Thursday, December 29, 2011

விபூதியின் பெருமை

விபூதியின் பெருமை

சிவபெருமானை வழிபடும் சைவர்களுக்கு சிவச் சின்னமானதாகவும், முக்கியமானதாகவும் அமைவது விபூதி.

பஸ்மம், ரக்ஷை, திருநீறு என்று பல்வேறு பெயர்களால் போற்றப்படுவது விபூதி.

விபூதி என்பதற்கு மொழியியல்படி, பல்வேறு அர்த்தங்கள் உண்டு.

இறையருள் பெற்றது, உயர்விலும் உயர்வானது, முழுமையானது, எங்கும் நிறைந்திருப்பது, உள்ளத்தை தூய்மைப்படுத்துவது, வணங்கத்தக்கது, செழுமை நிறைந்தது, வளங்களைத் தரக்கூடியது, சித்திகளைத் தருவது, வேண்டும் வரங்களைத் தருவது, அலங்கரிப்பது.

சிவபெருமானின் திருமேனி முழுவது அலங்கரிக்கக் கூடிய ஒரே பொருள் விபூதி மட்டுமே. பொன்னார் மேனியனின் திருமேனியில் மேவியிருப்பதால், விபூதி பொன்னிறமாக, தங்கத் துகள்களாக மின்னுகின்றதாம் (பஸ்மோத்தூளித விக்ரஹாய நம: - ஸ்ரீ சிவாஷ்டோத்தரம்)

விபூதி காட்டும் தத்துவங்கள் எண்ணற்றவை.

இறந்தபின் அனைவரும் சாம்பலாகத் தான் வேண்டும் என்பதைக் காட்டுகின்றது. ஆகையால், இறைவன் முன் அனைவரும் சமம் தான் என்பதையும் சுட்டுகின்றது.

உலகம் அக்னியால் தூய்மையடைவது போல விபூதியால் ஆன்மாக்கள் தூய்மையடைகின்றது.

வேதங்களும், உபநிஷதங்களும், புராணங்களும், தமிழ்த் திருமுறைகளும் விபூதியின் மகிமையைப் போற்றிப் பறைசாற்றுகின்றன.

ஒரு சமயம், வித்துன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும் மூன்று அரக்கர்கள் பறக்கும் தன்மை கொண்ட பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கொண்டு, தேவர்களை வருத்தினர்.

அரக்கர்களின் தொல்லை தாங்காத தேவர்கள் பிரம்மா, விஷ்ணுவிடம் முறையிட, இவர்களை அழித்து சாம்பலாக்க, சிவபெருமானால் மட்டுமே முடியும் என்று அறிந்து, சிவனை நோக்கி பிரார்த்தனை செய்தனர்.

பிரம்மா தனது மனதிற்குப் பிடித்தமானதும், அவர் தோற்றுவித்தத்தும் ஆகிய மானச சரோவர் என்னுமிடத்திலும்,

மஹா விஷ்ணு தான் பள்ளி கொண்டிருக்கும், பாற்கடலில் சேரும் நதியாகிய விரஜா எனும் நதியின் கரையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமிருந்து யாகம் செய்தனர்.

யாகத்தின் பஸ்மம் (சாம்பல்) போல அரக்கர்கள் அழிய பிரார்த்தனை செய்தனர்.

மஹாவிஷ்ணு, சிறப்பான மந்திரங்களால் யாகம் செய்தார். அது வேதங்களில், விபூதியைப் போற்றக் கூடிய, மஹாநாராயண உபநிஷத் எனும் மந்திரமாக அமைந்தது.

பொதுவாக சிவாலயங்களில், விபூதியை அபிஷேகம் செய்யும்போது இந்த மந்திரங்களைத் தான் சொல்வது மரபு. (ஆத்மாமே சுத்யந்தாம் ஜ்யோதிரஹம் விரஜா விபாப்மா பூயாஸம் ஸ்வாஹா)

இந்த மந்திரம் - உடல், மனது, வாக்கு, ஆத்மா, அந்தராத்மா என அனைத்தையும் தியாகம் செய்தால், நமது ஜீவனை சிவபெருமான் தன் உடலில் சாம்பல் போல பூசிக்கொள்வார் என்கின்றது (மஹா நாராயண உபநிஷத்தின் முழுமையான அர்த்தம் - மிகவும் அற்புதமானது.)

பிரம்மா, விஷ்ணு - இருவரின் தவத்திற்கு இணங்கி, சிவபெருமான் மூன்று அரக்கர்களையும், தன் மந்தகாசப் புன்னகையால் மட்டுமே எரித்து சாம்பலாக்கினார். தேவர்கள் மகிழ்ந்தனர்.

