Monday, February 22, 2010

நடராஜ பத்து

நடராஜப் பத்து
சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள் படுவது சிதம்பரம் ஆகும். சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த ஸ்தலம். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது.
சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம்.
சிதம்பரத்தின் மூர்த்தியாக விளங்குபவர் ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியையும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.
வேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள் போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.
ஸ்ரீ நடராஜரை பழங்கால இலக்கியங்களில் சிறப்புற்றதாக விளங்கும் சிலப்பதிகாரம் (நடராஜர் ஆடிய கொடுகொட்டிக் கூத்து: (28: 67 - 75) - "திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும், பரிதரு செங்கையிற் படுபறையாற்பவும் .... இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்") முதற்கொண்டு பல்வேறு இலக்கியங்கள், பாசுரங்கள், பதிகங்கள் அனைத்தும் போற்றி பறைசாற்றுகின்றன.
பிற்காலத்தில் எழுதப்பட்ட பாடல்களிலும் ஸ்ரீ நடராஜரின் தாண்டவங்களை விவரித்துச் சொன்ன பாசுரங்கள் (கோபால கிருஷ்ண பாரதியின் பாடல்கள் போன்றவை) மக்களிடம் மிக எளிதில் சென்றடைந்தன.
நாம் இங்கு காணவிருப்பது பிற்காலத்தில் எழுதப்பட்ட, நடராஜ பத்து - சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலாமக விளங்கியது.
மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள்.
ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே" என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது.
ஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும். இதனை பாராயணம் செய்பவர்களுக்கு மிக நிச்சயம் ஸ்ரீ நடராஜரின் அருள் உண்டு.
பாடலாசிரியர் - சிறுமணவை முனுசாமி முதலியார். தற்போது சிறுமணைவை எனும் ஊர் பெயர் மாற்றம் ஏற்பட்டு, திருவள்ளூர் தாலுக்காவில், கருமுத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இவரின் பரம்பரையினர் ஜோதிடம், மாந்த்ரீகம், சித்த வைத்தியம் போன்றவற்றில் மிகச் சிறந்து விளங்கியுள்ளனர். தில்லையில் விளங்கும் ஸ்ரீ நடராஜரின் மேல் அளவிற்கடந்த பக்தியினால் "நடராஜ பத்து" பாடல்களை சிறுமணவூர் முனுசாமி எழுதியுள்ளார். இவர் நடராஜ பத்து எனும் பதிகம் தவிர மேலும் ஐந்து விருத்தங்கள் எழுதியுள்ளார்.
சிறுமணவை முனுசாமி அவர்களின் வழிவந்தவர் சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஸ்ரீ நல்லப்பன் நீலகண்ட சிவா. அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டே, நடராஜர் பத்து ஆசிரியரைப் பற்றி விபரங்கள் தெரிந்துகொண்டோம். அவர் மிக ஆர்வமாக பல்வேறு தகவல்களைக் கூறினார்.

பாடல் : 1
மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நா‎ன்கி‎ன் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவ‎ன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இ‏ருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒ‎ன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே எ‎ன் குறைகள் யார்க்கு உரைப்பே‎‎ன்,
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)

பாடல் : 2
மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு ‏ இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இ‏துவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.
(ஸ்ரீ நடராஜரின் நடனத்தை நம் கண்முன்னே நிறுத்தும் பாடலாக அமைந்தது)
[நடராஜரின் நடனத்தை நம் கண் முன்னே நிறுத்தும் இந்தப் பாடலை இங்கு ஆடியோவில் கேட்கலாம்]



பாடல் : 3
கடலெ‎ன்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,
காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற ‏ இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
தடமென்ற‏ இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(மனித வாழ்வின் சிக்கல்களை நீக்க வேண்டி பாடுவதாக அமைந்தது)

பாடல் : 4
வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
அ‎ன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
எ‎ன்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.
(மாந்த்ரீகம், சித்தர்கள் பற்றி கூறியுள்ள பாடல்)

பாடல் 5:
நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
சந்ததமு‎ன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுக‎ன் அறு முகன் இருபிள்ளை ‏ இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னி‏டமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை ‏ இதுவல்லவோ ‏
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை ‏
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(நிந்தா ஸ்துதியில் அமைந்த பாடல்)

