Wednesday, March 7, 2012

அபிராமி அந்தாதியின் ஆதி (வி)நாயகர்

அபிராமி அந்தாதியின் ஆதி (வி)நாயகர்

தந்தைக்காக தனயன் ஆடிய தாண்டவம்

சிதம்பரம் ஸ்ரீ கற்பக கணபதி

சிதம்பரம்.

சைவர்களுக்குத் தலையாய கோயில்.

பஞ்சபூத ஸ்தலங்களுள் ஆகாய ஸ்தலம்.

பெரும் பெருமைகளும், புராதனமும் கொண்டது. வேத புராண இதிகாச காலங்களிலும் மேன்மை பெற்றதாகத் திகழ்ந்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் புகழ் வாய்ந்தது.

இவ்வாலயத்தில் இருக்கும் ஒவ்வொரு கல்லும் ஒரு புராணம் பகரும்.

சிதம்பரம் - ஒரு புகழ்பெற்ற ஸ்தலமாக மட்டுமல்லாமல் பல கலைகள் (நாட்டியம், சாஸ்திரம், சங்கீதம், சிற்பம், ஓவியம் & இதர) விளைந்த செழித்த கலா பீடமாகவும் திகழ்ந்தது.

தமிழ்ச் சைவத்தின் உயிர் மூச்சாகிய, பன்னிரு திருமுறைகளின் எந்த ஒரு பதிகம் பாடத் தொடங்கினாலும், 'திருச்சிற்றம்பலம்' என்றே சிதம்பரத்தின் மறு பெயரைச் சொல்ல என்ற காலம் காலமாகத் தொடர்ந்து வரும் மரபு, இத்தலத்தின் மேன்மையை உணர்த்துகின்றது.

அனைத்துக் கலைகளிலும் தேர்ந்த ஸர்வகலா மேதைகளான தீக்ஷிதர்கள் எனும் தில்லை வாழந்தணர்கள் திருமுன்பு, பல பெரிய புலவர்களும், சிதம்பரத்திற்கு வந்து, தமது படைப்புகளை பட்டியலிட்டு, புகழ் பெற்றிருக்கின்றார்கள். (இன்றளவும் நாட்டிய மாணவர்கள் தங்கள் முதல் நாட்டியமாகிய அரங்கேற்றத்தை சிதம்பரத்தில் அர்ப்பணிக்க விரும்புகின்றார்கள்.)

கவிச்சக்கரவர்த்தி கம்பர் தனது கம்பராமாயணத்தை சிதம்பரத்தில் தான் அரங்கேற்றினார்.

சேக்கிழார் பெருமான், சிவனடியார்களின் பெருமைகளைப் போற்றும், திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தை தில்லை தீக்ஷிதர்கள் தலைமையில், ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றினார்.

ஸகலகலா சங்கமம் மட்டுமல்லாமல், ஸகல தெய்வங்களும் சங்கமிக்கும் ஒரே திருத்தலம் சிதம்பரம். சிதம்பரம் நடராஜப் பெருமானுக்குச் செய்விக்கப்படும் ஆறு கால பூஜைகளில், ஆறாவது கால பூஜையும், இரவு வேளை பூர்த்தி பூஜையும் ஆகிய அர்த்தஜாம பூஜையில் அனைத்து தெய்வ அம்சங்களும் நடராஜ மூர்த்தியிடம் ஐக்கியமாகிவிடுவதாக சிதம்பர க்ஷேத்ர புராணங்கள் தெரிவிக்கின்றன.

நம் தேசத்திலிருக்கும் பல புகழ்பெற்ற ஆலயங்களின் மூர்த்திகள் இவ்வாலயத்திற்குள் வீற்றிருக்கின்றார்கள். (திருக்கடையூர் கால ஸம்ஹார மூர்த்தி, காசி அன்னபூரணி, சபரிமலை சாஸ்தா, திருச்சி தாயுமானவர்...)

