Tuesday, March 17, 2015

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மஹா ஸம்ப்ரோக்‌ஷண மஹா கும்பாபிஷேக பத்திரிகை



ஸ்ரீ சிவகாம ஸுந்தரி ஸமேத ஸ்ரீமன் ஆனந்த நடராஜராஜ மூர்த்தி ஸஹாயம்
திருச்சிற்றம்பலம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜ ராஜர் ஆலய மஹா ஸம்ப்ரோக்ஷண
மஹா கும்பாபிஷேக பத்திரிகை

நாள் : ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம், சித்திரை மாதம் 18ம் தேதி, 01.05.2015, வெள்ளிக் கிழமை
நேரம் : காலை 07.00 முதல் 08.30 வரை ரிஷப லக்னம்

न॑म॒: शंक॒रा॑य॒ च मयस्क॒रा॒य च॒ न॑म॒: शि॒वा॑य॒ च शि॒व॑त॒राय च ॥
ग॑छ॒ त्वै भ॑गवा॒न पु॑न॒रा॑ग॒मनाय पु॑न॒र्दर्सनाय॒ स॑ह॒देव्याय॒ स॑ह॒वृषाय॒ स॑ह॒गनाय॒  स॑ह॒पार्ष॒दा॑य॒ य॑था॒हुताय॒ न॑मो॒नमाय॒ न॑म॒: शिवाय॒  न॑म॒स्ते अस्तु॒ मा॑ मा॒ हिँसी: ।।
- சுக்ல யஜுர் வேத மைத்ராயிணி சாகை ஸ்ரீ ருத்ரம்

ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்சுகடகம்
பதஞ்சலி த்ருகஞ்சஞ்சமசஞ்சலபதம் ஜனன பஞ்சன கரம் கதம்பருசிமம் பரவஸம் பரமமம்புத கதம்பக விடம்பககலம்
சிதம்புதி மணிம்புத ஹ்ருதம்புஜ ரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||
- பதஞ்சலி ரிஷி

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
-         சேக்கிழார்

அன்புடையீர்,
கோயில் என்றாலே பொருள்படும் சிதம்பரத்தில் அனுதினமும் ஆடல்காட்சியை நல்கி ஆனந்தத்தை அளித்திடும் ஆடல்வல்லப் பெருமானாகிய ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்திக்கு மஹா ஸம்ப்ரோக்‌ஷண மஹா கும்பாபிஷேக வைபவம் மேற்கண்ட தேதியில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றாலும் சிறப்புற்ற தலம் - சிதம்பரம். சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த தலம். உலக புருஷனின் இதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்),  தரிசிக்க முக்தி தரும், சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த,  பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த, வேண்டுவதை உடன் அருளும், மரண பயம் போக்கும் ஸ்தலம்.
சிதம்பர ரகசிய ஸ்தானம் அமைந்த புண்யதலம். காலத்தால் மிக முந்தைய சிவத்தலம். தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என சுந்தர மூர்த்தி சுவாமிகளால் புகழப்பெற்ற தில்லை மூவாயிரவர் எனப் போற்றப்படும் தீக்‌ஷிதர்களால் வேதவழி பூஜைகள் சிறப்புற நடைபெறும் அருட்தலம். ஆன்மீகத்தின் அனைத்து கலைகளிலும் முன்னோடியாக திகழும் திருத்தலம். பற்பல அருளாளர்களால் பாடப் பெற்ற சைவத்தலம். தமிழ் திருமுறைகள் கண்டெடுக்கப்பட்ட தவத்தலம்.
சிவகங்கை எனும் தீர்த்தம் (குளம்) கோயிலினுள் அமைந்து கங்கைக்கு மேலான பலன்களை வழங்குகின்றது.

ஸ்ரீ நடராஜ ராஜர் - அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர். வேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள் போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.