பாடல் 6:
வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்
மொழி எதுகை மோனையும் ‏ இல்லாமல் பாடினும்
மூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும்
தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும் பழியெனக் கல்லவே தாய்தந்தைக்
கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ
பாலகனை காக்கொணாதோ எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(குறைகளற்ற வாழ்வை பெற வேண்டுவதாக அமைந்த பாடல்)

பாடல் : 7
அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வி‎னை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழு‎வனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமெ‎ன்று
உணர்வனோ
தன்னை நொந்தழுவனோ உ‎ன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ ‏ இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(முக்தியை வேண்டுவதாக அமைந்த பாடல்)

பாடல் : 8
காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் ‏ இல்லை
யென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(செய்த பாபங்களை நீக்க வேண்டிய பாடல்)
[மிகவும் இரக்கமாகப் பாடியுள்ள இப்பாடலை, நெஞ்சம் நெகிழச் செய்யும் ஸஹானா ராகத்தில் இங்கு ஆடியோவில் கேட்கலாம்.
இப்பாடலை பாடியவர் தேமதுரக் குரல் கொண்ட ப்ரம்மஸ்ரீ ஸோம நாகதேவ தீக்ஷ¢தர். 2003ம் ஆண்டில் நாங்கள் வெளியிட்ட நடராஜர் பத்து ஆடியோ கேசட் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.]


பாடல் 9 :
தாயார் ‏ இருந்தென்ன தந்தையும் ‏ இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் ‏ இருந்தென்ன குருவாய் ‏ இருந்தென்ன சீடர்கள் ‏ இருந்தும் என்ன,
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ ‏ இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
பாடல் 10 :
‏இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ ‏
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ ‏ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ ‏ இதுவென்ன சாபமோ, இதுவே உன்
செய்கைதானோ
‏இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங்
கெடுவனோ,
ஓஹோ ‏ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ‏ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் ‏ இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 11
சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் ‏ இவரை,
சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி
என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங்
கசக்கி,
கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி சிறுமணவை முனுசாமி பாடியவை இசைக்கும் எமை அருள்வது இனியுன் கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

நடராஜ பத்து பாடல்களைப் பாடி, நடராஜரைப் பணிந்து நற்கதி அடைவோம்.
நி.த. நடராஜ தீக்ஷ¢தர்
CELL : 94434 79572.
MAIL : yanthralaya@yahoo.co.in

Sunday, February 14, 2010

பாம்பு இயற்றிய பாடல்

பாம்பு இயற்றிய பாடல்
ஆதிசேஷன் எனும் நாகத்தின் மேல் அரிதுயில் கொண்டிருப்பவர் மஹா விஷ்ணு. ஆதிசேஷன் ஆயிரம் தலைகளை உடைய நாகமாக, பாம்பாக வடிவம் கொண்டு மஹாவிஷ்ணுவை எந்நேரமும் தாங்கிக் கொண்டிருப்பவர்.
ஆதிசேஷன் கத்ரு என்பவரின் புத்திரன். ஆயிரம் தலைகள் கொண்டவர். பாற்கடலில் விஷ்ணு மூர்த்திக்குப் படுக்கையாகவும், பரமபதத்தில் ஆசனமாகவும், நடந்தால் குடையாகவும் இருப்பவர். மஹா ஞானி. அதி அற்புத திறன் பெற்றவர். ஸஹஸ்ராவதானி.

ஒரு சமயம் பாற்கடலில் விஷ்ணு மூர்த்தி யோக நித்திரையில் அமைந்திருக்கின்றார். எப்பொழுதும் போல் இல்லாமல், விஷ்ணுவின் உடலில் திடீரென்று சிறு மாற்றம். அனுதினமும் விஷ்ணுவிடமே இருக்கும் ஆதிசேஷனுக்கு இந்த மாற்றத்தை மிக அற்புதமாக உணரமுடிந்தது. விஷ்ணுவின் உடலில் வியர்வை வெளியேறியது. ஆதிசேஷன், விஷ்ணுவிடம் தங்கள் உடம்பில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் என்ன என்று வினவினார்.
அதற்கு மஹா விஷ்ணு, "ஒரு சமயம் தேவலோகத்தில், நடராஜர் ஆனந்த நடனக் காட்சியளித்ததை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனந்த நடனம், அற்புத நடனம், அதிசய நடனம். அந்நடனத்தில் நான் முரசு கொட்டினேன். அந்த ஆனந்த பரவச நிலையை இக்கணமும் உணர்ந்ததால், முரசு கொட்டியதால் ஏற்பட்ட வியர்வையை உன்னால் உணரமுடிந்தது" எனக் கூறினார். மஹாவிஷ்ணு, தான் கண்ட ஆனந்த நடனக் காட்சியை ஆதிசேஷனுக்கு மிக அழகாக அனுபூதியாக உணர்த்தினார்.