(ஒரு உபரி தகவல் : முப்புரங்களை எரித்தபொழுது, அக்கோட்டைகளின் ஒரு பாகம் மட்டும் முழுதும் எரியாமல் (வேகாமல்) பூமியில் விழுந்தது. அந்த இடம் வேகாக்கொல்லை என்று அழைக்கப்படுகின்றது.

இவ்விடம், தமிழகம், கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு அருகாமையில் உள்ளது. இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்படும் மண் செங்கல் அமைக்க உதவினாலும், இந்த ஊர் மண் மட்டும் செங்கல் சுடுவதற்கு பயன்படாது. வேகாத மண் கொண்ட நிலம் என்பதால் வேகாக் கொல்லை என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் அருமையான சிவஸ்தலம் உள்ளது)

சிவபெருமான் உடல் முழுவதும் பரவியிருக்கும் விபூதியை, சிவச் சின்னமாக, புனிதமான பொருளாக சைவர்கள் மதிக்கின்றார்கள்.

விபூதி தயாரிக்கும் முறையை சாஸ்திரங்கள் அற்புதமாக விளக்கியுள்ளன.

காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து, அதன் கோமயத்தால் ஈரமாக்கி, உருண்டைகள் பிடித்து காய வைக்க வேண்டும்.

அதை, திரிபுர ஸம்ஹார காலம் என்று வர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத பெளர்ணமியும், கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத் திருநாளில், எரியூட்ட வேண்டும். (சில ஆன்மீகர்கள் அன்று ஏற்றப்படும், சொக்கப்பனையில் தான் எரிக்கப்பட வேண்டும் என்பர்)

அது திறந்த வெளியில் தானாகவே ஆறவேண்டும். மார்கழி மாதம் முழுவதும் - பனி பொழிந்து, அந்த சாணச் சாம்பல் சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும். தை மாதம் முழுவதும் அச்சாம்பலை கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். பனி பெய்ய பெய்ய சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.

மாசி மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில் அச்சாம்பலை எடுத்து, வஸ்திரகாயம் செய்ய வேண்டும். (வஸ்திரகாயம் - ஒரு பானையின் வாயில் தூய்மையான துணியைக் கட்டி, சாம்பலை எடுத்து, துணியின் மேல் கையால் தேய்க்க தேய்க்க, மென்மையான துகள்கள் பூசிக்கொள்ளத் தகுந்த விபூதியாக பானையினுள் சேரும்).

அதை, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பிறகு, சிவபக்தர்கள் தரிக்க வேண்டும்.

மேலே சொன்ன முறை மிக மேன்மையான முறை. மற்றும் சில முறைகளும் உள்ளன. (சாந்திகபஸ்மம், காமதபஸ்மம், பெளஷ்டிகபஸ்மம்)

பரமசிவனின் ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் தன்மையை விபூதி கொண்டிருக்கின்றது.

விபூதியை அனைத்து நிலையிலிருப்பவரும் பூசிக்கொள்ளலாம் என்று ஸூதஸம்ஹிதை வலியுறுத்துகின்றது. (பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம்)

சிவாலயங்களில், விபூதியை பிரஸாதமாக வலது உள்ளங்கையில் மட்டுமேதான் வாங்க வேண்டும். (உள்ளங்கை பிரம்ம & விஷ்ணு பாகமாகக் கருதப்படுகின்றது. பிரம்மா, விஷ்ணு தவமிருந்து பெற்றதால் - அவர்களின் பாகமாகிய உள்ளங்கையில்தான் பெற வேண்டும்)

ஆண்கள் விபூதியை திரிபுண்டரமாகவும் (விபூதியைத் தண்ணீரில் குழைத்து நெற்றியில் மூன்று கிடைக்கோடுகளாகவும்), உத்தூளனமாகவும் (தண்ணீரில்லாமல் வெறும் விபூதியை) அணிந்து கொள்ளலாம் என்றும்,

பெண்கள் - தண்ணீர் குழைக்காமல் மட்டுமே இட்டுக்கொள்ள வேண்டும் (உத்தூளனமாக) என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

பெண்கள் - ஆட்காட்டி விரல் அல்லது மோதிர விரலால் விபூதியை எடுத்து, நெற்றியில் ஒற்றைக் கோடாக மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். (சிவ தீட்சை பெற்ற பெண்கள் மூன்று கோடுகளாக அணியலாம்)

விபூதிப் பூசிக்கொள்ளும் போது, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தையோ அல்லது சிவசிவ என்றோ சொல்லிக்கொண்டேதான் தரிக்க வேண்டும்.