சித்ஸபை எனும் பொன்னம்பலத்தில் நடமிடும் நடராஜர் கருவறையில் ஒளிரும் தீப ஒளிக்கு மேலும் ஒளிதரும் அருள்முகம், திருமேனியில் அணிவிப்பதால் நகைகள் அழகுபெறும் திருக்கோலம், முகத்தில் என்றும் பூத்திருக்கும் புன்னகை, அருகிலிருக்கும் அம்பிகையை சற்றே திரும்பிப் பார்க்கும் பதிமுகம், அப்பர் சுவாமிகள் சொல்வது போல வருவோரைத் தனிப்பட்ட முறையில் கவனிப்பது போன்ற கருணை முகம், அண்டிவரும் அனைவரையும் அஞ்சல் வேண்டாம் எனக்கூறி அபயம் எனும் அருள்தரும் வலக்கை, இம்மையிலும், மறுமையிலும் வரம் தரும் தூக்கிய இடது திருவடி (குஞ்சிதபாதம்), பாபங்களைக் களையும் முயலகன் எனும் அரக்கனின் மேல் ஊன்றிய வலது திருவடி, தரிசனம் செய்தோர் திரும்பவும் தரிசிக்க ஈர்க்கும் காந்த வடிவம் கொண்டு - அன்பர்களுக்கு  என்றும் அருள்பாலிக்கின்றார்.

ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேதராக விளங்கும் ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்தி வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனே வரமளித்து, நற்குழந்தைப் பேறு, வம்ச அபிவிருத்தி, குழந்தைகளின் கல்வியில் மேன்மை, கற்ற கல்வியினால் நல்வேலை வாய்ப்பு, பதவிகளில் மென்மேலும் உயர்வு, நல்ல இல்லறத் துணை, எதிரிகளால் ஏற்படும் அனைத்து இடர்ப்பாடுகளையும் களைந்து நோய்கள் இல்லாத நீடித்த ஆனந்தமான நல்வாழ்வு என அனைத்தையும் அருளக்கூடியவர்.

உலக மக்கள் உய்யும் பொருட்டு, ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்காலத்தில் நாம் காண உள்ள மிகப் பெரும் பிரம்மாண்டமான வைபவமாகவும், புண்ணியங்களை ஒரு சேர நல்கும் நிகழ்வாகவும், பனிரண்டு கால யாக பூஜைகளுடனும், முப்பத்திரண்டு யாக குண்டங்களுடனும், பதஞ்சலி மஹரிஷி வகுத்த பூஜா ஸூக்தங்களின்படி, சதுர்வேத பாராயணங்களுடன், ஸூக்ஷ்ம வழிபாடுகளுடன், திருமுறை முற்றோதல்களுடன், தில்லை மூவாயிரவர் எனும் த்ரிஸஹஸ்ர முனீஸ்வரர்கள் என்றும் வைதீக வழியில் பூஜைகள் நடத்தும் - பொது தீக்‌ஷிதர்களால் - மஹா மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது.

யாகசாலை நிகழ்ச்சி நிரல்

22.04.2015, புதன் கிழமை, காலை கூஷ்மாண்ட ஹோமம், மஹா கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம்
23.04.2015 வியாழன் - காலை நாந்தி பூஜை, அனுக்ஞை, தன பூஜை, மாலை வாஸ்து சாந்தி ஹோமம்
24.04.2015 வெள்ளி - காலை ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரம், ப்ரதிஸரம், மதுபர்க்கம், ரக்‌ஷாபந்தனம்
25.04.2015 சனி - காலை மந்தரஜபம், கலாகர்ஷணம், கும்பஸ்தாபனம், விசேஷ ந்யாஸ அர்ச்சனை, தீபாராதனை.
மாலை முதல் கால யாக பூஜை
26.04.2015 ஞாயிறு - காலை & மாலை - இரண்டாம் & மூன்றாம் கால பூஜை
27.04.2015 திங்கள் - காலை & மாலை நான்காம் & ஐந்தாம் கால பூஜை
28.04.2015 செவ்வாய் - காலை & மாலை ஆறாம் & ஏழாம் கால பூஜை
29.04.2015 புதன் - காலை & மாலை எட்டாம் & ஒன்பதாம் கால பூஜை
30.04.2015 வியாழன் - காலை, மாலை & இரவு பத்தாம், பதினொன்றாம் & பனிரண்டாம் கால பூஜை
01.05.2015 வெள்ளிக் கிழமை காலை தம்பதி பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை, ஸுவாசினி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அச்வ பூஜை, கும்பங்களின் யாத்ரா தானம்.