ஆதிசேஷனுக்கு, மஹா விஷ்ணு உணர்த்திய காட்சியைத் தானும் காண வேண்டும் எனும் பெரும் ஆவல் உண்டாயிற்று. தன் விருப்பத்தை மஹாவிஷ்ணுவிடம் முன் வைக்கிறார். அவரும் தக்க உத்தரவு கொடுத்தார்.
அத்ரி மஹரிஷியின் மனைவி அநசூயை. கணவரின் சிவபூஜைக்கு உதவியாக இருந்தவர். மஹா தபஸ்வினி. ஒரு சமயம் ஆற்றங்கரையில் பூஜை செய்து கொண்டிருக்கும்போது, ஆதிசேஷன் விஷ்ணு கொடுத்த வரத்தால் அநசூயையின் குவிந்த கரத்தில் (அஞ்சலி ஹஸ்தம்) வந்து, அவளின் பாதத்தில் விழுந்தார். பாம்பின் காலும், மனித முகமும் கொண்டு, அஞ்சலி செய்த கையில் வந்து, பாதத்தில் வந்து விழுந்ததால் பதஞ்சலி எனப் பெயர் பெற்று வளர்ந்து வந்தார்.

ஆதிசேஷன், கலைகள் அனைத்தையும் கற்று, தில்லை வனம் எனும் காட்டில், புலிக்கால் கொண்ட முனிவராகிய வியாக்ரபாதருடன் இணைந்து ஆதி மூலவருக்கு சிவபூஜை செய்து வந்தார். சிவபூஜையில்

மகிழ்ந்த சிவபெருமான், ஆனந்த நடனக் காட்சியை அளிப்பதாக அசரீரியாக வாக்கு அளித்தார்.

தேவர்கள், ரிஷிகள், கணங்கள் வேண்டியதற்கு இணங்க, முன்னர் வரம் அளித்தபடி, சிவபெருமான் ஆனந்த நடனக் காட்சி நல்க பூலோகம் வரும் நேரம் வந்தது.

தில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க, ஸகல தேவர்களும், அனைத்து கணங்களும் உடன் வர, இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.

அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கையில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னகை பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவது பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.

ஆனந்த நடனமாடிய அம்பலவாணர், தவம் செய்த பதஞ்சலியை நோக்கி என்ன வரம் வேண்டும் என வினவ, பதஞ்சலியோ தாம் கண்ட இத்திருக்காட்சியை எதிர்காலத்தில் அனைவரும் காண வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில், நடராஜ ராஜர் பொன்னம்பலத்தின் எப்பொழுதும் பதஞ்சலியாமல் (பாதம் சலிப்படையாமல்) ஆடவேண்டும் என பெருவரம் கேட்டார்.

வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றௌ உடன் அருளும் குஞ்சிதபாதர், பதஞ்சலிக்கு அவ்வண்ணமே அருள்பாலித்தார்.நடராஜராஜரின் அற்புத ஆனந்த நடனம் இன்றும் என்றும் நடக்கிறது.

ஆனந்த நடனம் கண்ட பதஞ்சலி, ஒரு அற்புத பாடல் ஒன்றை இயற்றினார்.
பதஞ்சலி - நாக அம்சம். பாம்பின் வடிவம் கொண்டவர். பாம்புக்கு காலும் கிடையாது. கொம்பும் கிடையாது. ஆகவே தான் எழுதிய பாடல் தொகுப்பு ஒன்றிற்கு காலும், கொம்பும் இல்லாமலேயே இயற்றியுள்ளார்.நடராஜரின் ஆனந்த நடனத்தைப் போற்றிச் சொல்லக்கூடிய, தான் எழுதிய ஒரு பாடல் தொகுப்பினை, கால் வைத்த எழுத்தாகிய நெடில் ('ஆ'காரம்) மற்றும் கொம்பு வைத்த எழுத்தாகிய ஒகாரமும் இல்லாமலேயே எழுதியுள்ளார்.`அது ஸ்ரீ சரண ச்ருங்க ரஹித நடராஜ ஸ்தோத்ரம் என்று அழைக்கப்படுகிறது.இந்த ஸ்லோகங்களைச் சொல்லும்போதே ஆனந்த நடனக் காட்சி நம் கண்ணில் தெரியும்.


ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம்(ஸ்ரீ பதஞ்சலி க்ருதம்)

1. ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்ஜுகடகம்பதஞ்சலி த்ருகஞ்சன மனஞ்சன மசஞ்சல பதம் ஜனன பஞ்சனகரம்கதம்பருசி மம்பர வஸம் பரமமம்புத கதம்பக விடம்பககலம்சிதம்புதிமணிம் புதஹ்ருதம்புஜரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
2. ஹரம் த்ரிபுர பஞ்சன மனந்தக்ருத கங்கண மகண்டதய மந்த்ரஹிதம்விரிஞ்சிஸ¤ர ஸம்ஹதி புரந்தர விசிந்தித பதம் தருணசந்த்ர மகுடம்பரம் பதவிகண்டி தயமம் பஸிதமண்டித தனும் மதனவஞ்சனபரம்சிரந்தன மமும் ப்ரணவஸஞ்சித நிதிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
3. அவந்த மகிலம் ஜகதபங்க குண துங்க மமதம் த்ருதவிதும் ஸ¤ரஸரித்தரங்க நிகுரும்ப த்ருதிலம்படஜடம் சமன டம்பஸ¤ஹரம் பவஹரம்சிவம் தசதிகந்தர விஜ்ரும்பிதகரம் கரலஸன் ம்ருகசிசும் பசுபதிம்ஹரம் சசி தனஞ்ஜய பதங்கநயனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
4. அனந்த நவரத்னவிலஸத் கடக கிங்கிணி ஜலம்ஜலரவம்முகுந்த விதி ஹஸ்தகத மத்தள லயத்வனி திமித்திமித நர்தன பதம்சகுந்தரத பர்ஹிரத நந்திமுக ப்ருங்கி ருஷி ஸங்க நிகடம்ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
5. அனந்தமஹஸம் த்ரிதசவந்த்யசரணம் முனிஹ்ருதந்தர வஸந்த மமலம்கபந்த வியதிந்துவஹனி கந்தவஹ வஹ்னி மக பந்து ரவிமஞ்ஜு வபுஷம்அனந்தவிபவம் த்ரிஜகதந்தரமணிம் த்ரிநயனம் த்ரிபுர கண்டனபரம் ஸனந்தமுனி வந்திதபதம் ஸகருணம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
6. அசிந்த்ய மளிப்ருந்த ருசிபந்துரகளம் குரிதகுந்த நிகுரும்ப தவளம்முகுந்த ஸ¤ரப்ருந்த பலஹந்த்ரு க்ருத வந்தன லஸந்த மஹிகுண்டல தரம்அகம்ப மனுகம்பிதரதிம் ஸ¤ஜனமங்கள நிதிம் கஜஹரம் பசுபதிம்தனஞ்ஜயநுதம் ப்ரணதரஞ்ஜனபரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
7. பரம்ஸ¤ரவரம் புரஹரம் பசுபதிம் ஜனித தந்திமுக ஷண்முக மமும்ம்ருடம் கனக பிங்கலஜடம் ஸனகபங்கஜ ரவிம் ஸ¤மனஸம் ஹிமருசிம்அஸங்கமனஸம் ஜலதிஜன்ம கரலம் கபலயந்த மதுலம் குணநிதிம்ஸநந்தவரதம் சமித மிந்துவதனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
8. அஜம் க்ஷ¢தி ரதம் புஜங்கபுங்கவகுணம் கனகச்ருங்கிதனுஷம் கரலஸத்குரங்கப்ருது டங்க பரசும் ருசிரகுங்கும் ருசிம் டமருகஞ் ச தததம்முகுந்த விசிகம் நமதவந்த்யபலதம் நிகமப்ருந்த துரகம் நிருபமம்ஸசண்டிகமமும் ஜடிதி ஸம்ஹ்ருதபுரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
9. அனங்க பரிபந்தின மஜம் க்ஷ¢தி துரந்தர மலம் கருணயந்த மகிலம்ஜ்வலந்த மனலம் ததத மந்தகரிபுரம் ஸததம் இந்த்ரஸ¤ர வந்திதபதம்உதஞ்ச தரவிந்தகுல பந்துசத பிம்பருசி ஸம்ஹதி ஸ¤கந்தி வபுஷம்பத்ஞ்ஜலி நுதம் ப்ரணவபஞ்ஜரசுகம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
10. இதி ஸ்தவ மமும் புஜகபுங்கவக்ருதம் ப்ரதிதினம் படதி ய: க்ருதமுக:ஸத:ப்ரபு பதத்விதய தர்சனபதம் ஸ¤லலிதம் சரணச்ருங்க ரஹிதம்ஸர:ப்ரபவ ஸம்பவ ஹரித்பதி ஹரிப்ரமுக திவ்யநுத சங்கர பதம்ஸ கச்சதி பரம் ந து ஜனுர்ஜலநிதிம் பரம துக்கஜனகம் துரிததம்
இதி ஸ்ரீபதஞ்சலிமஹர்ஷிக்ருத ஸ்ரீசரணச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