ஆண்கள் - விபூதியை தண்ணீரில் குழைத்து, ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் கொண்டு மூன்று கிடைக்கோடுகளாக,

நெற்றியிலும், மார்பிலும், தொப்புளுக்கு மேலும், முழங்கால்கள் இரண்டிலும், இரு தோள்களிலும், இரு முழங்கைகளிலும், மணிக்கட்டுகள் இரண்டிலும், இரு விலாப் புறங்களிலும், கழுத்திலும் தரிக்க வேண்டும். (சிலர் இரு காதுகளிலும், சிலர் மேல் முதுகிலும், பின்கழுத்திலும் தரிப்பார்கள்)

காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும், பூஜை காலங்களிலும் மிக நிச்சயம் விபூதி தரிக்க வேண்டும்.

பஸ்மாபிஷேகம் - பல்வேறு தீட்டுக்களை அகற்றவல்லது. குளிக்கும் நீரில் விபூதியைத் தூவி விட்டு, அந்த விபூதி கலந்த தண்ணீரில் தலை முழுக எவ்விதமான தீட்டுக்களும் அகன்றுவிடும்.

பயம் நீங்கவும், ஜுரம் நீங்கவும், உடல் உபாதைகள் நீங்கவும் விபூதி பயன்பட்டிருக்கின்றது.

விபூதி இட்டுக்கொண்டிருப்பவரை சிவ அம்சமாகவேக் கருதி வழிபடும் வழக்கம் உண்டு.

விபூதியின் புனிதத்தையும் அதன் மேன்மையையும் பல்வேறு புராணங்களிலும், திருமுறைகளில் பல்வேறு இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்னிரு திருமுறைகளில் குறிப்பிடப்படும் சில சம்பவங்களை மட்டும் இங்கே காண்போம்.

சூலை (தாங்காத வயிற்று வலி) நோயால் துடிதுடித்த அப்பர் சுவாமிகள், தனது தமக்கையார் கையால் விபூதி பெற்றவுடன், வலி நீங்கப் பெற்று சைவத்திற்கு பெரும் தொண்டாற்றினார்.

சமண சமயத்தைச் சார்ந்திருந்த கூன் பாண்டியன் எனும் மன்னன் மதுரையை அரசாண்டு கொண்டிருந்தான். அவனுக்கு தீராத வெப்ப நோய் இருந்தது. அதை நீக்க அவன் மனைவி மங்கையர்க்கரசியார் சிவபெருமானை வேண்டினாள். அவள் கனவில் சிவன் வந்து திருஞான சம்பந்தரைக் கண்டு வந்தால் நோய் நீங்கும் என்றார். மங்கையர்க்கரசியாரும், அதன்படியே, திருஞான சம்பந்தரை தரிசித்து, தன் குறையைச் சொல்ல, அவர் 'மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு' எனத் தொடங்கும் 'திருநீற்றுப் பதிகம்' பாடி விபூதியை, கூன் பாண்டியனின் உடலில் பூசியவுடன், பாண்டியனின் நோய் நீங்கியது. கூன் பாண்டியன் சைவத் தொண்டு ஆற்றினான்.

சிவச்சிந்தனையில் சிறந்து விளங்கிய சேரமான் பெருமான், அரசு தாங்கி, ஒரு சமயம், பட்டத்து யானை மீது அமர்ந்து நகர்வலம் வருகின்றார்.

அப்பொழுது, துணிகளை வெளுக்கும் தொழிலாளர், உழமண் எனும் வெள்ளை நிற மண்ணைக் கூடையில் சுமந்து வர, நீரில் நனைந்த அந்த மண் அவரின் மேனி முழுவதும் வழிந்து, விபூதி பூசியது போல தோற்றம் தரச் செய்தது.

பட்டத்து யானையிலிருந்து, சலவைத் தொழிலாளியின் உடல் முழுவதும் திருநீறு பூசியிருப்பதைக் கண்ட சேரமான் பெருமான், யானையிலிருந்து உடன் இறங்கி, அவர் பெரும் சிவத்தொண்டர் போலும் என்று எண்ணி, சலவைத் தொழிலாளியை வணங்கினார்.

அரசன் தன்னைக் கண்டு வணங்கியதால், அச்சமுற்ற சலவைத் தொழிலாளி தன் நிலையை உணர்த்த, வெள்ளை உழமண் விபூதியை நினைவு படுத்திய காரணத்தினாலேயே, அவரை வணங்க முற்பட்டதை சேரன் விளக்கி, பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார்.