காலை மணி 07.00 மணிக்கு மேல் 08.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில்,
சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் எனும் ஸ்ரீ சிவகாம ஸுந்தரி ஸமேத ஸ்ரீ மன் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தி சித்ஸபா ஸம்ப்ரோக்‌ஷண சித்விலாஸ மஹா கும்பாபிஷேகமும், அதே நேரத்தில் ராஜ ஸபை எனும் ஆயிரங்கால் மண்டபத்திற்கும், நான்கு ராஜ கோபுரங்களுக்கும்  மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறும்.


01.05.2015 ஸகோபுரம் எனும் சப்பரம் எனும் தெருவடைச்சானில் பஞ்சமூர்த்தி வீதியுலா.  





02.05.2015 சனிக்கிழமை காலை சித்ஸபையிலிருந்து தேருக்கு எழுந்தருள யாத்ராதானம், ரதோத்ஸவம் எனும் (மஹா கும்பாபிஷேகத்திற்கான பிரத்யேகமான) தேர்த் திருவிழா. இரவு ராஜ ஸபை எனும்ஆயிரங்கால் மண்டபத்தில் ஏககால லக்‌ஷார்ச்சனை







03.05.2015 ஞாயிறு அதிகாலை மஹாபிஷேகம்
மதியம் ராஜஸபையிலிருந்து சித்ஸபைக்கு அருளாடலுடன் எழுந்தருளும் ஞானாகாச சித்ஸபா ப்ரவேசம் எனும் மஹா மஹா தரிசனக் காட்சி.

04.05.2015 திங்கள் இரவு பஞ்சமூர்த்திகள் விசேஷ முத்துப் பல்லக்கில் வீதியுலா.

மஹா கும்பாபிஷேக யாகசாலை காலங்களின் பொழுது, வேத விற்பன்னர்களைக் கொண்டு ரிக், யஜுர், ஸாமம் & அதர்வண வேத பாராயணங்கள், தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு   நாதஸ்வர இன்னிசை, ஓதுவார் மூர்த்திகளின் பண்ணிசை கச்சேரிகள் & திருமுறை பாராயணங்கள், வாய்ப்பாட்டு, சிறப்பு இசைக் கருவிகளின் கச்சேரிகள், உபந்யாஸங்கள், நாமஸங்கீர்த்தனங்கள், பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சிறப்பு அன்னதானம் ஒவ்வொரு காலத்திலும் அளிக்கப்படும்.

மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் சிறப்பு யாக பூஜைகளுடனும், அபிஷேக ஆராதனைகளுடனும், ஸஹஸ்ர போஜனத்துடனும் சிறப்புற நடைபெறும்.

பக்தர்கள் அனைவரும் காணுதற்கரிய இந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்ரீ சிவகாம ஸுந்தரி ஸமேத ஸ்ரீமந் ஆனந்த நடராஜ  ராஜ மூர்த்தியின் பரிபூரண அருளைப் பெற வேண்டுகின்றோம்.

நி.த. நடராஜ தீக்‌ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜை
20/15, வடக்கு சன்னதி, சிதம்பரம் 608 001.
Mobile : 94434 79572, 93626 09299.








Tuesday, March 10, 2015

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பாலாலய ஸம்ப்ரோக்‌ஷணம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பாலாலய ஸம்ப்ரோக்‌ஷணம்

நடராஜர் ஆலய மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, பாலாலய வைபவம் நேற்று, 08.03.2015 அன்று காலை 09 மணியளவில் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்‌ஷிதர்களின் ஏற்பாட்டின் படி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாலாலய வைபவம் மிக பிரம்மாண்டமான அளவிலும்,
ஒவ்வொரு யாக காலத்திலும்,
நாதஸ்வர இன்னிசையுடனும், 
ருக், யஜுர், ஸாமம், அதர்வண வேத கோஷங்களுடனும்,
18 புராணங்களின் பாராயணங்களுடனும்,
சிறப்பான மூல மந்திர ஜபங்களுடனும்,
ஸூத ஸம்ஹிதை போன்ற சிதம்பர புராணத்தைப் பகரும் ஸ்லோகங்களுடனும்,
திருமுறை முற்றோதல்களுடனும்,
தேவார பண்ணிசைகளுடனும்,
பதஞ்சலி பூஜா ஸூக்தங்களின்படி யாகசாலை ஹோம நிகழ்ச்சிகளுடனும்
செவ்வனே நடைபெற்றது.

