Tuesday, June 22, 2010

காளியின் அருள் பெற்ற காளிதாசன் (பகுதி - 1)

காளியின் அருள் பெற்ற காளிதாசன் (பகுதி - 1)
கவிரத்ன காளிதாஸன்
காளிதாசன். நிகரற்ற ஒரு வடமொழிக் கவி. சிறந்த நாடகப் புலமை வாய்ந்தவர்.
ஷேக்ஸ்பியர், வேர்ட்ஸ்வொர்த் போன்ற தலைசிறந்த படைப்பாளிகளுக்கும் மேலானவர். கி.பி. 1600களிலேயே இவரின் படைப்புகள் ஜெர்மனி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.(சென்ற பதிவில் வரப்ரஸாதியாக விளங்கும் காளி தேவியைப் பற்றி பார்த்தோம். காளியின் அருள் பெற்ற பலரில் சிறந்தவராக விளங்கும் காளிதாசனைப் பற்றி காண்போம்.)
இவ்வளவு புகழ்வாய்ந்த காளிதாசன் ஆரம்பத்தில் ஒரு அறிவுத் திறன் இல்லாத மூடனாக இருந்து, பின் காளியின் அருளால் கவித் திறன் பெற்றவர்.
காளிதாசன் வாழ்க்கையே மிகவும் சுவாரசியம் வாய்ந்தது. அவரின் வாழ்க்கை வரலாற்றின் சில சுவாரசியமான சம்பவங்களைப் பார்ப்போம்.
இன்றைய நாட்களில் பாட்னா என்று அழைக்கப்படும் பாடலிபுத்ரா நகரத்தில் ஆடு மேய்க்கும் ஒரு தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
பிறந்ததில் இருந்தே அறிவுத்திறன் மிகவும் குறைவானவராகவே இருந்தார்.சிறுவனாக இருந்தபோது, ஒரு மரத்தின் கிளையின் கடைசியில் அமர்ந்து, கிளை ஆரம்பிக்கும் மரத்தின் பகுதியை வெட்டிக்கொண்டிருந்தார்.
அதாவது, நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார். இச்செயலைக் கண்ட அனைவரும் ஏளனமாகச் சிரித்தனர். ஏனெனில், மரம் வெட்டி முடிந்தால் கீழே விழுவானே என்ற ஏளனச் சிரிப்பு. அதன்படியே, காளிதாசன் மரத்தை வெட்டி முடித்ததும் பொதேர் என்று கீழே கிளையுடனே விழுந்தார். அனைவரும் சிரித்து விலகினர். வாலிப வயதை அடைந்தார்.
சந்தர்ப்பவசத்தால், ஒரு இளவரசியை மணக்க நேரிட்டது. இளவரசியோ அறிவுத் திறன் மிக்கவர். திருமணமான பிறகு இவரின் அறிவற்ற திறனைக் கண்டு மனம் வெதும்பிய இளவரசி, அறிவுச் செறிவுடன் வந்தால் மட்டுமே வாழ்க்கை நடத்தமுடியும் என்று பிரிந்து விட்டார்.
பிரிவுத் துயர் தாங்காத காளிதாசர் இளவரசியை நோக்கி, தான் அறிவு பெறச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டபோது, உஜ்ஜயினி மஹாகாளி தெய்வம் மட்டுமே தங்களுக்கு அறிவை வழங்க முடியும் என்று கூறி சென்றுவிட்டார்.
காளிதாசரும் காளியை அடைந்து அனுதினமும் அறிவுத் திறன் வேண்டி பிரார்த்தனை செய்வார். காளியும் அவரின் தூய்மையான பக்திக்கு இரங்கி, காளிதாசன் முன் தோன்றி, கையில் இரு கிண்ணங்களை வைத்துக்கொண்டு, காளிதாசனிடம் - ஒரு கிண்ணத்திலுள்ள பாயசத்தை அருந்தினால் அறிவு வரும், மற்றொரு கிண்ணத்திலுள்ள பாயசத்தை அருந்தினால் ஆற்றல் வரும், இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள் என்கிறாள். காளிதாசனோ, அறிவும் ஆற்றலும் இரண்டும் வேண்டும் என எண்ணிக்கொண்டு, காளியை நோக்கி, இரண்டில் எது நன்றாக இருக்கின்றதோ அதைக் குடிக்கின்றேன் என்று வெகுளியாகச் சொன்னார். மனமிரங்கிய காளி, காளிதாசனிடம் இரண்டு கிண்ணங்களையும் கொடுக்கிறாள். காளிதாசன் அந்த இரண்டு கிண்ணங்களில் இருந்த பாயசங்களையும் நொடிப்பொழுதில் குடித்துவிடுகின்றார். இப்பொழுது எனக்கு அறிவும் ஆற்றலும் வந்துவிடுமா என காளியை நோக்கிக் கேட்கிறார். சிரித்தபடியே காளியும், அவ்வண்ணமே நடக்கட்டும் என்று வரம் தந்து மறைகின்றாள்.(அம்பிகையின் அருளால் கவிநயம் பெற்ற காளமேகம் பற்றிக் காண இங்கே கிளிக் செய்யவும்.)அருமையான கவிகளை இயற்றும் திறன் பெற்று, மொழியை ஆளும் திறன் பெற்றார் காளிதாசர்.
காளிதாஸர் ஒரு வரகவி. காளிதாஸருக்கு மொழியின் மீதிருந்த ஆளுமை எல்லையில்லாதது. உவமைக்கொரு காளிதாஸன் (உபமா காளிதாஸஸ்ய ) என்பர்.
பல அற்புதக் காவியங்களை இயற்றினார். (ரகுவம்சம், குமாரசம்பவம், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், மேகசந்தேசம் போன்றவை..)
காளிதாசனின் அறிவில் மகிழ்வு கொண்ட உஜ்ஜயினையை ஆண்டுகொண்டிருந்த, அறிவிற்சிறந்த போஜராஜன் தனது அவைப் புலவர்களில் மேலானவராக அமைத்துக் கொண்டார்.
நவரத்தினங்கள் என புகழ் பெற்ற ஒன்பது புலவர்கள் போஜராஜனின் அரசவையை அலங்கரித்திருக்கின்றனர். ( 1.தன்வந்தரி, 2.க்ஷபனகர், 3.அமரசிம்ஹன், 4.ஷங்கு, 5.வேதாளபட்டர், 6.கடகார்ப்பரர், 7.காளிதாசர், 8.வராஹமிஹிரர், 9.வரருசி)

