Tuesday, March 1, 2011

ஆடல்வல்லானின் ஆனந்த நடனங்கள்


ஆடல்வல்லானின் ஆனந்த நடனங்கள்
(சனி பகவான் காண தனி நடனம்)

பிரபஞ்சத்தின் இயக்கத்தினைத் தொடங்கியது ஆதிப் பரம்பொருளாகிய சிவபெருமான் தான் என்று சிவ மஹா புராணங்கள் கூறுகின்றன.
நடனம் என்பது இயக்கத்தைக் குறிக்கக் கூடியது.
தன்னுள் ஒடுங்கியிருந்த அனைத்து உயிர்களையும் தன் ஆடலின் மூலம் உதிர்த்து உய்வித்தார்.
உலகம் உய்விக்க நடனமாடியருளியவர் சிவபெருமான்.
ஆடல் கலைக்கு நாயகனாக விளங்கக் கூடியவர்.

ஆனந்த நடனம் என்பது சிவபெருமான் தன் வலது காலை ஊன்றி நிறுத்தி,
இடது காலை வீசி ஆடியத் திருக்கோலம். தூக்கிய இடது காலே குஞ்சிதபாதம் ஆகும். அந்தக் களிப்பானக் காட்சியைப் பார்ப்பதே ஸஞ்சித பாபங்களை நீக்கி ஆனந்தம் தரும்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் எனும் ஐவகைத் தொழிலையும் செய்யும் ஆனந்தத் தாண்டவம் (பஞ்சக்ருத்ய பரமானந்த தாண்டவம்) மற்றனைத்துத் தாண்டவங்களிலும் மேலானது என மெச்சப்படுகின்றது.
ஆனந்தத் தாண்டவத்தை சிதம்பரத்தின் ஆனந்தமய கோசமாகிய பொன்னம்பலம் எனும் சித்ஸபையில் நடராஜர் என்றும் திருநடம்புரிகின்றார்.

சிவபெருமான் ஆடிய ஆனந்த நடனம் தான் உலக உற்பத்திக்கு ஆதாரமாகத் திகழ்கின்றது. அணுவிற்குள்ளும் (Tao of Physics), அண்டசராசரமெங்கும் (cosmic dance) ஆனந்தக் கூத்தினை புரிவது நடராஜ மூர்த்தி.

ஐந்தொழில் நடனம் என்று போற்றப்படுவதோடு, பஞ்சபூதங்களையும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) தன்னகத்தே கொண்டு ஆனந்த நடனம் ஆடுகின்றார்.
நிலத்தில் தான் தாண்டவம் நிகழ்கின்றது. தலையில் கங்கை (நீர்). இடது கையில் அக்னி (நெருப்பு), வீசி ஆடும் ஆட்டத்தில் இடுப்பில் இருக்கும் துணி – உதர பந்தம், காற்றில் பறக்கின்றது. தலை ஆகாசத்தைத் தொடுகின்றது.

நடராஜ மூர்த்தி :
அனைத்து தெய்வங்களும் தொழுது ஏற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர். வேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள் போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.


ஆடல் நாயகனின் அருளாடல்களை புராணங்கள் பலவகையில் புகழ்கின்றன.
Photobucket

பரதநாட்டியக் கலைக்கான 108 தாண்டவங்கள் எனவும், நவதாண்டவங்கள் எனவும், ஸப்த தாண்டவம் எனவும், பஞ்ச தாண்டவம் எனவும் ஆடல் நாயகனின் அருளாடல்களின் நிலைகளை புராணங்களில் காணமுடிகின்றது.

சிவபெருமானுக்கும் ஐந்து என்ற எண்ணுக்கும் அநேக தொடர்புகள் உள்ளன.

சிவபெருமானுக்குரிய பிரதான மந்திரமாகிய பஞ்சாக்ஷரம் ஐந்து எழுத்து.
நடராஜராஜர் செய்யும் செயல்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்).
பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாக அமைந்த ஸ்தலங்கள் ஐந்து.
பொற்சபை, வெள்ளிசபை, தாமிரசபை, ரத்னசபை & சித்திர சபை என்று ஐந்து மன்றங்களில் ஆடியருளியவர்.
மகேஸ்வரனின் சக்தி ரூபங்கள் ஐந்து (ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி).
சிதம்பர ஸ்தலத்தின் முக்கிய பிரகாரங்கள் ஐந்து.
ஈஸ்வரனின் முகங்கள் ஐந்து.
சித்தாந்தக் கலைகளின் ஐந்திற்கும் நாயகராக விளங்குபவர்.

