Thursday, July 22, 2010

அருள் நிறைத்த ஆஷாட நவராத்திரி ! ஆனந்தம் அளித்த ஆஷாட நவராத்திரி !!

அருள் நிறைத்த ஆஷாட நவராத்திரி !
ஆனந்தம் அளித்த ஆஷாட நவராத்திரி !!


நெய்வேலி, ஸத்சங்கம் - மணித்வீபம், ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை ஆலயத்தில் - உலக நன்மை கருதியும், அனைவருடைய வாழ்விலும் வளங்கள் யாவும் பெருகவும், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து விவசாயம் மேன்மை அடையவும் , ஆஷாட நவராத்திரி (24.06.17 - 02.07.17) வைபவம், மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

சாக்த வழிபாட்டில் கூறப்பட்டிருக்கும் நான்கு நவராத்திரி வகைகள் :
1. சாரதா நவராத்திரி (புரட்டாசி மாதம்)
2. வசந்த நவராத்திரி (பங்குனி மாதம்)
3. ஆஷாட நவராத்திரி (ஆனி மாதம்)
4. சியாமளா நவராத்திரி (தை மாதம்)
மேற்கண்ட நான்கு நவராத்திரிகளும் ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ ராஜசியாமளா தேவி ஆகிய தெய்வங்களுக்கு முறையே கொண்டாடப்படுவது.
ஆஷாட நவராத்திரி உலக வளமைக்காகவும், தானியங்கள் செழிக்கவும், செல்வங்கள் பெருகவும், எதிர்ப்புகள் அகலவும் அம்பிகையை பிரார்த்தனை செய்து கொண்டு நடத்தப்படுவது.
ஆஷாட நவராத்திரியின் பிரதான தெய்வம் ஸ்ரீ வாராஹி தேவி.
ஸ்ரீ வாராஹி தேவி, ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ சக்ர தேவதைகளுள் மிகவும் மேன்மையானவர். அம்பிகையின் மந்திரிகளுள் ஒருவர். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் அருளுபவள். தமது கரங்களில் விவசாயம் சம்பந்தமான தொழில்கள் மேம்பாடு அடைய ஏர்கலப்பையும், உலக்கையையும் ஏந்தியவள்.
கால கணிதப்படி - வெள்ளைப் பன்றி உருக்கொண்டு இந்த பூவுலகை அரக்கர்களிடமிருந்து மீட்ட - ஸ்வேத வராஹ கல்பத்தில், வராஹி தேவி வழிபாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
சாந்திரமான கால கணித முறைப்படி ஆஷாட மாதத்தில் வரும் பஞ்சமி திதி ஸ்ரீ வாராஹி தேவியை வழிபட உகந்தது. ஆஷாட நவராத்திரியின் ஒன்பது தினங்களின் மத்தியில் அமையும் ஒரு நாள் - நடு நாள் - ஐந்தாம் நாள் - பஞ்சமி திதி - ஸ்ரீ வாராஹி தேவியை வழிபாடு செய்வது வளங்கள் அனைத்தையும் தந்திடும். (ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாய நம:)
நம் உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீ வாராஹி தேவி.
மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் அளித்திடும் தன்மை கொண்டவள் ஸ்ரீ வாராஹி தேவி.
























ஸ்ரீ வாராஹியின் பனிரண்டு பெயர்களைச் சொன்னாலே அம்பிகை ஸகல கார்ய சித்தியும், அளவற்ற அருளையும் அருளுவாள்.
1. பஞ்சமீ 2. தண்டநாதா 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வாராஹி 7. போத்ரிணி 8. சிவா 9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி
ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்து முடித்தபின் தான் ஆவரண பூஜை பூர்த்தியாகும்.

பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ஸ்ரீ வாராஹி மாலா போற்றுகின்றது.
சாரதா (புரட்டாசி) நவராத்திரி என்றால் கொலு எனும் சிறப்பு அமைப்பு கொண்டு அம்பிகையை வழிபடுவது போல, ஆஷாட நவராத்திரியில் தானியங்கள் கொண்டு பூமியில் கோலங்கள் (ரங்கோலி) இட்டு வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.