மேற்கண்ட ஸ்லோகங்களில் எந்தப் பகுதியிலும் நெடில் (கா, சா, தா போன்றவை) மற்றும் ஒகாரம் (கொ, சொ, தொ போன்றவை) வராததைக் கவனிக்கவேண்டும்.

பதஞ்சலி எழுதிய பூஜா ஸூக்தம் என்ற பூஜை முறைப்படியே தினமும் ஆறுகாலமும் சிதம்பரத்தில் பூஜைகள் நடந்தேறுகின்றது.
பதஞ்சலி வடமொழியில் அமைந்த, பாணிணி சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியுள்ளார். ஆகையால் இவரை மஹா பாஷ்ய காரர் என்பார்கள்.

ஆதிசேஷன் - பாம்பு வடிவினர். ஆகையால் அவர் மூச்சுக் காற்று விஷம், அக்காற்றை சுவாசிப்பவர் மரணமடைவார்கள். பதஞ்சலி, தன் கலைகளையெல்லாம் சிஷ்யர்களுக்கு சொல்லித் தர ஆசைப்படுகின்றார். ஆதிசேஷன் வடிவத்தில் பாடங்களை நடத்தித் தர முன்வருகின்றார்.

இக்காரணத்தால், பாடம் நடத்தும்போது சீடர்களுக்கும் தனக்கும் இடையே ஒரு மந்திர சக்தி வாய்ந்த திரை அமைத்துப் பாடம் நடத்துவார். மாணவர்களுக்கு எக்காரணம் கொண்டும் பாடம் நடத்தும்போது திரையை விலக்கக் கூடாது என்ற ஒரு கட்டளையும் இட்டார்.

ஆயிரக்கணக்கான சீடர்களுக்கு பாடங்கள் நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள் கேட்கும் ஆயிரக்கணக்கான சந்தேகங்களுக்கு அவரவர் கேள்விகளுக்கு தக்கவிதத்தில் அழகுற பதில் கூறி விளக்கங்கள் கூறுவார் ஆதிசேஷன்.

மாணவர்களுக்கோ இது அதிசயமாக இருக்கும். எப்படி ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் கூற முடியும் என்ற சந்தேகம் சீடர்களுக்கு ஏற்பட்டது. திரையை விலக்க, குருவின் கட்டளையை மீற வேண்டுமே என்ற பயமும் இருந்தது.

ஒரு நாள் வழக்கம்போல் பாடம் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு குறும்புக்கார மாணவன் குரு பாடம் சொல்லிக் கொடுப்பதைக் காண வேண்டி ஆர்வமிகுதியில் திரையினைத் தள்ளினான். அங்கே பதஞ்சலி மஹரிஷி, ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாக அமைந்ததைக் காண்கிறார்கள். திரை தள்ளியமையால், ஆதிசேஷனின் விஷத் தன்மை கொண்ட மூச்சுக் காற்றுபட்டு, எதிரில் இருந்த அனைவரும் இறக்கின்றனர்.

ஆழ்ந்த வருத்தம் கொண்டார் பதஞ்சலி. இத்தனை காலம் தான் கற்றுக் கொடுத்த அனைத்தும் வீணானதே என்று மிகவும் வருந்தினார்.

ஆனால், ஒரு ஆச்சர்யம். அன்று மட்டும் ஒரே ஒரு சீடர் மட்டும் மிகத் தாமதமாக வந்ததைக் கண்டதும் மிகவும் ஆனந்தித்தார். இவர் ஒருவராவது உயிரோடு இருக்கின்றாரே என்று மகிழ்ச்சி கொண்டார். அந்த ஒரு சீடருக்கு தன் அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுத்தார்.