ஆனந்த நடனக்காட்சியை ஐந்து தருணங்களில் ஆடியுள்ளதாக புராண விளக்கங்களில் அறியமுடிகின்றது.

ஆதியில் சிவபெருமான், உலகிலுள்ள அசையும் பொருள் அசையாப் பொருள், அதிலடங்கிய ஒவ்வொரு அணுவையும் கூட உய்விக்க ஆனந்த நடனம் ஆடினார். அதனால் உலகம் உருவாகி, அவ்வுயிர்கள் அனைத்தும் எல்லையில்லா மகிழ்ச்சிகொண்டு, இயங்க ஆரம்பித்தது. இதுவே ஆதி ஆனந்த தாண்டவம்.
***
பொன்னார் மேனியரான சிவபெருமான், உமை அம்பிகையை, ஊடலில் ஒரு சமயம், கரிய நிறத்தினள் எனபொருள் பொதிய காளி என அழைத்தார். அம்பிகையும் பின்னொரு சமயம் காளியுருவம் கொண்டு, சிவனின் ஆனந்த நடனத்தை மட்டுமல்லாமல், 108 கரணங்களையும் காண ஆசை கொண்டு, சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். போட்டியின் இறுதிக்கட்டத்தில் சிவன், ஊர்த்துவ தாண்டவம் என அழைக்கப்படும் தாண்டவத்தை (தன் காதிலுள்ள குண்டலத்தைக் கீழே விழச் செய்து, அதைத் தன் காலாலேயே, காதில் பொருத்திக் கொள்ளும்படியாக நடனம் அமைத்து) ஆடினார்.
பெண்ணாகிய அம்பிகை, காலைத் தன் தலை வரைத் தூக்கி நடனமாட வெட்கி, தான் தோற்றதை ஒப்புக் கொண்டு, தான் விரும்பிய ஆனந்த நடனத்தை சிவனை ஆடுமாறு வேண்டிக் கொண்டு கண்டுகளித்தாள். இதுவே காளிகானந்த தாண்டவம்.
***
வைகுண்டத்தில் ஒரு சமயம் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருந்த விஷ்ணு, ஆதியான ஆனந்த நடனத்தில் தானும் பங்கு கொண்டதை எண்ணிப் பெரும் பூரிப்பு அடைந்தார். அதை உணர்ந்த ஆதிசேஷன், தாங்கள் பூரிப்புக்குக் காரணம் கேட்க, விஷ்ணுவும் விளக்கிச் சொல்ல, ஆதிசேஷனும் தானும் அந்த நடனத்தை காண துடிக்கும் விருப்பத்தைச் சொல்லி வேண்ட விஷ்ணுவும், தில்லையில் (சிதம்பரம்) ஆனந்தக்கூத்தை நீ காண்பாய் என வரம் அளித்தார்.
பதஞ்சலியும் தில்லை வந்து, வியாக்ரபாதருடன் கடும் தவம் புரிந்து, அதன் பலனாக ஈசன் தை மாத வியாழனுடன் கூடிய பூச நட்சத்திரத்தில் ஆனந்த நடனம் ஆடினார். அச்சமயம் நீ வேண்டும் வரம் கேட்கலாம் எனக் கூற, பதம்சலிக்காமல் தாங்கள் எப்பொழுதும் தில்€லைப் பொன்னம்பலத்திலே ஆடி பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் எனக் கேட்டார். அந்த ஆனந்த நடனக் காட்சியே இப்பொழுதும், எப்பொழுதும் தில்லைப் பொன்னம்பலத்தில் நிகழ்துகொண்டிருக்கின்றது. இதுவே மஹானந்த தாண்டவம்.
***
தாருகாவனம் எனும் இடத்தில், ரிஷிகள் தாங்கள் கற்றுணர்ந்த வேதத்தையே தெய்வமாகக் கொண்டு அகந்தையில் இருந்தனர்.
கர்வ பங்கம் செய்ய ஈசன் பிச்சாடனர் வடிவமும், மகாவிஷ்ணு மோகினி வடிவமும் கொண்டு வனத்தில் எழுந்தருளினர். கோபம் கொண்ட ரிஷிகள், யாகத்திலிருந்து எழுப்பிய கொடும் பாம்பு, வன்புலி, முயலகன் எனும் அரக்கன் முதலானவற்றை ஈசனை நோக்கி ஏவினர்.
ஈசனும் அவற்றை தம் ஆபரணங்களாக்கி, ஆனந்தக் கூத்தாடி, ரிஷிகளின் கர்வ பங்கம் செயந்தார். இதுவே ரிஷி தாண்டவம்.
மெத்தப் படித்தால் மட்டும் போதாது. ஆழ்ந் இறை பக்தியுடனான புத்திதான் சித்தியடையும் என்ற நற்கருத்தை நமக்கு போதிப்பது இத்திருநடனம்.
***
சனிபகவானுக்காகத் தனியே ஒரு நடனம் :