டாடம் டடம் டம் டடடம் ட டம் டா:
ஒருமுறை போஜ மஹாராஜா குளிப்பதற்காக செல்லும் போது அரண்மனையிலிருந்த ஒரு பெண் கையிலிருந்த குடத்தை ஓசையெழுப்ப தவற விட்டாள். இந்த சப்தத்தை கேட்ட ராஜா பிறகு அவையில் வீற்றிருக்கும் போது இந்த சப்தத்தை கடைசி அடியாக கொண்டு கவிதை எழுத வேண்டுமென்று போட்டியொன்றை அறிவித்தார்.
அனைவரின் அமைதிக்கு நடுவில் காளிதாசர் எழுந்து கவிதை பாடினாராம்
राजभिषेके जलमाहरन्त्याः
हस्ताच्च्युतो हेमघटो युवत्याः .
सोपान मार्गेण करोति शब्दं
ठाठं ठठं ठं ठठठं ठ ठं ठाः
ராஜபிஷேகே ஜலமாஹரன்த்யா:
ஹஸ்தாச்யுதோ ஹேமகடோயுவத்வா:
ஸோபான மார்கேண கரோதி சப்தம்
டாடம் டம் டடடம் ட டம் டா:


இன்னொரு சமயம் சம்ஸ்கிருத எழுத்துக்களான "க" வரிசையை ஒரே கவிதையில் கொணர முடியுமா என போஜராஜன் கேட்க எழுதியது தான் இது.
का त्वं बाले कान्चनमाला
कस्याः पुत्री कनकलतायाः .
हस्ते किं ते तालीपत्रं
कावा रेखा क ख ग घ
கா த்வம் பாலே காஞ்சனமாலா = யாரது குழந்தை? - காஞ்சனமாலா.
கஸ்யா புத்ரி கனகலதாயா: = யாரோட பெண்? - கனகலதாவின் பெண்.
ஹஸ்தே கிம் தே தாலிபத்ரம் = கையில் என்ன இருக்கின்றது? -
பனையோலை புத்தகம்.
காவா ரேகா க(1) க(2) க(3) க(4) =
அதில் என்ன எழுதியிருக்கிறது? - க(1) க(2) க(3) க(4).
எப்படி அழகாக முடித்திருக்கின்றார் பாருங்கள். இதிலிருந்தே அவரின் கவிதாவிலாசம் தெரிகின்றது அல்லவா?
நானே நீ!
அம்பிகையின் அருளை நேரடியாகப் பெற்றதால், காளிதாசன் அம்பிகையின் ரூபமாகவே கொண்டாடப்படுகின்றார். ஒரு முறை பவபூதி, தண்டி, காளிதாசர் ஆகிய பெரும் புலவர்களிடையே பெரும் போட்டி எழுந்தது. மூவருமே அம்பிகையின் அருள் பெற்றவர்கள். அம்பிகையையே முடிவு சொல்லட்டும் என்று அம்பிகையை மூவரும் அழைத்தனர். அம்பிகையும் தோன்றினாள். போட்டி மிகக் கடினமானது என்றாள். கவிக்கு ஓர் தண்டி, பண்டிதர்க்கு ஓர் பவபூதி என அறிவித்தாள் அம்பிகை. பின் தான் யார் என காளிதாசன் வினவ, காளி "த்வமேவாஹம், த்வமேவாஹம், த்வமேவாஹம் ந ஸம்சய:" என்றாள். நானேதான் நீ - சந்தேகமேயில்லை என்றாள் அம்பிகை. காளியின் அம்சமே என்று கொண்டாடப்படுபவர் காளிதாசன்.
ஸஸேமிரா, ஸேமிரா, மிரா, ரா.ஒரு சமயம் அரசவையில் அனைவரும் அமர்ந்து கொண்டு அளவளாவிக்கொண்டிருந்தபோது, வீரர்கள் சிலர் இளவரசனை அழைத்துவந்தனர்.
இளவரசனைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி. ஏனென்றால், இளவரசன் பிரமை பிடித்தவன் போல ஒரே திசையைப் பார்த்துக்கொண்டு ஸஸேமிரா, ஸஸேமிரா என்று பிதற்றிக் கொண்டேயிருந்தான். அதிர்ச்சி கொண்ட அரசன் என்னவாயிற்று எனக் கேட்க, வீரர்களோ, காட்டில் தனியே சுற்றிக் கொண்டிருந்தவரை அழைத்து வருகின்றோம். அங்கிருந்தே இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார் என கூறினர்.
அரசனுக்கோ பெரும் வருத்தம் உண்டாயிற்று. சிறு வயது முதலே வீரம் நிறைந்த தன் குமாரன் இப்படி பித்துப் பிடித்தவன் போலாகிவிட்டானே? அடுத்த ராஜாவாக வரவேண்டியவன் இப்படி பிதற்றுகின்றானே, வேட்டைக்குப் போய்வருகின்றேன் என்று சொல்லிச் சென்ற ராஜகுமாரன் இப்படி ஆகிவிட்டானே என்று மிகவும் மனம் வெதும்பினான்.
பலவிதமான மருத்துவங்களைச் செய்து பார்த்தும் தீர்வு இல்லை. காலம் கடந்தது. இதற்கு ஒரு சரியான தீர்வு தருபவர் காளிதாசனே என்று நினைந்து காளிதாசனை அழைத்து வந்து விபரம் கூறினான்.
காளிதாசன் இளவரசனைப் பார்த்தார்.
அவனோ, முன்னரைப் போலவே ஸஸேமிரா, ஸஸேமிரா என்றே பிதற்றிக் கொண்டிருக்கின்றான். வேறு எதுவும் அவன் பேசவில்லை. எதைப்பற்றி கேட்டாலும் ஸஸேமிரா என்றே சொல்லிக்கொண்டிருந்தான். ஸஸேமிரா என்றால் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்.
காளிதாசன் காளியை மனதில் நினைந்தார்.
பிறகு, இளவரசனைப் பார்த்து உனக்கு ஒரு கதை சொல்கின்றேன் கேள் என்றார்.
வடமொழி "ஸ" என்னும் எழுத்தில் ஆரம்பித்து இந்தக் கதையைச் சொல்கின்றார்.
ஒரு பெரும் அரசை ஆண்டுகொண்டிருந்த அரசனுக்கு அழகேயுருவான இளவரசன் பிறந்தான். அவனைச் சீருடன் சிறப்புடனும் அறிவும், போர்த்திறனும் இணைந்த ராஜகுமாரனாக அரசன் வளர்த்து வந்தான். அந்த இளவரசன் ஒரு நாள் காட்டுக்கு வீரர்களுடன் வேட்டையாடச் சென்றான். ஒரு சமயம் ஆர்வமிகுதியால், விரைவாக சென்றமையால், வீரர்களை விட்டுப் பிரிந்தான். தனியே சுற்றிக் கொண்டிருந்த இளவரசனை ஒரு பசித்த புலி பார்த்து விட்டது. அந்தப் புலி இளவரசனைக் கொல்ல அவனைத் துரத்தியது. இதனைக் கண்ட இளவரசன் ஓட்டமெடுத்தான்.
இதுவரை சொன்னதும் இளவரசனிடம் ஒரு மாற்றம். ஸஸேமிரா என்று சொல்லிக் கொண்டிருந்தவன் "ஸ" எனும் எழுத்தை விட்டுவிட்டு "ஸேமிரா, ஸேமிரா" என்று புலம்ப ஆரம்பித்தான்.
காளிதாசர், "ஸே" எனும் எழுத்தில் தொடங்கி, கதையைத் தொடர்கின்றார்.