அவர் தான் கௌடபாதர்.
இந்த கௌடபாதரின் சீடர் கோவிந்த பகவத் பாதர். (இவர் உத்தர கீதைக்கு பாஷ்யம் எழுதியவர்.)கோவிந்த பகவத் பாதரின் சீடர்தான் ஸ்ரீ ஆதிசங்கரர்.
ஆதிசேஷன் வடிவான பதஞ்சலியின் பாடலைக் கேட்டு இன்புற்று, ஆனந்த நடனக் காட்சி அருளும் ஸ்ரீ நடராஜ ராஜரை தரிசித்து ஆனந்தம் காண்போம்.

{ஸ்ரீ சரண ச்ருங்க ரஹித ஸ்தோத்திரத்தின் ஒரு பாடல் மட்டும் இங்கே கேட்கலாம்.

இதை அழகுற பாடியிருப்பவர் ஸ்ரீ T. செல்வ ரத்ன தீக்ஷிதர். இந்த ஸ்லோகங்களின் முழுமையான ஆடியோ தேவைப்படுவோர் அவரிடமே தொடர்பு கொள்ளலாம். (92451 07779)}


**************************
அதிசய சம்பவம் :

பாம்பு பூஜித்த லிங்கம்

கிரஹணத்தின்போது (15.01.2010) திருநாகேஸ்வரம் அருகில் உள்ள திருப்பெருமாநல்லூர் திருத்தலத்தில் பாம்பு ஒன்று மிக அழகாக, வில்வ மரத்தின் மீது ஏறி, வில்வம் பறித்து, அந்த வில்வத்தை சிவலிங்கத்தின் தலையில் வைத்து வழிபட்ட நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.


- நி.த. நடராஜ தீக்ஷ¢தர்

MAIL : yanthralaya@yahoo.co.in

CELL : 94434 79572.

Sunday, February 7, 2010

அதிசய அற்புத பாடல்கள்

அதிசய அற்புத பாடல்கள்
கவிக்கோ(ர்) காளமேகம் எனும் சென்ற பதிவில் தமிழில் சிறப்பு வடிவம் பெற்ற வெண்பாக்களைக் கண்டோம்.
மேலும் சில சிறப்பு வடிவம் பெற்ற பாடல்களை இப்பதிவில் காண்போம்.
ஆங்கிலத்தில் palindrome என்றும், தமிழில் இருவழி ஒக்கும் சொல் என்றும் குறிப்பிடக் கூடியவைகளைக் காண்போம்.
MALAYALAM - இது ஆங்கிலத்தில் இடது புறத்திலிருந்து வலப்புறமாக படித்தாலும், வலது புறத்திலிருந்து இடது புறமாக படித்தாலும் ஒரே மாதிரியாக, அதே சொல்லாக அமையக்கூடியது. palindrome என்பது இவ்வகை.தமிழில் - விகடகவி - இடதிலிருந்து வலமாக, வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே சொல் அமையக் கூடியது.
ஆங்கிலத்தில் பாலிண்டிரோம்கள் அதிகம்.
I PREFER PI
MADAM I'M ADAM
NEVER ODD OR EVEN என்பவை சில பிரபலமான பாலிண்டிரோம்கள்.
இவை போல ஆயிரக்கணக்கான எழுத்துக்களைக் கொண்ட பாலிண்டிரோம்கள் ஆங்கிலத்தில் உள்ளன.

தமிழில் பாலிண்டிரோம்கள் மிகக் குறைவே. ஒற்றெழுத்துக்கள் எனக் கூடிய புள்ளி வைத்த எழுத்துக்கள் தமிழில் பாலிண்டிரோம்கள் எழுதச் சற்றே தடையாக உள்ளன.

ஆயினும், பல பாலிண்டிரோம்கள் எழுதப்பட்டுள்ளன.

குறைவான எழுத்துக்கள் கொண்டவை :
தாத்தா
பாப்பா
தேரு வருதே
மோரு போருமோ
"பூவாளை நாறு நீ பூமேக லோகமே பூ நீறு நாளை வா பூ"- தண்டியலங்காரக் குறள் வெண்பா .
தமிழ் நால்வரில் ஒருவரும், தமிழின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவரும், தெய்வங்களுக்குத் தனித் தமிழில் பெயர் அமைத்தவரும், தம் பாடல்களால் சைவ சமயத்தைப் பெரிதும் வளர்த்தவரும், உமை அம்பிகையால் ஞானப் பால் குடித்தவரும், திராவிட சிசு என்று போற்றப்படக் கூடியவரும் ஆகிய திருஞானசம்பந்தர் தமிழின் மிக நீளமான பாலிண்டிரோமை அக்காலத்திலேயே அழகுற அமைத்திருக்கின்றார்.