சிதம்பரம் ஆலயம் சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கின்றது. நடுநாயகமாகவும், ஆலயத்தின் இதயம் போன்ற இடத்திலும் நடராஜர் நர்த்தனம் ஆடுகின்றார். அந்த மைய இடத்தைச் சுற்றி, பல்வேறு சிறப்புகள் கொண்ட பல ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தினுள் அமைந்த ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றன.

அச்சிறப்பு பெற்ற கோயில்களுள் ஒன்றாகிய, ஸ்ரீ கற்பக கணபதி ஆலயம் பற்றி சிறிது காண்போம்.

சிதம்பரம் ஆலயத்திற்கு நான்கு கோபுரங்கள் நான்கு வேதங்களாக அமைந்திருக்கின்றன. (நான்கு கோபுரங்கள் பற்றிய மேல் விபரங்கள் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்)

நான்கு கோபுர வாயில்கள் வழியேயும் நடராஜரை தரிசனம் செய்ய வரமுடியும்.

ஸ்ரீ கற்பக கணபதி :

எந்தவொருச் செயலைத் தொடங்கும் முன்னும் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குவது போல, ஆலய தரிசனம் செய்யும் முன்னும், விநாயகரை வழிபடவேண்டும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

நான்கு கோபுரங்களின் வழியேயும் வருகை தரும்போது, முதற்கண், முழுமுதற் கடவுளாகிய கணபதியை வழிபட வகை அமைந்த ஒரு அற்புதத் தலம் சிதம்பரம்.

மேற்கு கோபுரம் வழியே நடராஜரை தரிசனம் செய்ய வருபவர்கள் முதலில், கற்பக கணபதியை வழிபட வேண்டும்.

மேற்கு கோபுரத்தின் கல்ஹாரம் எனும் அமைப்பில், கருங்கல் புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பவர் ஸ்ரீ கற்பக கணபதி. அந்தப் புடைப்புச் சிற்பத்தை மையமாகக் கொண்டு ஆலயம் அமைந்திருப்பது அதிசிறப்பானது.

[விநாயகப் பெருமானின் தோற்றத்தைப் பற்றி அறிய இங்கே & சங்கடஹர சதுர்த்தி வழிபாடு பற்றியும் மேல் விபரங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.]

பொதுவாக, விநாயகர் ஆலயம் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும். ஸ்ரீ கற்பக கணபதி மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பது மிகவும் சிறப்பாகக் கூறப்படுகின்றது.

கற்பகத் தரு என்றால் கேட்டதைக் கொடுக்கும் தேவலோக மரம் என்று பொருள். அதுபோல், நாம் கேட்கும் வேண்டுதல்களை உடனடியாகத் தரக்கூடியவர் ஸ்ரீ கற்பக கணபதி.

சிதம்பரத்தின் நான்கு ரத வீதிகளில் மேற்கு ரத வீதி - இவரின் பார்வைபடும்படியாக அமைந்திருக்கின்றது. இவரின் பார்வையால், மேற்கு ரத வீதி செல்வ நடமாட்டம் (money circulation) மிக்கதாக, கடை வீதியாக (bazaar street) அமைந்திருப்பது இவரின் வரம் தரும் தன்மையைக் காட்டுகின்றது.

ஸ்ரீ கற்பக கணபதி - வணிகர்களின் வழிபாட்டில் மிக முக்கிய இடம் பெறுபவர்.

செல்வங்களை வாரி வழங்கும் செல்வகணபதியாகவும் திகழ்பவர். 'ருணமோசன கணபதி' என்று போற்றப்படுபவர். ருணம் என்றால் கடன். மோசனம் - நீக்குபவர். கடன்களை அகற்றி வாழ்வில் செல்வங்களை அள்ளித் தருபவர். ஸ்ரீ ருணமோசன கணபதி ஸ்தோத்திரம் கொண்டு வழிபாடு செய்பவர்கள், வாழ்வில் ஸகல செல்வங்களையும் பெறுவார்கள்.