சிவபக்தியில் சிறந்த ஒரு புகழ்ச்சோழ மன்னர், தனக்குக் கப்பம் கட்டாத மன்னன் மீது படையெடுத்து வர ஆணையிட, படைகளும் எதிரி நாட்டை வென்று, தோல்வி கண்ட வீரர்களின் தலைகளைக் கொண்டு வந்து, சோழனிடம் வெற்றிப் பரிசாக அளிக்க, அதைக் கண்டுகொண்டு வந்த மன்னன், அந்த வீரர்களின் தலைகளுள் - ஒரு தலை மட்டும் குடுமி கொண்டு, சிவச்சின்னமாகிய விபூதி அணிந்திருப்பது கண்டு அதிர்ந்து, ஒரு சிவனடியாரைக் கொல்லக் காரணமாகிவிட்டோமே என்று மனம் நொந்து, சோழன் அக்னியை மூட்டி அதனுள் விழுந்தான்.

சிவபெருமானிடம் அதீத பக்தி கொண்ட ஏனாதிநாதனார் என்பவர், படைகளுக்கு வாள் பயிற்சி அளிப்பவர். அவருடன் பல முறை போராடி தோல்வியுற்ற ஒருவன் அவரை வீழ்த்த, ஒரு உபாயம் செய்தான்.

அவன் ஏனாதிநாதரைத் தனிமையில் சமர் செய்ய அழைத்து, அச்சமயம் இவன் சிவச்சின்னமாகிய விபூதியைத் தரித்துக்கொண்டு, அதை கேடயத்தால் மறைத்துக் கொண்டு, போரிட வந்து, ஏனாதிநாதர் அருகில் வந்ததும், கேடயத்தை நீக்க, ஏனாதிநாதர் எதிரியாயிருப்பவன், தன்னைக் கொல்லவந்தவன் திருநீறு அணிந்திருப்பது கண்டு, அவனை சிவ அம்சமாகவேக் கண்டு, சண்டை செய்யாமல் பணிந்து மடிந்து சிவலோகம் அடைந்தார்.

மெய்ப்பொருள் எனும் அரசன் சிவபக்தி நிரம்பி, தனது அரசை நீதிமுறை தவறாது ஆட்சி செய்து வந்தார். சிவ தத்துவங்களில் மெய்யான உண்மைகளை மக்களுக்கு அறிவிப்பதில் தேர்ந்தவராக இருந்ததால் மெய்ப்பொருள் என்று போற்றப்பட்டார்.

இவரின் எதிரி தேசத்து அரசன், தமது வலிமையால் இவரை வெல்லமுடியாது என எண்ணி, சிவச் சின்னமாகிய விபூதி தரித்து, ஓலைச் சுவடிகளுடன், சிவனடியார் வேடத்தில் வந்து, அரசனிடம் ஆகம உட்ப்பொருள் உணர்த்த வந்தேன் எனக் கூறினான்.

மெய்ப்பொருள் அதைக் கேட்க ஆவலாகக் கண் மூடி அமர, அச்சமயம் ஓலைச்சுவடிகளுள் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மெய்ப்பொருளை வெட்டினான்.

சத்தம் கேட்டு வந்த மெய்க்காப்பாளன், எதிரியை வெட்டக் கையை ஓங்க, ரத்தம் சிந்திக் கொண்டு, மரணத்தின் தறுவாயில் இருந்தபோதும், மெய்ப்பொருள், இவர் எதிரியாக இருந்தாலும், சிவனடியார் கோலத்தில் இருப்பதால், இவரும் சிவாம்சமே, ஆகவே, இவருக்கு எவ்வித தொல்லையுல் இல்லாமல் எல்லை வரை பத்திரமாகக் கொண்டு விடக் கட்டளையிட்டான்.

அவ்வண்ணமே மெய்க்காப்பாளன் செய்தைக் கூற, மெய்ப்பொருள் அதன் பிறகு உயிரைவிட்டு சிவபதம் அடைந்தார்.

விபூதி நோய்களை நீக்கும் அருமருந்தாகவும், சிவத்தொண்டிற்கு வழிகாட்டியாகவும், சிவசிந்தனை மேலிடுவதற்கு உதவும் சாதனமாகவும் விளங்குகின்றது.

விபூதீரைச்வர்யம் - என்ற சொல் - விபூதி ஐஸ்வர்யங்களைத் தரவல்லது - என்ற அர்த்தம் கொண்டது.

விபூதி அணிவோம் ! விதியை வெல்வோம் !!

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

- Mobile : 94434 79572 & 93626 09299

- Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com

- www.facebook.com/deekshidhar

Monday, December 26, 2011

ருத்ராக்ஷ மகிமை


ருத்ராக்ஷ மகிமை

சிவபெருமானை அரும்பெரும் தெய்வமாக வழிபடும் வகை சைவம் என்றழைக்கப்படும். சைவ வழிபாடு செய்பவர்கள் சைவர்கள் என்று போற்றப்படுவார்கள்.