சைவத்தின் வேதம் என்று போற்றக் கூடிய பன்னிரு திருமுறைகளின் முதல் மூன்று திருமுறைகளாக திருஞானசம்பந்தரின் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.திருஞானசம்பந்தர் பாடல்களில் மாலை மாற்றுப் பதிகம் என்பது முழுக்க முழுக்க தமிழ் பாலிண்டிரோம்தான்.

திருஞான சம்பந்தர் இயற்றிய மாலை மாற்று (PALINDROME) பதிகம்
திருச்சிற்றம்பலம்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா 1
-------------> <-------------------
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயாயாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா 2
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமாமாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா 3
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமேமேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ 4
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீவீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா 5
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயேயேனாலாகா லேலாகா ழீதேமேகா பொலேமே 6
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானேநேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ 7
நேணவரா விழயாசைழியே வேகதளேரிய ளாயுழிகாகாழியுளாய ரிளேதகவே யேழிசையாழவி ராவணனே 8
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூபூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா 9
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதேதேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே 10
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயா தமிழாகரனே 11
திருச்சிற்றம்பலம்

(மேற்கண்ட பாடல்களில் ஒற்றெழுத்து எனும் புள்ளி வைத்த எழுத்துக்கள் வரவில்லை என்பதை இங்கே குறிப்பிடவேண்டும்.

மேற்கண்ட பாடல்களுக்கு மிக அழகிய பொருள் உண்டு. முதல் பாடலின் பொருள் : சிற்றுயிர்களாகிய நாங்கள் கடவுள் அல்லர், சிவபெருமானாகிய நீ மட்டுமே எங்களுக்கு கடவுள்)

இதே போல பாலிண்டிரோம்கள் தமிழில் இன்னும் சில உண்டு. ஆனால் திருஞான சம்பந்தர் இயற்றியது போல அமையவில்லை.
மாதவச் சிவஞான யோகிகள் என்பவர் காஞ்சிப் புராணத்திலும், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத அய்யரின் குருவாகிய, திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தாம் இயற்றிய, திருநாகைக்காரோணப் புராணத்தில் பாலிண்டிரோம் வகைக் கவிதைகளை இயற்றியுள்ளனர் என்று தமிழறிஞர்கள் கூறுகின்றனர்.

மிக அதிசய அற்புத பாடல்
பாலிண்டிரோம் என்பது இரு வழிகளிலும் படித்தாலும் ஒரே அர்த்தத்தை மட்டுமே கொடுக்கக் கூடியது.
மிக அற்புதமாக, ஒரு பாடலை இடமிருந்து வலமாகப் படித்தால் ஒரு அர்த்தத்தையும், அதே பாடலை வலமிருந்து இடமாகப் படித்தால் வேறொரு அர்த்தமும் கொண்ட பாடல் ஒன்று உண்டு. இது பாலிண்டிரோம் வகைதான். ஆனால் இரு வேறு அர்த்தங்கள் உண்டு.
வடமொழியில் அமைந்த அந்த அற்புதப் பாடலைக் காண்போம்.

'ராகவ யாதவீயம்' எனும் பெயர் கொண்ட அந்தக் காவியம் முதல் எழுத்தில் ஆரம்பித்து, கடைசி எழுத்து வரை நேராகப் படித்தால் ராகவன் எனும் ராம பிரானின் கதையைக் கூறும் ராமாயணமாகவும், கடைசி எழுத்தில் தொடங்கி, முதல் எழுத்து வரை, திருப்பிப் படித்தால் கண்ண பிரானின் கதையைக் கூறும் பாகவதமாகவும் பொருள் தரக் கூடிய வகையில் அற்புத, அதிசயமான காவியமாக இயற்றப்பட்டுள்ளது.

ராகவ யாதவீயம்
====> (READ LEFT TO RIGHT)
ஓம் வந்தேஹம் தேவம் தம் ஸ்ரீ தம் ரந்தாரம் காலம் பாஸா ய: I ராமோ ராமாதீராப்யாகோ லீலாமாராயோத்யே வாஸே II
<==== (THE ABOVE SAME IS IN RIGHT TO LEFT) :
ஸேவாத்யேயோ ராமாலாலீ கோப்யாராதீ மாராமோரா: I யஸ்யாபாலங்காரம் தாரம் தம் ஸ்ரீதம் வந்தேஹம் தேவம் II
ராகவ யாதவீயம் எனும் இந்த உன்னத மகா காவியம், கர்நாடக மாநிலத்தில், கி.பி.18ம் நூற்றாண்டில் வாழ்ந்த, வேங்கடாத்வரி எனும் மகாகவி இயற்றியது. மேற்கண்டது முதல் பாடல் மட்டுமே. இது போல் முப்பது பாடல்கள் எழுதியிருக்கின்றார்.