நேற்று காலை 06 மணியளவில், 6 காலங்கள், 11 யாக குண்டங்கள் கொண்டு பூஜை செய்யப்பட்ட - புனித நீர்க்குடங்கள் - தேவஸபைக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, அத்தி மரப் பலகையில் அமைந்த பாலாலய பலகைகளுக்கு சக்தியேற்றம் செய்யப்பட்டு, பிறகு நித்தியப்படி ஆறு கால பூஜைகளில் அபிஷேகம் செய்யப்படும் ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் - ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பொது தீக்‌ஷிதர்களின் தலைமையில், பிரஸாத விநியோகம் செய்யப்பட்டது.

தினந்தோறும் ஆறுகால பூஜைகளும் தேவ ஸபையில் நடைபெறும்.

தேவஸபையில் - ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் (ஸ்படிக லிங்க) அபிஷேகமும், ரத்ன ஸபாபதி (மரகத நடராஜர்) அபிஷேகமும் - காண்பது பெரிதிலும் பெரிதான பலன்களைத் தரக்கூடியது.

பக்தர்கள் வந்து தரிசித்து பெருநட்னமிடும் பெம்மானின் பேரருளைப் பெறுவீர்களாக !

- நி.த.நடராஜ தீக்‌ஷிதர்
http://natarajadeekshidhar.blogspot.in
www.facebook.com/deekshidhar
Mobile : 94434 79572, 93626 09299.









Friday, March 6, 2015

வந்தாடினார்! நெஞ்சில் நின்றாடினார் !

வந்தாடினார்! நெஞ்சில் நின்றாடினார் !

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சித்ஸபையிலிருந்து தேவஸபை எழுந்தருளினார்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மஹா கும்பாபிஷேக மஹா ஸம்ப்ரோக்‌ஷண மஹா வைபவம் 01.05.2015 அன்று நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக, நடராஜர் ஆலய பாலாலய வைபவம் 02.03.15 - 08.03.2015 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிகழ்வின் மிக முக்கிய வைபவம் - சிதம்பரம் நடராஜர் சித்ஸபை எனும் கருவறையிலிருந்து, அங்கு நடைபெற உள்ள திருப்பணிகள் காரணமாக, சிதம்பர ஆலயத்தில் உள்ள பஞச ஸபைகளில் (1.சித்ஸபை, 2. கனகசபை, 3. தேவஸபை, 4. நிருத்தஸபை &  5.ராஜஸபை)  ஒன்றான தேவஸபைக்கு கண்கொள்ளாக் காட்சியாக, அரிதிலும் அரிதான பெருநிகழ்வாக 05.03.2015 அன்று காலை 09.00 மணியளவில் எழுந்தருளினார்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பொது தீக்‌ஷிதர்களின் சீரிய வழிகாட்டுதல் மற்றும் சிறப்பான ஏற்பாடுகளின்படி, 05.03.2015 - அன்று வேதபாராயணங்களுடன் கூடிய மஹா ஜபங்களும், அதிகாலை 03.00 மணி முதலாக தெய்வக் கலைகளை திருக்குடங்களில் சக்தியேற்றம் செய்வதான கலாகர்ஷண நிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கியது.

சித்ஸபை எனும் பொன்னம்பலத்திற்கான கலசங்கள், கனகசபைக்கான கலசங்கள், சிதம்பர ரகசியத்திற்கான கலசங்கள் என மூன்று அமைப்புகளுக்கான  கலாகர்ஷண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து, சித்ஸபை எனும் பொன்னம்பலத்தில் இருக்கும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அணையாத தீபம் - பசுமாடு கன்றுடன் புறப்பாடு செய்யப்பட்டு, அடுத்ததாக சித்ஸபையில் அமைந்துள்ள ஸ்ரீ பாதுகை ஸ்வாமி, ஸ்ரீ சந்திரசேகரர், ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர், ஸ்ரீ ஸ்படிக லிங்கம், ஸ்ரீ ரத்ன ஸபாபதி - முதலான தெய்வங்கள் மஞ்சங்களில் அமைத்து புறப்பாடு, தொடர்ந்து பள்ளியறையில் உள்ள அம்பிகை - ஆகிய தெய்வங்கள் தேவஸபைக்கு எழுந்தருளச் செய்யப்பட்டது.