சனிபகவான் சிவனின் தீவிர பக்தன். உலகைப் பன்னிரு பகுதிகளாக, ராசிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிற்கும் அதிபர்களாக நவக்கிரகங்களை நியமித்ததையும், மகரம் மற்றும் கும்பம் ஆகிய இரு ராசிகளுக்கு அதிபராக சனி பகவானைக் கொண்டதையும் ப்ருஹத் ஜாதகம் விளக்கமாகக் கூறும்.

அப்படிப் பிரித்ததில், கயிலையுடனான இமயமலை சனிபகவானுக்குச் சொந்தமானது. ஈசன் தான் தவமிருக்க, கயிலையைப் போன்ற ஓரிடம் தேர்வு செய்ய எண்ணியிருந்தார்.
இதை அறிந்த சனி பகவான், தனக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட, கயிலையில் தாங்கள் வாசம் புரிய வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக்கொண்டார்.

கயிலாயம், சனிபகவானின் இடம் என்பதால் முழுதும் பனி மூடிய நிலையில் எவருமே வசிக்க வசதியில்லாத இடமாகிற்று. அங்கு மாடமாளிகைகளோ அல்லது வேறெந்த வசதியும் இல்லாது போனது. இதனால், மனம் கலங்கிய சனிபகவான் சிவபெருமான் வேறெங்காவது சென்றுவிடுவாரோ என்று மனக்கலக்கமுற்றார்.

இதை அறிந்த சிவபெருமான், `தான் தவமியற்ற எவ்வித வசதிகளும் தேவையில்லை, எனக்காக ஒரு மாளிகையும் வசிப்பிடமும் தேவையில்லை. இங்கு இந்த நிலையில் எந்த ஒரு மாற்றத்தையும் நான் செய்யமாட்டேன், மாளிகையோ அல்லது அரண்மனையோ என்று எதுவும் கட்டமாட்டேன், அப்படி ஏதேனும் கட்டப்பட்டால் அதை நீயே இடித்துவிடலாம், உன் இடம் எப்பொழுதும் இப்படியே இருக்கட்டும், என் தவத்திற்கு கைலாயத்தைவிட மேலான இடம் வேறு எதுவும் இல்லை, வேறு எங்கும் போகமாட்டேன்’ என்று சனிபகவானிடம் உறுதி கூறுகின்றார்.

சனிபகவானுக்கோ மெத்த மகிழ்ச்சி. தமது இடத்தில் தவம் புரிகின்றாரே என்று எண்ணி பெரும் களிப்புற்றார்.

இதன் பிறகு, ஈசனுக்கும், தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பெற்றோர்கள் அளித்த ஸகலவிதமான சீர்வரிசைகளோடும், பெரும் செல்வங்களோடும் கைலாயத்தை அடைந்த பார்வதி தேவி அதிர்ச்சி அடைந்தாள். எங்கும் வெட்டவெளியாக இருக்கின்றது.
ஈஸ்வரன் வெளியில் சென்ற நேரமாகப் பார்த்து, தேவதச்சனை அழைத்து நொடிப்பொழுதில் வசந்த மாளிகையும், அரண்மணையும், அந்தப்புரமும் அமைக்கின்றாள்.
திரும்பவந்து பார்த்த ஈஸ்வரன் அரண்மனை அனைத்தையும் பார்த்து வியந்து, பின்னர் பார்வதிக்குத் தான் சனி பகவானுக்குக் கொடுத்த உறுதிமொழியைக் கூறினார்.
பார்வதி, தான் ஆசையாகக் கட்டிய மாளிகையை இழக்க மனம் இல்லாமல், `சனீஸ்வரனோ தங்களுடைய தீவிர பக்தன். தாங்கள் சொன்னால் இம்மளிகையை இடிக்கமாட்டான், இவ்விஷயத்தை அவனிடம் தெரிவித்து விடுங்கள்’ எனக் கூறினாள்.
சரியென்று கிளம்பிய ஈசனை பார்வதி தேவி தடுத்து, `அப்படி சனீஸ்வரன் இடிக்கத்தான் வேண்டும் என்றால் அங்கிருந்தே உடுக்கையொலி எழுப்புங்கள். நான் அமைத்த மாளிகையை நானே இடித்து விடுகிறேன்’ எனவும் கூறினாள்.
(இந்த சம்பவத்திற்குப் பிறகுதான், ஒரு செயல் முடிக்கக் கிளம்புபவரைத் தடுக்கக் கூடாது என்ற நியதி பிறந்தது.
பிற்சமயத்தில், சுக்ரீவனைக் கொல்ல வாலி கிளம்பியபோது, அவன் மனைவி தாரை தடுத்தாள். வாலி மாண்டான்,
மஹாபாரதத்தில், கர்ணனைத் தங்கள் அணியோடு சேர்க்கச் சொல்லி கிருஷ்ணரை தூது அனுப்பும் குந்தி தேவி, கிருஷ்ணர் கிளம்பும்போது தடுத்தாள். கிருஷ்ணர் சென்ற காரியம் கெட்டது. கர்ணன் செஞ்சோற்றுக் கடனுக்காக துரியோதனன் அணியிலே இருப்பேன் என்றும், பாண்வர்களிடம் அண்டமாட்டேன் என்று கூறியதும் நடந்தது.)