தமிழில் சில சிறப்பு வகை கவிதை அமைப்புகள் :
தமிழில் முரசு பந்தனம், வேல் பந்தனம், நாக பந்தனம், தேர் பந்தனம் போன்றவை உண்டு. உதாரணமாக, முரசு பந்தனம் என்பது, நான்கடிகள் கொண்ட ஒரு பாடலை எழுதி, அப்பாடலைப் படத்திற் காட்டடியபடி முரசு வார்களின் மேல் எழுதவேண்டும்.

அதேசமயம் நான்கு அடிகளையும் முதலடி தொட்டுக் கடையடி ஈறாய், மேலிருந்து கீழ் இழிந்தும், கீழிருந்து மேல் நோக்கியும், தத்தம் வார்கள் போக்கிய வழியிற் சென்று படித்தாலும் பாடலடிகள் கிடைக்கப்பெறும்.
பாடல்

நாதமு தீநய மேதரு முரசே !
காதமுதீநய மேதரு முரசே !
போதமு தீநய மேதரு முரசே !
நாதமு தீநய மேதரு முரசே !

நாக பந்தனம்
முரசு பந்தனம் போல் நாக பந்தனம் என்பதும் மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்தச் சித்திர கவியில் நான்கு பாம்புகள் இணைந்து பின்னிக் கொண்டு அமைந்திருக்கும். நான்கு பாம்புகளுக்கு¡¢ய நான்கு சிந்தியல் வெண்பாக்கள் கற்பிப்பு முறையில், ஒரு பாம்புக்கு ஒரு பாடல் என்றவாறு அப்பாம்புகளின் உடல் வழியில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன.
பாடல் 1.தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதாலெங்ங னறித லுலகியலை - முன்னுவந்துன்னை யறிக முதல்.
பாடல் 2.நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையாதீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன வுடன்பெறு வாயுய் தலை.
பாடல் 3. ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்தீங்கினைத் தீப்படுந் தீ !
பாடல் 4.உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்றபொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயேலென்னை பயக்குமோ சொல் !

வேல் பந்தனம்

மேற்கண்ட கவிதை வடிவம் முருகப்பெருமானுக்குரிய வேல் பந்தனம் எனும் வகையாகும்.
இதில் கண்ட எழுத்துக்களை கீழ்க்கண்டவாறு படிக்க வேண்டும்.
“வால வேல விகாரவா, வார காமனை நாடி வா, வாடி நாடிடுமோ சிவா, வாசி மோகன வேலவா’’
இந்த வேல் பந்தன மந்திரத்தை ஜபித்தால் எதிர்ப்புகள் நீங்கி, முருகனின் அருள் விரைவில் கிட்டும்.
சிதம்பரத்தில், சிவகங்கை குளக்கரை மண்டபத்தில், முருகனின் வேல் பந்தனம் எனும் தமிழ் மந்திர எழுத்துக்கள் கொண்ட மந்திர அமைப்பு வரையப் பட்டுள்ளது. எதிரிகளின் இடத்திற்கு செல்லும்போது, காப்பு எனும் கவசம் அணிந்து செல்வது போர் முறை. அதேபோல் மந்திர காப்பு கவசமாக இந்த வேல் பந்தனம் நம்மைக் காத்து, வெற்றியளிக்கும் என்பது ஐதீகம்.

இதே போல் ரத பந்தம் என்பது மிகச் சிறப்பு வாய்ந்தது.
தேர் போல கட்டங்கள் வரைந்து அதில் எழுத்துக்களை பதித்து அழகிய பாடலாக அமைப்பது.இவற்றைப் பற்றி தனியே ஒரு பதிவில் காண்போம்.
தமிழில் உள்ள தனிச் சிறப்பான அம்சங்கள் கொண்ட பாடல்களையும், அவற்றின் சிறப்புகளையும் தனியே ஒரு பதிவில் காண்போம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

yanthralaya@yahoo.co.in
94434 79572