவின் வைகுந்தம் வெறிச்சோடியது. ஈஸ்வரனின் கைலாயம் இயல்பாக இல்லை.
பிரம்மாவின் தேவியாகிய சரஸ்வதியும், விஷ்ணுவின் தேவியாகிய லக்ஷ்மியும், சிவனின் தேவியாகிய பார்வதியும் - தமது கணவர்களைத் தேடியலைந்தனர்.
வெகுநாட்கள் தேடிய பின்னர் மூவரும் அத்ரியின் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர். முப்பெருந்தேவியர்களும் தமது கணவர்களை அழைத்துச் செல்ல அத்ரியின் ஆசிரமத்தை அடைந்தனர்.
இவர்களின் வருகை குழந்தைகளாக இருந்த மூவருக்கும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) அதிர்ச்சியளித்தது. அன்னையைப் பிரிய மனம் இல்லாதவர்கள் ஆனார்கள். அவர்கள் மூவரும், தங்களைத் தாயிடம் இருந்து பிர்த்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில், மூவரும் அத்ரியின் ஆசிரமத்திற்குப் பின்னிருந்த வாழைத தோட்டத்தில் மறைந்து கொண்டனர்.
ஒவ்வொருவரும் ஒரு வாழை மரத்தின் பின் ஒளிந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் ஒளிந்துகொண்ட வாழை மரம் அவர்களின் அம்சம் பெறலாயிற்று.
பிரம்மா மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பூவன் பழம். பூவன் - பூவில் அமர்பவன். பிரம்மா பூவில் அமைந்திருக்கக் கூடியவர். பூவன் பழமே பிரம்ம பழம்.
விஷ்ணு மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் முகுந்தன் பழம் அல்லது மொந்தன்பழம். விஷ்ணுவுக்கு முகுந்தன் என்ற பெயரும் உண்டு. மொந்தம்பழமே விஷ்ணு பழம்.
சிவன் மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பேயன்பழம். சிவபெருமான் ருத்ரபூமியாகிய பேய்கள் உலாத்தக் கூடிய சுடுகாட்டில் உறைபவர். அவருக்கு பேயாண்டி என்ற பெயரும் உண்டு. பேயன்பழமே சிவப் பழம்.
பிரம்ம, விஷ்ணு, சிவன் மறைந்து கொண்ட வாழை மரங்களிலிருந்து பெறக்கூடியது தான் பூவன் பழம், மொந்தன்பழம், பேயன்பழம் ஆகும்.
அத்ரியின் ஆசிரமத்தில் இருந்த குழந்தைகாள இருந்த தம் கணவர்களை முப்பெருந்தேவியரும் அநசூயையிடம், தங்கள் கணவர்களை திரும்ப அனுப்புமாறு மன்றாடினர். அன்னைக்கு குழந்தைகளைப் பிரிய மனமில்லை. குழந்தைகளுக்கும் அன்னையைப் பிரிய மனமில்லை. பாசக் கயிறு குழந்தைகளையும், அன்னையையும் பிணைத்திருந்தது.
அநசூயை நெஞ்சம் கனக்க - பிரம்ம, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சுய ரூபம் அடைய அனசூயை பிரார்த்தனை செய்தாள். அதன்படியே மூவரும் தங்கள் தனித்த உருவம் அடைந்தனர்.
மஹாவிஷ்ணு, அநசூயை பெற்ற வரத்தின் படி, பிரம்ம அம்சம், தன்னுடைய அம்சம், சிவாம்சம் இணைந்ததான குழந்தையை உருவாக்கி, அத்ரியிடம் தத்தம் (வழங்குவது) அளித்தனர்.
அவரே தத்தாத்ரேயர்.அத்ரி மஹரிஷியின் மகனாக வாய்த்ததனால் அவர் ஆத்ரேயர். தத்தம் கொடுத்ததால் தத்தாத்ரேயர்.
மூவரின் அம்சமும் கொண்ட தத்தாத்ரேயர் அத்ரி - அநசூயை தம்பதிகளிடம் வளர்ந்தார். அன்னையின் பாசம் முழுக்கப் பெற்றார். தந்தையின் ஞானம் அனைத்தையும் பெற்றார்.
உலகில் உள்ள அனைத்துக் கலைகளையும் கற்று, பெரும் ஞானவான் ஆனார்.