சைவர்களின் இன்றியமையாத மூன்று கடமைகளாக சைவ புராணங்கள் கூறுபவை :

1. எப்பொழுதும் சிவ நாமத்தினையும், பஞ்சாக்ஷரத்தையும் ஜபித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.

2. சிவன் தன் மேனியின் மீது பூசிக்கொண்டிருக்கும் விபூதியை சைவர்கள் எப்பொழுதும் தரித்திருக்க வேண்டும்.

3. சிவாம்சமாக உள்ள ருத்ராக்ஷம் அணிந்து கொண்டிருக்க வேண்டும்.

இதில், ருத்ராக்ஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் சிறப்புகளைக் காண்போம்.

ருத்ராக்ஷம் :

ருத்ராக்ஷம் பற்றி புராணங்கள் பல்வேறு தகவல்களைத் தருகின்றன.

சிவபெருமான், தேவர்களை வருத்திக்கொண்டிருந்த மூன்று அசுரர்களை அழிக்க வேண்டி, திரிபுர ஸம்ஹாரம் செய்த போது, சிவனின் (ருத்ரன்) கண்(அக்ஷம்)களிலிருந்து புறப்பட்ட நீர்த்திவலைகள் பூமியில் விழ அதிலிருந்து ருத்ராக்ஷம் தோன்றியது எனவும்,

ஒரு சமயம், உலகம் உய்ய பல்லாயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்ய, தவம் முடிந்து கண் விழித்த சமயம், கண்களிலிருந்து தோன்றிய நீரிலிருந்து தோன்றியது ருத்ராக்ஷம் எனவும்,

நெற்றிக்கண்ணின் மணியிலிருந்து சிவபெருமானால் தனது அம்சமாக தோற்றுவிக்கப்பட்டது ருத்ராக்ஷம் எனவும் சைவ புராணங்கள் பகர்கின்றன.

ஆயினும், தத்வார்த்த ஆன்மீகர்கள், ருத்ராக்ஷம் என்பது சிவபெருமானின் கண்ணையொத்த சிறப்பு வாய்ந்தது எனவும், மேலும் சிறப்பாக, சிவபெருமானுக்கு (ருத்ரன்) உரிய மந்திரத்தை (அக்ஷம்) ஜபிக்க சிறந்தவொரு சாதனமாக கருதுகின்றார்கள். (எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - ஔவையார் வாக்கு - சிவ பஞ்சாக்ஷரம் எனும் ஐந்து எழுத்து மந்திரத்தை, எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு, ஜபிக்க, கண் போன்ற ருத்ராக்ஷமே உகந்தது.

எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு - திருவள்ளுவர்)

வடமொழியின் ஆரம்ப எழுத்து 'அ'. கடைசி எழுத்து 'க்ஷ'. இந்த 'அ'கார 'க்ஷ'கார எழுத்துக்களினுள்தான், வேத மந்திரங்களும், அனைத்து மந்திரங்களுக்கான எழுத்துக்களும் அடங்குகின்றன.

அதிலும், சிவபெருமானுக்கே உகந்த பஞ்சாக்ஷரம் வேத மந்திரங்களுக்கு நடுவாகவும், உயர்வானதாகவும் அமைந்துள்ளது.

இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தை, ருத்ராக்ஷம் என்பதைக் கொண்டு ஜபிக்கும்போது, சிவஸாரூபம், சிவஸாயுஜ்யம், சிவலோகம் எனும் முப்பெரும் பதவிகளையும், இம்மையில் (இந்த ஜன்மத்தில்) மென்மேலும் வளங்களையும், செல்வங்களையும், மறுமையில் (மரணத்திற்குப் பின்) முக்தியையும் தரவல்லது என்பது ஆன்மீக ஆன்றோர்களின் மேலான கருத்து.

மந்திர சித்தி பெற்றவர்கள், சித்தர்கள் போன்றவர்கள் தமது கண்களினாலேயே விஷத்தை முறிக்க விஷமுறிவு செய்வது போலவும்,

மீன் தனது முட்டைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே பொறிக்கச் செய்து மீன் உருவம் கிடைக்கச் செய்வது போலவும்,

ருத்ராக்ஷம் அணிந்தவர்க்கு, சிவபெருமான் தனது அக்ஷத்தினாலேயே (கண்களாலேயே) தீட்சை அளித்து, ஆன்மாக்களுக்கு முக்தி அளிப்பார் எனவும் புராணங்கள் கூறுகின்றன.