இளவரசன் எங்கு ஓடினாலும், புலி அவனைத் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. இடையில் ஒரு மிகப் பெரும் மரத்தின் மீது ஏறிக் கொண்டான். மரம் ஏறத் தெரியாத புலி அவனை விட மனமில்லாமல் கீழேயே காத்திருந்தது. மரம் ஏறிக் கொண்டிருந்த இளவரசன் மரத்தின் மேலே கரடி ஒன்றைக் கண்டு பயந்தான். அந்தக் கரடியை நோக்கி என்னை ஒன்றும் செய்து விடாதே, உன்னை நாடி வந்துவிட்டேன் என்று கூறினான். கரடியும், என்னை நாடி அபயம் தேடி வந்து விட்டாய் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று உறுதி கூறியது. மனம் தெளிந்த இளவரசன் கரடியின் பாதுகாப்பில் இருந்தான். கீழே பார்த்தால், புலி இன்னமும் காத்துக் கொண்டேயிருக்கின்றது. நேரம் கடந்து கொண்டேயிருந்தது. இளவரசனுக்கோ களைப்பாக இருந்தது. கரடியைப் பார்த்து, நான் சற்று உறங்குகின்றேன், நான் கீழே விழுந்துவிடாமல் நீ பார்த்துக் கொள் என்று சொல்லித் தூங்கிவிட்டான்.


இப்பொழுது இளவரசனிடம் இன்னும் ஒரு மாற்றம். ஸஸேமிரா என்று சொல்லிக்கொண்டிருந்தவன், ஸ & ஸே என்பனவற்றை விட்டு வெறும் "மிரா மிரா" என்று கூற ஆரம்பித்துவிட்டான்.
அடுத்து, காளிதாசர் "மி" எனும் எழுத்தில் ஆரம்பித்து கதையை தொடர ஆரம்பிக்கின்றார்.