சனிபகவானின் இருப்பிடம் சென்ற ஈஸ்வரன், அவனின் அகமகிழ்ந்த வரவேற்பிலும், பூஜைகளினாலும் மனம் மகிழ்ந்தார்.
அப்போது,
சனி பகவான், சிவபெருமானிடம் “அடியவனின் இடம் தேடி வந்தீர்கள். அது என் பாக்கியம். ஆனாலும் ஒரு வேண்டுதல் உள்ளது.
ஒரு சமயம் அமிர்தம் கடைய, பாற்கடலில், மேருமலையையே மத்தாக ஆக்கி, வாசுகி எனும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் புறமும் கடைந்தார்கள். அச்சமயம், தேவர்கள் என்னையும் உடனாகக் கொண்டு கயிற்றை இழுத்தனர். இழுவையின் அளவு அதிகமாக அதிகமாக வாசுகி எனும் பாம்பு விஷத்தினைக் கக்கியது.
அப்பொழுது நீலநிறம் கொண்ட ஆலகால விஷம் தோன்ற, அது அனைத்து ஜீவராசிகளையும் துன்புறுத்த, அவ்விஷத்தை தாங்கள் அருந்தப் போக, அப்பொழுது பார்வதி தேவி தங்கள் கண்டத்தை விட்டுப் போகாமல் செய்ய, உங்கள் கழுத்தைப் பிடிக்க, அவ்விஷம் உங்கள் தொண்டையிலேயே தங்கியது. ஆகவே நீலகண்டர் ஆனீர்கள்.
இவ்விஷம் தோன்ற தேவர்கள் அனைவரும் சனியாகிய உன் பார்வையே காரணம் எனக்குற்றம் கூறினர்.
தாங்கள் ஆனந்த நடனம் ஆடும் சமயம், என்னைத் தேவர்கள் அனைவரும், நீ வந்து பார்த்தால், ஆனந்த நடனக் காட்சிக் கிடைக்காமல் போனாலும் போகலாம் என்று ஒரு குகையில் அடைத்தனர். ஆகையால் தங்கள் திருநடனக் காட்சியைப் பார்க்கமுடியாத பாவியாகிவிட்டேன்.
நீங்களே அடியவனின் இருப்பிடம் வந்திருக்கின்றீர்கள். இங்கு நானொருவன் மட்டுமே, உங்கள் ஆனந்த நடனக் காட்சியைக் காண அருளுங்கள்” என்று வேண்டினான்.

வேண்டுவோருக்கு வேண்டியதை உடனடியாக அருளுபவர் அல்லவா மகேசன்.
அப்படியே ஆகட்டும் என்று நடனமாட தாளத்திற்காக உடுக்கையின் ஒலியையேக் கொண்டார். அந்த உடுக்கை ஒலியின் லயத்திற்கேற்ப, ஆனந்த நடனக் காட்சியருளினார்.
இந்த ஆனந்த நடனக் காட்சியை பக்தி சிரத்தை மேலோங்க, கண்களில் கண்ணீர் மல்க, கைகள் இரண்டையும் தலை மேல் குவித்து சனி பகவான் காண்கின்றார். அவரின் வேண்டுதல் பூர்த்தியானது.