[நவக்ரஹங்களில் செல்வங்களுக்கு அதிபதியாக விளங்கும் சுக்ர பகவான், விநாயகரைப் போற்றி வழிபட்ட ஸ்தோத்திரம் - ருணமோசன மஹாகணபதி ஸ்தோத்திரம். ஒவ்வொரு வரியின் முடிவிலும் 'ருணமுக்தயே' (கடன் நீங்கவேண்டும்) என்று அமையும்.

ஸ்ரீ கற்பக கணபதியைப் போற்றிடவும், கடன்கள் அகலவும் மற்றும் ஒரு ஸ்தோத்திரம் உண்டு. ஸ்ரீக்ருஷ்ணயாமளம் எனும் பெருமந்திரத் தொகுப்பில் அடங்கியதும், ஸ்ரீ சிவபெருமானாலேயே - கடன்களை அகற்ற வல்ல, கணபதியைப் போற்றிட வழிசெய்யும் ஸ்தோத்திரம் - அருளப் பெற்றதும் ஆகிய இதன் ஒவ்வொரு வரி முடிவிலும் 'ருணநாசம் கரோது மே' (கடன் நசித்துப் போகவேண்டும்) என்று அமையும்.]

ஸ்ரீ கற்பக கணபதி புராணம்:

பொதுவாக கணபதி ஆலயங்கள் கிழக்கு நோக்கி அமைந்திருக்க, கற்பக விநாயகர் ஏன் மேற்கு முகமாக அமைந்திருக்கின்றார்?

இதற்கென்று தனி புராணம் உண்டு.

அத்ரி மகரிஷியின் புத்திரரும், முனிச்ரேஷ்டரும், தவம் செய்வதில் ஈடற்றவரும், பெரும் தவ வலிமை கொண்டவரும், அதே சமயம் அதீத முன் கோபம் கொண்டவரும், கோபம் வந்தால் உடனே சாபம் அளிப்பவரும் ஆகிய துர்வாச மகரிஷி, ஒரு சமயம், சிதம்பரத்தில் நடராஜப் பெருமானின் திருநடனத்தைக் காண, தன் சீடர்கள் சூழ பரிவாரங்களோடு, மேற்கு கோபுர வாயில் வழியாக வந்தார்.

அவர் வரும் சமயம், நிசித காலம் எனும் நள்ளிரவுப் பொழுது ஆகிவிடுகின்றது. கோயில் பூஜைகள் அனைத்தும் முடிந்து திருக்காப்பிட்டு நெடுநேரமும் ஆகிவிட்டது.

ஆயினும், துர்வாசர் நடராஜப் பெருமானின் திருத்தாண்டவக் கோலத்தை ஆர்வமுடன் காண வருகின்றார். நெடுந்தூரத்திலிருந்து நடந்து வந்த காரணத்தால் அனைவரும் பசித்திருக்கின்றனர்.

பசியோடும், ஆவலோடும் வரும் துர்வாசரைக் கண்ட அனைவரும் அஞ்சுகின்றார்கள். திருக்காப்பிடப்பட்டுள்ளதால், நடராஜரைக் காண முடியாத துர்வாசர் சாபம் கொடுத்துவிடுவாரோ என்று பயம் கொள்கின்றார்கள்.

அனைத்துலக் காரணியும், அனைவருக்கும் அன்னமிடும் அம்பிகையின் அம்சமாகிய, அன்னபூரணி தேவி தோன்றி, முதலில் துர்வாசர் முதற்கொண்டு, சீடர்கள் வரை அனைவருக்கும் அன்னமிட்டு வயிறைக் குளிர்விக்கின்றாள். (குஞ்சிதாங்கிரிஸ்தவம் - 143ம் பாடல்.)