கீழேயிருந்த புலி, கரடியைப் பார்த்து, மனிதர்கள் நம் எதிரிகள், ஆகவே இளவரசனை என்னிடம் தள்ளிவிடு, நாம் இருவரும் பாதி பாதி எடுத்துக்கொள்வோம் என்றது. கரடியோ, என்னை அண்டி வந்துவிட்டவனை என்னால் கீழே தள்ள முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டது. நேரம் கடந்தாலும் புலி கீழேயே காத்திருந்தது. இளவரசனுக்கு முழிப்பு வந்தது. கரடிக்கோ களைப்பானது. கரடி இளவரசனை நோக்கி, நான் சற்று நேரம் தூங்குகின்றேன், என்னைப் பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டது. கீழே காத்திருந்த புலி இளவரசனை நோக்கி, எனக்கோ பசி மிகவும் அதிகமாகிவிட்டது. தூங்கிக்கொண்டிருக்கும் கரடியை நீ கீழே தள்ளிவிட்டால், கரடியை நான் சாப்பிட்டு, அதற்கு பதிலாக உன்னை விட்டுவிடுகின்றேன் என்று கூறியது. புலியின் வஞ்சக வார்த்தையில் மயங்கிய இளவரசன், தூங்கிக் கொண்டிருந்த கரடியை கீழே தள்ளிவிட்டான்.
இப்பொழுது இளவரசனிடம் இன்னும் ஒரு மாற்றம். கண்களில் கண்ணீர் வர இளவரசன், தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு ஸ, ஸே, மி எனும் எழுத்துக்களை விட்டு, "ரா, ரா, ரா," என்று பிதற்ற ஆரம்பித்துவிட்டான்.
காளிதாசர் "ரா" எனும் எழுத்தில் ஆரம்பித்து, மறுபடியும் கதையை ஆரம்பித்து, நன்றி செய்தலுக்கு நன்றி செய்யும் குணத்தைப் போற்றவும் செய்து, கூற ஆரம்பித்தார்.

கரடியின் கீழே விழுந்து கொண்டிருந்தபோது, அனிச்சை செயலாய், ஒரு கிளையில் கை பட்டு, அக்கிளையை பிடித்துக் கொண்டு கீழே விழாமல் தப்பித்தது. மேலே வந்து, இளவரசனிடம் உனக்கு உதவி செய்த எனக்கு நீ செய்யும் உதவி இதுதானா எனக் கோபமாகக் கேட்டு, நீ விலங்குகளை விட கேவலமானவன், சிந்திக்கும் செயல் இழந்து பைத்தியமாக ஆவாய் என சாபமிட்டுவிட்டது. சாப விமோசனமாக இன்று நடந்ததை யார் உனக்குச் சொல்கின்றாரோ, நன்றியின் பெருமையை நீ எப்போது உணர்கின்றாயோ அன்று நீ தெளிவடைவாய் என்றும் கூறியது. அது முதல் இளவரசன் ஸஸேமிரா, ஸஸேமிரா என்று சொல்லிக்கொண்டிருக்க ஆரம்பித்துவிட்டான். கீழே காத்திருந்த புலி பசிமிகுதியால் வேறு இடத்திற்குப் போய்விட்டது. கரடியோ இளவரசனை கீழே பத்திரமாக இறக்கிவிட்டு, வீரர்கள் இருந்த பகுதிக்கு கொண்டுவிட்டு சென்றுவிட்டது. வீரர்கள் இவனைப் பார்த்து என்ன நடந்தது எனக் கேட்க, பிரமைப் பிடித்தவனாக "ஒன்றும் இல்லை" என்று பொருள்பட ஸஸேமிரா என்று கூற ஆரம்பித்தான். ஸஸேமிரா ஸஸேமிரா என்று சொல்லிக்கொண்டிருந்த இளவரசனை வீரர்கள் அரசனிடம் சேர்ப்பித்தனர். (இந்தக் கதையின் ஆரம்பத்தை மீண்டும் படியுங்கள். அதில் வீரர்கள் இளவரசனை அரசனிடம் அழைத்துவரும் நிகழ்ச்சி வரும்.)

(நன்றி மறப்பது நன்றன்று - என்று ஐயன் திருவள்ளுவர் கூறிய குறள் தான் இங்கு நினைக்கத் தூண்டுகிறது. திருவள்ளுவரைப் பற்றி காண சென்ற பதிவுக்குச் செல்லவும்.)