அடுத்ததாக, ஆனி மற்றும் மார்கழி உத்ஸவங்களில் மட்டுமே வெளி பிரகாரம் வரும் ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ மூர்த்தி - இன்று கும்பாபிஷேக மஹா வைபவத்திற்காக - பிரத்யேகமாக - தனிச் சிறப்பான புறப்பாடாக - சித்ஸபையிலிருந்து புறப்பாடு செய்யப்பட்டு, கொடிமரம் பிரகாரம் வந்து, உத்ஸவ யாகசாலையில் மஹா தீபாராதனையைத் தொடர்ந்து, தேவஸபை எனும் தனது புதிய தற்காலிக இருப்பிடத்திற்கு எழுந்தருளி அனைவருக்கும் காணுதற்கரிய காட்சி அளித்து, மட்டற்ற மகிழ்வை அளித்தார்.


வலம் வந்தாடினார்! நெஞ்சில் நின்றாடினார் !!
நாதஸ்வர இன்னிசையும், வேத விற்பன்னர்களின் கோஷமும், திருமுறைவாணர்களின் பாடல்களும், ஹரஹரசிவ சிவ, நடராஜா நடராஜா என பக்தர்களின் அறைகூவலும் காதுகளை நிரப்ப, 16 கலை தீவர்த்தி முன்வர, முகத்தில் என்றும் மாறாத புன்னகையுடன், அன்பர்களுக்கு என்றும் அபயம் எனும் திருக்கோலத்துடன், சிறப்பு வகை மாலைகளும், கண்ணைப் பறிக்கும் நகைகளுடன், சக்ரவர்த்தி கோலத்தில், அம்பிகையுடன் ஒன்றிணைந்து வந்தும், சமயத்தில் முன்னும் பின்னும் நடனமாடியும் - பிரகார வலம் வந்த காட்சி - வாழ்வில் நாம் பெற்ற பிறவிப் பயனைத் தந்தது.

இந்தக் காட்சியைக் கண்டவர்கள் - நெஞ்சில் என்றும் நீங்காத நினைவலைகளை நீண்டகாலம் நினைவில் கொள்வார்கள்.

தஹர வித்யா எனும் உபாஸனையின் (இதயத்தில் என்றும் நீங்காத வண்ணம், இறைவனை இதயத்துடன் இணைந்து காணும் யோக உபாஸனை) நாயகனாக விளங்கும் நடராஜப் பெருமானை - இக்காட்சியைக் கண்டவர்கள், காட்சியைக் கண்டவர்களிடம் கேட்டவர்கள், இதனை மனதாலே நினைந்தவர்கள் என அனைவருக்கும் - அருளை வாரி வழங்குவார்.

தேவஸபையில் நாம் தற்போது காணும் அரிதற்கரிதான சிவகாம சுந்தரி ஸமேதராக நடராஜர் விளங்கும் காட்சி - கும்பாபிஷேகத்தின் முதல் நாள் வரை அதாவது 30.04.2015 வரை தரிசிக்க முடியும்.

ஆதிநடனமாகிய தேவர்களுக்காக ஆனந்த நடனம்  ஆடியதை தற்போது தேவஸபையில் அன்பர்களுக்கு ஆடியருள்கின்றார். 

சிறப்புடனும், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், யாகசாலை கால நிகழ்வுகளில், ஒவ்வொரு கால ஹோமமும்அதிவிசேஷமாக, ஸ்படிக லிங்க அபிஷேகமும், கலசத்தில் செய்யப்படும் சிதம்பர ரஹஸ்ய பூஜையும், இரவு அர்த்தஜாம பூஜையும் (யாகசாலையிலேயே பள்ளியறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது)- காணக் கண் கோடி வேண்டும்.