தற்போது நமக்குக் கிடைக்கும் ருத்ராக்ஷம், சிவனார் உறையும் இமயமலையைச் சார்ந்த பனிபடர்ந்த இடங்களில் விளையக்கூடிய ருத்ராக்ஷ மரங்களில் (Botanical Name : Elacocarpus Ganitrus Roxb) இருந்து கிடைக்கக் கூடியவை. கண்ணில் உள்ள மணியைப் போன்ற (pupil) சிறு உருண்டை வடிவத்திலும், நடுவில் இயற்கையாகவே துளையும் கொண்டதாக அமையும்.

ருத்ராக்ஷத்தின் தன்மைகளையும், அதன் சிறப்பம்சங்களையும் ஸூதஸம்ஹிதை உள்ளிட்ட பழைய புராணங்கள் தெரிவிக்கின்றன.

ருத்ராக்ஷம் சிகப்பு (காவி), வெள்ளை, கரிய நிறங்களில் கிடைக்கின்றன.

ருத்ராக்ஷத்தின் அளவு சிறிது சிறிதாக அதன் சிறப்பம்சம் பெரிதானதாகக் கருதப்படும். மிகச் சிறிய ருத்ராக்ஷம் அளப்பரிய பலன் தரக்கூடியதாகும்.

ருத்ராக்ஷத்தின் மேல் கோடுகளும், நடுவில் இயற்கையாகவே துளையும் இருக்கும்.

அந்தக் கோடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் தெய்வாம்சம் சிறப்புறக் கூறப்படுகின்றது.

ஒரு முகம் அதாவது ஒரே கோடுள்ள ருத்ராக்ஷம் - சிவாம்சம்,

இரு முகம் - சக்தி அம்சம்

மூன்று முகம் - பிரம்ம, விஷ்ணு, சிவ - திரிமூர்த்தி அம்சம்

நான்கு முகம் - பிரம்ம அம்சம்

ஐந்து முகம் - சதாசிவ அம்சம் (ஈசான, தத்புருஷ, அகோர, வாமதேவ, ஸத்யோஜாதம்)

ஆறுமுகம் - முருக அம்சம்

ஏழுமுகம் - ஸப்தமாதர்கள் அம்சம்

எட்டு முகம் - அஷ்ட வித்யேஸ்வரர்கள் அம்சம் (அனந்தர் - சிகண்டி)

ஒன்பது முகம் - நவதீர்த்தங்கள் (கங்கை-காவேரி, சோணநதி, துங்கபத்ரா) அம்சம்

பத்து முகம் - அஷ்ட திக் பாலர்கள் + ஆகாய, பாதாள திசைகள் அம்சம்

பதினோரு முகம் - ஏகாதச ருத்திர அம்சம்

பன்னிரு முகம் - விஷ்ணு மூர்த்தி அம்சம்

பதின்மூன்று முகம் - சத ருத்திரர்கள் அம்சம்

பதினான்கு முகம் - அசுவினி தேவர்கள் மற்றும் அஷ்ட வசுக்கள் அம்சம்

பதினைந்து முகம் - சந்திர அம்சம்

பதினாறு முகம் - முப்பத்து முக்கோடி தேவர்கள் அம்சம்

(உருத்திர கணிகையர் புராணம், 1907ம் வருட இலங்கை வெளியீடு)


இது தவிர, ஜாபால உபநிஷதம் ருத்ராக்ஷ அம்சத்தையும், அவற்றை அணிவதால் ஏற்படும் பலன்களையும் போற்றுகின்றது. (புருஷார்த்த ப்ரபோதம், 1911ம் வருட வெளியீடு)

ஒரு முகம் - பரமசிவ அம்சம் - பிரம்மஹத்தியை நீக்கும். (ஏக வக்த்ரம் சிவஸ்ஸாக்ஷாத் ப்ரஹ்மஹத்யாம் வ்யபோஹதி)

இரு முகம் - ஸ்ரீகண்ட பரமசிவம் - உயிரினங்களுக்கு செய்யும் பாபத்தினை நீக்கும் (கோவதநாச்யத்துவம்)

மூன்று முகம் - அக்னி - பெண்களால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் (ஸ்த்ரீஹத்யாந்தஹதிக்ஷணாது).