[துர்வாசருக்காகத் தோன்றிய அன்னபூரணி, இன்றும் ஆலய பிரசாதங்கள் சமைக்கும் இடமாகிய மடைப்பள்ளியின் முகப்பு மண்டபத்தில் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றாள். இவர்கள் அனைவரும் அன்னம் புசித்த இடம் - இன்றும் மேற்கு கோபுரத்திற்குச் சற்றுத் தொலைவில் 'மேலமடம்' (அகோர சிவாச்சாரியர் மடம் - இங்கு துர்வாசருக்கு சிலை உண்டு) அமைந்திருக்கின்றது.]

தந்தைக்காக தாண்டவம் ஆடிய தனயன் :

வயிறு குளிர்ந்த அனைவரும், மனம் குளிர தரிசனம் செய்ய வருகின்றார்கள். ஆயினும், கதவுகள் சாற்றப்பட்ட நிலையில் எப்படி நடராஜரை தரிசனம் செய்ய முடியும்?

இங்கு தான் விநாயகர் அருள் பாலிக்கின்றார்.

தரிசனம் செய்ய வரும் அனைவரையும் மேற்கு கோபுரத்தின் வாயிலில் விநாயகர் தோன்றி வரவேற்கின்றார்.

துர்வாசர் விநாயகப் பெருமானை வணங்கி வழிபடுகின்றார்.

விநாயகப் பெருமான், துர்வாசரின் தரிசன விருப்பத்தை மனதில் கொண்டு, தன் தந்தையாகிய நடராஜப் பெருமான், எப்படி ஆனந்த நடனக் காட்சியை நல்கினார் என்பதை, தனது பெருத்த உடலோடு, விடைத்த பெரிய காதுகளோடு, சலங்கை ஒலிக்க, அங்கங்கள் குலுங்க நடனமாடிக் காட்டுகின்றார்.

இதைக் கண்ட அனைவரும், ஐங்கரனின் ஆட்டத்தில் மனம் குலுங்கி சிரித்து மகிழ்கின்றனர்.

இத்தாண்டவத்தைக் கண்ட அனைவரும் நடராஜப் பெருமானின் திருக்கோலத்தை நினைந்து மனம் குளிர்கின்றனர்.

துர்வாசரும், கண்ணால் கற்பக கணபதி தந்த காட்சியைக் கண்டு, உள்ளம் குளிர்ந்து, உவகை கொண்டு, நடராஜ நடனத்தை தரிசித்த திருப்தியுடன், உலக மக்கள் அனைவரும் உமது நடனக் காட்சியைக் காண வேண்டும் என்று வரம் வேண்டிக்கொண்டு, நடராஜரைத் தரிசிக்காமலேயே, கணபதியின் ஆட்டத்தை நெஞ்சத்தில் கொண்டு, மனதால் ஆனந்த தாண்டவத்தை தரிசித்து, தனது ஆசிரமம் திரும்புகின்றார்.

அனைவர் மனதிலும் பயம் விலகி இன்பமயம் பொங்கச் செல்கின்றனர்.

இதுவே, கற்பக கணபதி மேற்கு கோபுர கல்ஹாரத்தில் குடி கொண்ட புராணம்.

இந்தப் புராண சம்பவம் - தீக்ஷிதர் குல ரத்தினமும், வடமொழியும், தென்மொழியும் தெளிவாகக் கற்றவரும், பெரும் ஞானியும், கி.பி. 14ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் ஆகிய ஸ்ரீ உமாபதி சிவம் அவர்கள், ஸ்ரீ கற்பக கணபதி மேல், தாம் இயற்றிய 'ஸ்ரீ கற்பக கணேச பஞ்சரத்னம்' எனும் ஸ்லோகத்தில் விவரிக்கின்றார். (தூர்வாஸ: ப்ரமுகாகிலர்ஷ விநுத: ஸர்வேச்வரோக்யோ வ்யய: & ஆயாந்தம் நிசி..)

ஸ்ரீ கற்பக கணபதியே சிதம்பரம் ஆலயத்தின் ஸ்தல விநாயகராக கொண்டாடப் படுகின்றார்.