கோலம் போடுவது என்பது அம்பிகையை (லக்ஷ்மியை) மனமார வரவேற்கும் வடிவம். லக்ஷ்மியின் வருகை தினமும் நம் நிகழ வேண்டும், நித்யம் வீட்டில் வாசம் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது மரபாக இருந்து வருகின்றது. கோலமிட்ட வீட்டில் அம்பிகை கொலுவிருப்பாள் என்பது ஆன்றோர் வாக்கு.
ஸத்சங்கம் மணித்வீபத்தில், ஸ்ரீ மாதா புவனேஸ்வரிக்கு ஆஷாட நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும், ஒன்பது விதமான அலங்காரங்கள் (ஐந்த்ரீ, ப்ராஹ்மி, வைஷ்ணவி, சாமுண்டா, கௌமாரி, மாஹேஸ்வரி, சாகம்பரி, வாராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி) கொண்டு கண்கொள்ளாக் காட்சி நல்கினாள்.
ஆஷாட நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் தானியங்கள் (நெல், அரிசி, கோதுமை, துவரை, பயறு, கொண்டைக் கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, கம்பு, கேழ்வரகு, தினை ஆகியன) கொண்டு தானிய வண்ணக் கோலங்கள் போடப்பட்டன. ஒன்பதாம் நாளாகிய பூர்த்தி தினத்தில் அம்பிகை உறையும் ஸ்ரீ சக்ரமே தானிய கோலமாக இடப்பட்டது.
ஒவ்வொரு நாளும் அம்பிகையின் அலங்காரத்திற்கு ஏற்ப ஆலய வாசல் நுழைவாயிலில் அந்தந்த அம்பிகைக்குரிய அம்சங்களையும் (வாகனம்) தானிய வண்ணக் கோலங்கள் அலங்கரித்தன.

ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் காலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. கட்கமாலா ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டன.
மாலையில் தேவிக்குரிய ஸ்ரீ நவாவரண பூஜையும், ஆஷாட நவராத்திரி நாயகியான ஸ்ரீ வாராஹி தேவிக்குரிய சக்தி வாய்ந்த, பலன்களை உடனடியாக அளிக்கக் கூடிய வகையில் அமைந்த ஸ்ரீ வாராஹி ஸஹஸ்ரநாம அர்ச்சனையும், வேதார்ப்பணமும், கானார்பணமும் இனிதே நடந்தேறியது.
பூஜையின் ஸங்கல்பத்தில் சொல்லப்பட்டது போல (ஆஷாட நவராத்ரி ... கர்த்ரூணாம், காரயித்ரூணாம்..... அனுமோதகானாம்........) பூஜைகளைக் கண்ணுறுபவர்கள், பங்கேற்பவர்கள், பூஜைகளைப் பற்றி கேள்விப்படுபவர்கள், இந்த பூஜையை மனதாலேயே நினைத்தவர்கள், உலக மக்கள் அனைவரும் வளமும் நலமும் பெற்று, வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான தானியங்கள் நிறைவாகக் கிடைக்கப்பெற்று, வாழ்வாங்கு வாழ பிரார்த்தனை செய்துகொண்டு ஆஷாட நவராத்திரி வைபவம் நிகழ்த்தப்பட்டது.
ஆஷாட நவராத்திரி அனைவருக்கும் என்றும் நெஞ்சை விட்டு நீங்காத, உள்ளம் கனிந்த உவகையை நிலைநிறுத்தியது.
அனைவருக்கும் அம்பிகை ஆனந்தத்தை நல்கினாள்.

- "ஸ்ரீவித்யா உபாஸக"- நி.த. நடராஜ தீக்‌ஷிதர்
cell : 94434 79572.
Pl. visit to : www.facebook.com/deekshidhar


10 comments:

SelvaRani said...

அருமையாக, அனைவர்க்கும் எளிதில் விளங்கும் வகையில் எழுதி உள்ளீர்கள்!

தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

-செல்வராணி

S.SAVITHIRI said...

THIS IS THE FIRST TIME I CAME TO KNOW AOOUT A.NAVARATHRI.THE EXPLANATIONS ABOUT VARAHIDEVI,THE MOOLA MANTHRA,AND THE DHANYAKOLAM
EVERYTHING WAS EXELLENT.KEEP ON
WRITTING.BEST WISHES.
S.SAVITHIRI

Geetha Sambasivam said...

வாராஹி பற்றிய புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டேன். நன்றி.

sowmya.R said...

காரணம் அறியாத காரியங்கள் அனைத்தும் தங்கள் பதிவுகளின் முலம் காரணம் அறிந்த காரியங்களாகின்றன. விளக்கங்கள்யாவும் மிக அருமை. நன்றி.

geethasmbsvm6 said...

மீள் பதிவுக்கு நன்றி. வாராஹி குறித்த மேல் அதிகத் தகவல்களையும் அளிக்கவும்.

geethasmbsvm6 said...

தொடர

Chidambaram Venkatesa Deekshithar said...

super kolangal and decorations

vijayakumar said...

GOD BLESS YOU FOR THE NOBLE WoRK &
thank you veru much for the knowledge.
vijyakumar - chennai

Venkateswaran said...

Wonderful article on Ashada navarathri. Continue the good work...
S.Venkateswaran (Rayanallur)
Detroit

Arthur said...

Grreat blog