நான்கு முகம் - பிரம்மா - சக மனிதர்களால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் (நரஹத்யாம் வ்யபோஹதி)

ஐந்து முகம் - காலாக்னி ருத்திரர் - உணவுகளால் ஏற்படும் நோய்களை நீக்கும்

ஆறு முகம் - சுப்ரமணியர் - குரு துரோக பாவம் நீக்கும்

ஏழு முகம் - ஆதிசேஷன் - தானங்கள் வாங்கியதால் ஏற்படும் தோஷங்களை நீக்கும்

எட்டு முகம் - விநாயகர் - திருடு சம்பந்தமான தோஷங்களை நீக்கும்

ஒன்பது முகம் - பைரவர் - பில்லி, சூனியங்கள் நீங்கும்

பத்து முகம் - விஷ்ணு - நவக்ரஹ தோஷங்கள் நீங்கும்

பதினோரு முகம் - ஏகாதச ருத்திரர் - அசுவமேத யாகம் செய்த பலன்

பன்னிரு முகம் - துவாதச ஆதித்தர் - மேலான கல்வி கிடைக்கும்

பதின்மூன்று முகம் - சுப்ரமண்யர் - ஸகல கார்ய ஸித்தி

பதினான்கு முகம் - சிவசக்தி - தெய்வங்களின் அருள் எளிதில் கிட்ட அருளும்.

இது தவிர பல்வேறு புராணங்கள் ருத்ராக்ஷ முகங்களைப் பற்றியும், பலன்களைப் பற்றியும் பகர்கின்றன.

பொதுவாக, ஐந்து மற்றும் ஆறு கோடுகள் கொண்ட ருத்ராக்ஷங்களே அதிக புழக்கத்தில் உள்ளன.

ருத்ராக்ஷ கோடுகள் எத்தனையானாலும், அதை அணிவதும், அதற்குரிய புனிதத்தைக் காப்பதும் பற்பல பலன்களை வாரி வழங்கக்கூடியது.


ஒரு முக ருத்ராக்ஷம் மிகவும் போற்றப்படுகின்றது.

எளிதில் கிடைக்காது.

ஆயிரம் சாதாரண ருத்ராக்ஷங்களைக் குவித்து, அதனுள் ஏக முக ருத்ராக்ஷத்தை வைத்தால், அது தானாகவே மேலே ஏறிவரும் என்பது,

ஆயிரம் ருத்ராக்ஷத்தினைக் காட்டிலும், ஒரு முக ருத்ராக்ஷம் மிகவும் மேலானது என்பதைக் குறிப்பதற்காக மட்டுமே தான்.


இரண்டு ருத்ராக்ஷங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தது போல் சில ருத்ராக்ஷங்கள் கிடைப்பது உண்டு. அது கெளரிசங்கரம் என்று அழைக்கப்படும். சிவாலய பூஜை செய்பவர்களும், சிவ பூஜையை நித்தமும் செய்பவர்களும் - சிவசக்தி அம்சம் கொண்ட கெளரிசங்கரத்தை நிச்சயம் அணிய வேண்டும் என்று சிவபுராணங்கள் அறுதியிடுகின்றன.

ஆறுமுகம் கொண்ட ருத்திராக்ஷத்தை உடலின் வலது புறத்திலும், ஒன்பது முகம் கொண்ட ருத்திராக்ஷத்தை உடலின் இடது புறத்திலும், பதினோரு முகம் கொண்ட ருத்ராக்ஷத்தை தலையிலும், பன்னிரு முக மணி காதுகளிலும், எந்த முக மணியாகினும் கண்டம் எனும் கழுத்தில் அணிவது சிறந்த பலனைத் தரக்கூடியது.

மரங்களிலிருந்து கிடைத்த ருத்ராக்ஷத்தைக் காம்பை எடுத்து விட்டு, முதலில் சுத்த தண்ணீரில் ஒரு நாள் முழுக்க ஊற வைத்து,

பின் மறு நாள் முழுக்க காராம்பசுவின் பாலில் ஊறவைத்து,

பிறகு சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்து, (சிலர் எழுமிச்சம் பழச் சாறு கொண்டு சுத்தம் செய்வது உண்டு),

பிறகு விபூதியில் ஒரு நாள் முழுவதும் போட்டு வைத்து,

அடுத்த நாள் ஏதேனும் ஒரு சிவாலயத்தில் கொண்டு சென்று, தெய்வத்தின் பாதங்களில் சார்த்தி எடுத்து, குருவின் கரங்களால் (அல்லது பெரியோர்களின் கரங்களால்) அணிந்து கொள்ளவேண்டும்.

புண்ய நதிகளில் நீராடும் போதும், தானங்கள் கொடுக்கும்போதும், சிவமந்திரங்களை ஜபிக்கும் போதும், ஹோம பூஜைகளின் போதும், தெய்வங்களை ஆராதனை செய்யும்போதும் மிக நிச்சயமாக ருத்ராக்ஷம் அணிந்துகொள்ள வேண்டும் என ஜாபால உபநிஷத் உரைப்பதாக புருஷார்த்த ப்ரபோதம் கூறுகின்றது (ஸ்நானே தான ஜபே ஹோமே வைச்வதேவே ஸுரார்ச்சநே).