ஸ்ரீ கற்பக கணபதி மூர்த்தியை, உமாபதி சிவம் 'வாஞ்சாகல்ப கணபதி' எனும் வழிபாட்டு முறைப்படி வணங்கியிருக்கின்றார். வாஞ்சாகல்ப வழிபாடு - வேண்டும் வரங்களை விட அதிகமாக வழங்கச் செய்யும் முறை.

நடராஜ மூர்த்தியைப் போல் தாண்டவாமாடிய கற்பக கணபதியைக் காண நந்திகேசரும் வந்திருக்கின்றார்.

பொதுவாக விநாயகர் ஆலயத்தில் மூஞ்சூறு எனும் எலி வாகனம் தான் விநாயகர் எதிரில் அமைந்திருக்கும்.

ஆனால், கற்பக கணபதி ஆலயத்தில், நடேச அம்சமாக நாட்டியம் ஆடியவருக்கு எதிரில் நந்தி வாகனம் அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.

(வல்கலன் எனும் அசுரனை அழிக்க தேவேந்திரன் - சிவ வாகனமாக - நந்தியாக வடிவெடுத்து வந்தான் என்று உமாபதி சிவம் தாம் இயற்றிய குஞ்சிதாங்கிரிஸ்தவத்தில் குறிப்பிடுகின்றார். (பாடல் எண்:41). அந்த இந்திர நந்திதான் இங்கு விநாயகருக்கு எதிரில் இருப்பதாகக் கூறுவார்கள்.)

நடராஜ அம்சமாக விளங்கிய கணபதி ஆலயத்திற்கு நேரெதிரே, சிவ விருக்ஷமாகிய வில்வ மரத்தினை - உமாபதி சிவம் (கி.பி.14ம் நூற்றாண்டு) ஸ்தாபித்தார். அம்மரம் இன்றும் விளங்குகின்றது.

அந்த மரத்தின் இடத்தில் இருந்த ஒரு நாகப் பாம்பினை அங்கிருந்து அகற்றி, கோயிலின் அருகேயே ஒரு துவாரம் அமைத்து, அதற்கு வழிபாடும் செய்தார். அந்த நாகம் இருந்த இடம் இன்று 'ராகு' கிரஹமாக அமைந்து பக்தர்களால் வழிபாடு செய்யப்படுகின்றது.

வரலாறு :

வரலாற்றின் அடிப்படையில் பார்த்தோமானால்,

கி.பி.1178 முதல் 1218 வரை தமிழகத்தை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கன், சிதம்பரம் ஆலயத்திற்கு பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளான்.

இந்த விநாயகரின் கீழ் 'குலோத்துங்கச் சோழ விநாயகர்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுக் குறிப்பு ஒன்று - இராஜாக்கள் தம்பிரான் திருமாளிகை மேலைத் திருமாளிகையில் நிலையெழு கோபுரத் திருவாசல் புறவாசல் தென்பக்கத்து எழுந்தருளியிருந்து பூசை கொண்டருளுகிற குலோத்துங்கச் சோழ விநாயகர் - என்று விவரிக்கின்றது.

ஆக, மேற்கு கோபுரம், குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் உறுதிபடுத்துகின்றனர். (க. வெள்ளைவாரணார், தில்லைப் பெருங்கோயில் வரலாறு)

எனினும், பின் வந்த முதலாம் சுந்தர பாண்டியன் - இக்கோபுரத்தை பெரிதும் பழுதுபார்த்து புதுப்பித்தமையால், இக்கோபுரம் 'சுந்தரபாண்டிய கோபுரம்' என்று பிற்காலக் கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது.

நாட்டியமாடும் கோலத்தில் அமைந்த முதல் விநாயகர் விக்ரஹம் என்ற பெருமையும் ஸ்ரீ கற்பக கணபதிக்கு உண்டு.