இக்கதையைக் கேட்ட இளவரசனிடம் மேலும் நல்ல முன்னேற்றமான மாற்றம். இளவரசன் தன் பழைய நிலைக்கு வந்துவிடுகின்றான். ஸஸேமிரா என்று சொல்லாமல், கண்களில் கண்ணீருடன், நன்றி செய்தலின் அருமைகளை உணர்ந்து கொண்டு, தான் செய்த தவறுக்கு மனம் வருந்தி, காளிதாசனைக் கைகூப்பி வணங்கினான்.
மன்னனிடம் காளிதாசன், இக்கதையில் வரும் ராஜகுமாரன் வேறு யாரும் அல்ல, உன் குமாரனாகிய இந்த இளவரசன் தான் என்று கூறுகின்றார். ராஜகுமாரனின் பொலிவான நிலையில் பார்த்த மன்னன் மனம் மிக மகிழ்ந்து அளவற்ற பரிசுகளை காளிதாசனுக்கு வழங்குகின்றான்.

காளிதாசன் = ஜெயதேவர் - அஷ்டபதி - போஜசம்பு - ஆகியன சம்பந்தமாக படிக்க கீழ்க்கண்ட லிங்க் செல்லுங்கள்.
http://natarajadeekshidhar.blogspot.in/2010/07/2.html



- நி.த. நடராஜ தீக்ஷ¢தர்-
செல் : 94434 79572-
எனது முந்தைய பதிவுகள் : தலைப்பின் மீது க்ளிக் செய்தால் விபரம் விரியும்.
தைப் பூச நடனம்,
மோட்சம் தரும் காட்சி (கால கணிதம் - 5 - மோட்ச தீபம்),

6 comments:

jagadeesh said...

அருமை

Anonymous said...

நமஸ்காரம் தீக்ஷிதரே,
நானும் ஒரு அர்ச்சகர் தான்.விருத்தாசலம் அருகில் உள்ளேன்.தங்கள் வலையை சில நாட்களாக படிக்கிறேன்.நவாவரண பூஜை பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது.மேலும் கவி காளமேகம்,காளிதாசர் போன்றோர் பற்றிய பதிவுகள் தங்களின் தனி நடையை காட்டுகிறது.நானும் ஒரு வலைப்பதிவரே.என்னுடைய வலையின் பெயர் ஆகமக்கடல்.
http://aagamakadal.blogspot.com

Anonymous said...

தங்களின் ஜிமெயில் முகவரியை அளித்தால் மிக உதவியாக இருக்கும்

Geetha Sambasivam said...

காளிதாசனின் சரித்திரம் தெரிஞ்சாலும் இப்படி ஒரு இளவரசன் செய்த தப்பைத் திருத்தியது பற்றி இப்போத் தான் தெரியும், முற்றிலும் புதிய விஷயம், அருமையான எழுத்து. நன்றி.

Anonymous said...

கீதா சாம்பசிவம் has left a new comment on your post "காளியின் அருள் பெற்ற காளிதாசன் (பகுதி - 1)":

காளிதாசனின் சரித்திரம் தெரிஞ்சாலும் இப்படி ஒரு இளவரசன் செய்த தப்பைத் திருத்தியது பற்றி இப்போத் தான் தெரியும், முற்றிலும் புதிய விஷயம், அருமையான எழுத்து. நன்றி.

Anonymous said...

அன்புள்ள நடராஜ தீட்சிதருக்கு,
நமஸ்காரம். காளிதாசனின் சசேமிரா பற்றிய கதையை நான் சிறுவனாக இருந்தபோது (சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்) என் தந்தை சொல்லியிருக்கிறார். என் தந்தை ஸ்ரீ குப்புசுவாமி சிதம்பரம் போஸ்ட் ஆபீசில் 1970 களில் postmaster ஆகப் பணி புரிந்தவர். தற்போது உங்கள் blog இல் அதைப் பார்த்ததும் மறைந்த என் தந்தையின் நினைவு வந்தது. உங்கள் blog மிக அருமை. தொடரட்டும் உங்கள் தொண்டு.

கணேசன்
22 oct 2011