ஒரே ஒரு ருத்ராக்ஷம் மட்டும் கழுத்தில் அணிந்துகொண்டால், அதை எக்காலத்திலும் கழட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஒன்றுக்கு மேற்பட்ட ருத்ராக்ஷங்களை மாலையாகக் கோர்த்து அணிந்து கொண்டால், அதன் புனிதம் காக்க வேண்டி, தெய்வ பூஜை சார்ந்த நேரங்களில் மட்டும் அணிந்து கொள்ள வேண்டும்.

108 எண்ணிக்கையிலான ருத்ராக்ஷ மாலை அணிவதே உத்தமம். 52 அல்லது 27 எண்ணிக்கையிலான ருத்ராக்ஷ மாலையும் அணியலாம்.

ருத்ராக்ஷ மாலை கொண்டு, காலை வேளையில் முகத்திற்கு சமமாகவும், மதிய நேரத்தில் இதயத்திற்கு சமமாகவும், மாலை வேளையில் வயிற்றுக்கு சமமாகவும் கொண்டு ஜபிக்க வேண்டும்.

ருத்ராக்ஷ மாலையை பெருவிரல் அல்லது கட்டைவிரலால் நகர்த்தி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்.

ஆட்காட்டி விரலால் ஜபம் செய்தால் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.

நடுவிரல் கொண்டு ஜபம் செய்வது செல்வங்களை சேர்க்கும்.

மோதிர விரல் கொண்டு ஜபம் செய்யின் நல் ஆரோக்கியத் தரும்.

சுண்டு விரல் கொண்டு ஜபம் செய்வது தெய்வ அருளை விரைவில் வழங்கும்.


பெண்கள் ருத்ராக்ஷம் அணிவது பற்றி பல கருத்துக்கள் உள்ளன.

ருத்ராக்ஷம் புருஷ அம்சம் கொண்டது எனவும் அதனை ஆண்கள் மட்டுமே அணிய வேண்டும் என்றும்,

சிவாம்சமாக உள்ளது ருத்ராக்ஷம் - அதனை சிவ சிந்தனை உள்ள யாவரும் அணியத் தகுந்தது என்றும்,

சிவ தீட்சை பெற்ற பெண்கள் அணியலாம் என்றும்,

வயதில் மூத்த பெண்கள் மட்டும் அணியலாம் என்றும்,

விதவைகளும் ருத்ராக்ஷம் அணியலாம் என்றும் பல கருத்துக்கள் உள்ளன.

நேரடியாக சாஸ்திரங்களோ அல்லது ஆகமங்களோ பெண்கள் ருத்ராக்ஷத்தை அணிவதைப் பற்றி சொல்வதாக அறியமுடியவில்லை.

தேவி அல்லது சக்திக்குரிய புராணங்களில், அம்பிகையானவள் ருத்ராக்ஷ மாலை அணிந்து கொண்டிருப்பதாக, குறிப்பிடப்படுகின்றது.

ஜாபல உபநிஷதம் - பொதுவாக ருத்ராக்ஷ தாரண விதி என அதனை அணிந்து கொள்ளும் நியமங்களைக் கூறுகின்றது.

ஆகவே, சிவ சிந்தனை உள்ள யாவருமே அணியத் தகுந்தது என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதன் புனிதம் காக்கப்பட பல்வேறு விதிகளை சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

சிவாலயங்கள் சிலவற்றில் ருத்ராக்ஷங்களைக் கொண்டு, சிவலிங்கத்தின் மேல் ருத்ராக்ஷ பந்தல் அமைக்கின்றார்கள். இது மிகவும் விசேஷமானது என்றும், விரைவில் பலன் தரக்கூடியது என்றும் ஆன்மீகர்கள் கூறுவார்கள்.

ருத்ராக்ஷம் - மருத்துவ குணம் வாய்ந்தது. மஞ்சள் கிழங்கு - மங்கலமானதும், அதே போல் கிருமி நாசினியாகவும் பயன்படுகின்றதோ அது போல, ருத்ராக்ஷம் சிவாம்சம் கொண்டதாகவும், ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களை நீக்கக் கூடியது எனவும் நம்பப்படுகின்றது.

ஆக மொத்தத்தில் ருத்ராக்ஷம் - சிவ அம்சம் கொண்டது. மிகப் புனிதம் வாய்ந்தது. சிவ நாம ஜபம் செய்ய மிக மிக உகந்தது.

ருத்ராக்ஷம் அணிவோம் ! சிவ பலனை அடைவோம் !!

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

- Mobile : 94434 79572 & 93626 09299

- Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com

- www.facebook.com/deekshidhar