அபிராமி அந்தாதியின் ஆதி (வி) நாயகர்

செம்மொழியாம் தமிழ் மொழியில் அமைந்த பல்வேறு பிரபந்த வகைகளுள் ஒன்றான அந்தாதி என்பது சிறப்பு வாய்ந்தது.

ஒரு பாடலின் கடைசி அடியில் உள்ள இறுதி (அந்தம்) வார்த்தையை,

அடுத்து வரும் பாடலுக்கான ஆரம்பமாகக் (ஆதி) கொண்டு,

பாட்டுடைத் தலைமையைப் போற்றுவது. (அந்தம்+ஆதி = அந்தாதி)

அவ்வகையில், பிற்காலத்தில் எழுதப்பட்டதும், மக்களின் மனதில் எளிதில் இடம்பெற்றதும், மிகவும் பிரபலமானதும், ஆதிசக்தியான அம்பிகையைப் போற்றுவதும், பொருட்சுவையும், அழகிய சொல்லமைப்பும், அருமையான பண்ணமைப்பும் கொண்ட 'அபிராமி அந்தாதி' - திருக்கடையூரில் வாழ்ந்த சுப்ரமண்யன் என்ற இயற்பெயர் கொண்ட 'அபிராமப் பட்டர்' அவர்களால் இயற்றப்பட்டது.

இவர், தமிழ், வடமொழி, சங்கீதம், ஜோதிடம் போன்ற கலைகளைக் களங்கமறக் கற்றவர்,

திருக்கடையூரில் அருள்பாலிக்கும் அபிராமியைத் துதித்துப் பாடப்பட்டது அபிராமி அந்தாதி.

அபிராம பட்டரின் பக்திக்காக, அமாவாசையை, அபிராமவல்லி தனது தாடங்கத்தை (தோடு) வீசி பெளர்ணமியாக பிரகாசிக்கச் செய்தாள்.

அபிராமி அந்தாதியின் முதல் பாடல் - விநாயகரை வழிபடுகின்ற - காப்புச் செய்யுள்.


தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும் தில்லை

ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகேழையும் பெற்ற

சீர் அபிராமி அந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே

காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே.


தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே - என்று அபிராம பட்டர் - சிதம்பரத்தில் அமைந்து அருள்பாலிக்கும் - தில்லை ஸ்தல விநாயகராகிய ஸ்ரீ கற்பகக் கணபதியைத் தான் குறிப்பிடுகின்றார் என்று அபிராமி அந்தாதியையும், சிதம்பரத்தையும் இணைந்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள்.

ஆய்வாளர்கள் சிலர் - திருக்கடையூரில் அருளும் 'கள்ளவாரணப் பிள்ளையாரை'த் தான் குறிப்பிடுகின்றார் என்பார்கள். இந்தப் பிள்ளையாரைப் போற்றி தனியாக 'கள்ளவாரணப் பிள்ளையார் பதிகம்' அபிராம பட்டர் பாடியிருக்கின்றார்.

ஆகவே தான், சிதம்பரம் கற்பக விநாயகரைப் போற்றி எழுதியிருக்கின்றார் என்பார்கள்.

அபிராமி அந்தாதிக்கு ஆதி (முதல்) பாடல் விநாயகரைப் போற்றி அமைந்திருக்கின்றது.

அபிராமி அந்தாதிக்கு மற்றும் ஒரு சிறப்பு உண்டு. ஒரு பாடலுக்கும், அடுத்து வரும் பாடலுக்கும், அந்தம் ஆதி எனத் தொடர்பு உண்டு என்பது பலரும் அறிந்தது.

அபிராமி அந்தாதி (தொகுப்பு) முழுவதையும் எடுத்துக்கொண்டால் அதுவும் அந்தாதியாகத் தான் அமைகின்ற மாண்பு மிக மிகச் சிறப்பு வாய்ந்தது.