ஸ்ரீ வித்யா உபாஸகர்களுக்கு, சாக்த உபாஸகர்களுக்கு தத்தாத்ரேயர் தான் பரமார்த்த குரு. ஏனெனில், தாயைப் போற்றும், தெய்வத்தைத் தாய் நிலையில் கொண்டு போற்றும், உலகமனைத்தையும் ஈன்றெடுத்த அன்னையைப் போற்றும் வகையில் அமைந்த ஸ்ரீ வித்யா உபாஸனையை உலகுக்குக் கொண்டுவந்தவர் தத்தாத்ரேயர்தான்.
தத்தாத்ரேயருக்கு பரம ஞான சக்தியாக விளங்குவது ஸாக்ஷ¡த் ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரியே தான்.
தத்தாத்ரேயர் ஸ்ரீ புர உபாஸனை அல்லது ஸ்ரீ நகர பூஜை அல்லது ஸ்ரீ வித்யா தந்திரத்தை 18000 ஸ்லோகங்களில் மிக விரிவாக வடித்தார். அதுவே தத்த ஸம்ஹிதை எனப் போற்றப்பட்டது.
தத்தாத்ரேயரின் பிரதான சிஷ்யராக விளங்கியவர் பரசுராமர். இந்த பரசுராமர் தத்த ஸம்ஹிதையை 6000 ஸ¥த்திரங்களாக தொகுத்தார். அதுவே பரசுராம கல்பம் எனப்பட்டது. தற்காலத்தில் அம்பிகைக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் பரசுராம கல்பத்தை ஒட்டியே செய்யப்படுகின்றது.மேலும் ஸ்ரீ வித்யா உபாஸனை பற்றி அறிந்து கொள்ள நவாவரண பூஜை பதிவைக் காணவும். அல்லது இங்கே க்ளிக் செய்யவும்.
வடமொழியில் அமைந்த நக்ஷத்ர மாலிகா ஸ்லோகங்கள் தத்தாத்ரேயரைப் பற்றி பல சிறப்பம்சங்களைக் கூறுகின்றன.
தத்தாத்ரேயர் யோகியர்களுக்கும், ஞானிகளுக்கு ஒரு தூய வழிகாட்டியாக அமைந்துள்ளார். அவர் போதித்தது அனைத்தும் ஞானாம்சம் பெற வழிகோலுவது.

தத்தாத்ரேயர் வழிபட்ட மஹா திரிபுர சுந்தரியாக, பராபட்டாரியாக, லோகநாயகியாக, உலகமாதாவாக விளங்கும் ஸ்ரீ லலிதா தேவியின் ரூபமாக விளங்கும் ஸ்ரீ மாதா புவனேஸ்வரியை வணங்குவோம்! வளம் பெறுவோம் !!

முப்பெருந்தேவியர்களையும் (துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி) ஒருங்கே வழிபடவகை செய்யும் பெரும் விழாவாகிய நவராத்திரி விழாவினைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.
- பி.கு. : - நேந்திரம் பழம் : சரஸ்வதி, பார்வதி, லக்ஷ்மி மூவரும் அத்ரியின் ஆசிரமத்தை அடையும் முன், தேவ நாயகனாகிய இந்திரனை அழைத்து, தமது கணவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். இந்திரனும் அத்ரியின் ஆசிரமம் அடைந்து, விபரம் அனைத்தையும் அறிந்து, அவனும் தாய்ப் பாசத்தினைப் பெற வேண்டி, தானும் ஒரு குழந்தையானான். இந்திர¨னைக் காணாமல் நெடுநேரமாகியதைக் கண்ட தேவியர் நேரில் ஆசிரமம் வர, இந்திரனும் வாழைத் தோட்டத்தில் உள்ள ஒரு வாழை மரத்தில் ஒளிந்து கொள்கின்றான். தேவியர் மூவரும் விபரம் அறிந்து, ஆசிரமத்தில் இருக்கும் வாழைத் தோட்டத்திற்கு நுழைகையில் இவர்களின் கண்களில் முதலில் பட்டது இந்திரன் தான். இந்திரனின் அம்சமாக இருந்த குழந்தையை இவர்கள் அழைக்க, இந்திரன் வடிவில் இருந்த குழந்தை, அன்னையின் பாசத்திற்குக் கட்டுண்டு - தான் இந்திரன் இல்லை (ந: இந்திரன்) என்றது. இந்திரன் நின்ற வாழைமரத்திலிருந்து பெறப்படுவது தான் நேந்திரன் பழம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்-
cell : 94434 79572