சனி பகவானின் இருப்பிடத்திலிருந்து, உடுக்கையின் ஒலிகேட்ட பார்வதி, அங்கு நடப்பதை அறியாமல், சனி பகவான், தான் மாளிகைக் கட்டியதை ஒப்புக்கொள்ளவில்லை போலிருக்கின்றது. தான் கட்டிய மாளிகையை யாரோ வந்து இடிப்பதைக் காண மனம் பொறுக்காத தேவி, நொடியில் தாம் கட்டச் செய்த அனைத்தையும் இடித்தாள்.

இவை அனைத்தையும் சிவபெருமான் புன்சிரிப்போடு கண்டு கொண்டிருந்தார்.
ஒரே நேரத்தில், தான் சனிபகவானுக்கு அளித்த வாக்குறுதியையும் காப்பாற்றியாகிவிட்டது,
பக்தனின் வேண்டுதலையும் நிறைவேற்றியாகிவிட்டது,
கணவனுக்குத் தெரியாமல் செய்த பார்வதி தேவியின் செயலுக்கும் பாடம் புகட்டியாகிவிட்டது.

இப்புராணம், உறுதிமொழியின், வாக்குறுதியின் மேன்மையையும், கடைபிடிப்பதையும் நமக்கு உணர்த்துகின்றது.

சனிபகவான் ஆனந்த நடனத்தைக் கண்டு பேறு பெற்றதனால், ஆனந்த நடனக்காட்சியைக் காணும் அனைவருக்கும் சனி பகவான் நல்லதே செய்வார்.

சனி பகவானால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி வளமான வாழ்வும், ஆயுள் காரகன் ஆகிய சனிபகவானால் நீடித்த ஆயுளும்,
ஆனந்த நடனத்தைத் தரிசிப்பவர்களுக்குக் கிடைக்கும்.

ஆனந்த நடனம் காண்போம் ! ஆனந்தம் அடைவோம் !!

பி.கு. 1 : பாகவதச் செம்மல் நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் அவர்கள் காளிங்க நடனம் & பிரதோஷ நடனம் இரண்டையும் ஒப்பிட்டுச் சொல்லும் போது, சனி பகவானுக்காக தனியாக நடனம் ஆடியதைக் கூறியிருப்பதாக அடியேனின் தந்தையார் அமரர் நி.தண்டபாணி ஸ்வாமி தீக்ஷிதர் அவர்கள் அடிக்கடிச் சொல்லக் கேட்டிருக்கின்றேன். சில வருடங்களுக்கு முன் ஒரு மாத இதழில், இக்கட்டுரை சம்பந்தமாக எழுதியபோது, அதற்கு, வாசகி ஒருவர் இந்தப் புராணத்தை சத்யசாய்பாபா அருளுரையில் தெரிவித்து இருப்பதாகக் கடிதம் எழுதினார்.

பி.கு. 2 : வலைப்பூவில் (blogspot) எழுத ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தியானதற்கு நேரிலும், கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் அனுப்பியும் வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்றென்றும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
கடந்த ஆண்டு எழுதிய அனைத்துப் பதிவுகளையும் புத்தகமாக்கியதைக் கண்டு வாழ்த்துக் கூறியவர்களுக்கும் என்றென்றும் நன்றிகள். (Special Thanks to Srikumaran, Australia).

பி.கு. 3 : அடுத்த பதிவு,
தமிழ்த் தாயின் அழகுக்கு அழகு சேர்த்த இரு புலவர்கள்.
ஒருவர் நடக்க இயலாதவர். மற்றொருவர் கண் பார்க்க இயலாதவர். ஆயினும் இயலாமையை இல்லாதாக்கி தமிழ்த் தொண்டு செய்த பாங்கு எத்தனை! எத்தனை !!
இவர்களின் தமிழ்ப்பாக்கள் தமிழன்னைக்கு ஆபரணமாக தகதகவென்று மின்னியது; தமிழமுதம் வெள்ளமாக சலசலவென்று பிரவாகித்தது.
(தகதக, சலசல – என்ன வகை இது?)

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- செல் : 94434 79572 & 93626 09299
- Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com
www.facebook.com/deekshidhar

2 comments:

Srinivasan S said...

Deekshidhar,
A very right article in a very right time hosted in the site is really superb.

நடராஜராஜர் செய்யும் செயல்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்).

Please explain the above.

K.SENGOTTUVELAN said...

Sir,
ADALVALLANIN AANANDHA NADNANGAL article is very wonderful. As already stated i request please write about another RAJA ie) THIYAGRAJA.