காப்புச் செய்யுளுக்கு அடுத்ததாக, அபிராமியைப் போற்றும் முதல் பதிகம் - 'உதிக்கின்ற செங்கதிர்' என்று தொடங்குகின்றது.

நூறாவது பாடல் - 'குழையைத் தழுவிய' என்று தொடங்கி 'உதிக்கின்றவே' என்று நிறைவுறுகின்றது.

இந்த 'உதிக்கின்றவே' என்ற கடைசி பதம் (அந்தம்), முதல் பதிகத்தில் 'உதிக்கின்ற செங்கதிர்' என்று தொடங்குகிறது (ஆதி).

ஆக, இந்த அந்தாதியை ஒவ்வொரு முறை சொல்லும் போதும் அதன் பலன் அளவிடற்கரியது என்று பக்தர்கள் சிலாகிப்பார்கள்.

(சிதம்பரத்தில் அரங்கேற்றப்பட்ட, பெரிய புராணம் 'உலகெலாம்' எனத் தொடங்கி, இறுதியில் 'உலகெலாம்' என்று நிறைவுபெறும்.)

அந்தாதி - உரைப்பது என்னவெனில், பரம்பொருள், அவரே ஆதி. அவரே அந்தம்.

ஆதியும் அந்தமும் தொடர்பில் இருப்பதால் - ஒரு இணைப்பு நிறைவு செய்வதால் - ஆதியும் அந்தமும் இல்லாத இறையை இடைவிடாது இறைஞ்சினோமானால், இப்பிறப்பில் இன்பமும், மறுமையில் இறைவனிடத்திலும் (முக்தி) கொண்டு செல்லும் என்பது தெளிவுபடக் கூறுகின்றது.

அபிராமி அந்தாதியின் ஆதி நாயகரும், தந்தையாகிய நடராஜரின் தாண்டவத்தை ஆடிக் காட்டி அருளிய, தனயனாகியவரும், சிதம்பரம் ஸ்தல விநாயகரும் ஆகிய கற்பக விநாயகரின் பாதம் பணிந்து பயனுறுவோம் !

*****

பி.கு. : துர்வாசருக்காக நடனமாடியவர் கற்பக கணபதி. மேற்கு கோபுர வழி வரும் பக்தர்கள் இவரைத் தான் முதலில் வழிபட வேண்டும். விநாயகரைத் தரிசித்தால், உடன் முருகனையும் வழிபட வேண்டும் அல்லவா?

கற்பக கணபதியைத் தரிசித்து கிழக்கு நோக்கி கோயில் உள் சென்று இடது புறம் திரும்பினால், அதே மேற்கு கோபுரத்தில், கல்ஹாரத்தில் புடைப்புச் சிற்பமாக விளங்கும் குமரக்கோட்டத்தில் அமைந்திருக்கக் கூடிய முருகப் பெருமானை வழிபட வேண்டும்.

இந்த முருகருடைய சிறப்புக்களில் ஒன்று : அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் நடராஜர் போன்று தாண்டவமாடிக் காட்டினார். முருகனின் தாண்டவமாடியக் காட்சியை 'தரிகிட தரிகிட தாகு டாத்திரி .. அணிதிகழ் மிகுபுலி யூர்வியாக்ரனும் அரிதென முறை முறை ஆடல்காட்டிய பெருமாளே' என முருகனின் தாண்டவத்தைப் புகழ்ந்து போற்றுகின்றார். (இக்கோயில் பற்றி பிறகு விபரமாகப் பார்க்கலாம்)

தாண்டவமாடிய விநாயகர் & முருகரின் தரிசனத்திற்குப் பிறகு நடராஜ மூர்த்தியை தரிசனம் செய்வது மரபு.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

- Mobile : 9443479572 & 93626 09299

- Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com

- Please visit also : www.facebook.com/deekshidhar

(ஃபோட்டோக்கள் எடுத்து அனுப்பி உதவிய ஸ்ரீ B. செந்தில் கணேச தீக்ஷிதருக்கு நன்றி)