எதிர்வரும்  08.03.2015 அன்று பாலாலய ஸம்ப்ரோக்‌ஷணம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

பக்தர்கள் தரிசித்து அருள் பெறுங்கள் !
 - நி.த. நடராஜ தீக்‌ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
செல் : 94434 79572, 93626 09299
http://natarajadeekshidhar.blogspot.in
yanthralaya@gmail.com



Sunday, March 1, 2015

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பாலாலய வைபவம் &
நெருங்கி வரும் நடராஜர்



அண்டசராசரம் அனைத்தையும் ஆட்டுவித்து, ஆடலை நிகழ்த்திடும், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் பஞ்சக்ருத்யங்கள் செய்து பரமானந்த நடனம் ஆடிடும், அகிலம் அனைத்திலும் உள்ள தெய்வ சக்திகள் அனைத்தையும் தன்னுள் கொண்டு, அனுதினமும் ஆடல்காட்சியை அன்பர்களுக்கு வழங்கிடும், சிதம்பரம் ஸ்ரீ நடராஜ ராஜப் பெருமானுக்கு எதிர்வரும் 01.05.2015 அன்று மஹா கும்பாபிஷேக மஹா ஸம்ப்ரோக்‌ஷண மஹா வைபவம் – இந்த நூற்றாண்டின் பெரிய நிகழ்வாக நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்திற்கு முந்தையதான பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் அல்லது தருணாலயம் எனும் நிகழ்வு எதிர்வரும் 02.03.2015 முதல் 08.03.2015 வரை நடைபெற உள்ளது.

பாலாலயம் என்பது தற்போது தெய்வங்கள் குடிகொண்டுள்ள கருவறையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திருப்பணிகள் செய்ய வேண்டியிருப்பின், தெய்வ ஸாந்நித்யத்தை (அருள்புரி ஆற்றலை) அத்தி மரத்தில் செய்யப்பட்ட அருட்பலகையில், வேதங்கள், பூஜா ஸூக்தங்கள், ஆலய பூஜை முறைகள் காட்டிய வழியின்படி நடத்தப்படும். கும்பாபிஷேக யாகசாலை தொடங்கும்போது அந்த அத்திமரப் பலகையில் உள்ள தெய்வ சக்திகளை கும்பாபிஷேக குடங்களில் சக்தியேற்றம் செய்து, அதனை குறிப்பிட்ட காலங்கள்  ஹோம பூஜைகள் செய்து, மறுபடியும் அந்த தெய்வசக்தி நிறைந்த தீர்த்தத்தை – அந்தந்த தெய்வங்களூக்கே அபிஷேகம் செய்து மேலும் அருட்சக்தி பெருக ஏற்றவகையில் செய்யப்படும் மஹா வைபவம் தான் மஹா கும்பாபிஷேகம்.

அந்த வகையில், பாலாலய பூஜைகளின் நிகழ்ச்சி நிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
02.03.2015 - அனுக்ஞை பூஜை, கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம்
03.03.2015 & 04.03.2015 – காலை மாலை – விசேஷ பூஜைகள், மந்த்ர ஜபம்
05.03.2015 – காலை ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜப் பெருமான் சித்ஸபை எனும் கருவறையிலிருந்து பாலாலய பூஜைகளுக்காக தேவஸபைக்கு எழுந்தருளும் காணுதற்கரிய காட்சி.
அன்று மாலை முதல், 11 குண்டங்கள், 6 காலங்கள் கொண்ட மிகச்சிறப்பான பாலாலய யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
யாகசாலை காலங்கள் : 05.03.2015 – 07.03.2015 வரை
08.03.2015 – அன்று காலை பாலாலயத்திற்கான அத்திமரத்தில் அமைந்த அருட்பலகைகளுக்கு ஸம்ப்ரோக்‌ஷணம்.

நெருங்கி வரும் நடராஜர் :
சிதம்பரத்தின் மூலவரும், உத்ஸவரும் ஆகிய ஆனந்தமா நடராஜபெருமான் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே (ஆனித் திருமஞ்சனம் & மார்கழி ஆருத்ரா தரிசனம்) கருவறையிலிருந்து, வெளி பிரகாரங்களுக்கு வெளிவரும் அற்புத நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்வைக் காணவே லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

ஆனால், 05.03.2015 அன்று காலை - கும்பாபிஷேகத்திற்கு என்றே பிரத்யேகமாக தனது இருப்பிடமாகிய சித்ஸபையிலிருந்து, தேவஸபை எனும் மற்றொரு ஸபைக்கு எழுந்தருளும் காணுதற்கரிய மிகப் பெரும் அரிய நிகழ்வாக நடைபெற உள்ளது.
அன்று முதல் கும்பாபிஷேக கால பூஜைகள் வரை நித்ய பூஜைகள் தேவஸபையில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

இந்த அரிய நிகழ்வு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு நடைபெறும்.  இதைப் போன்றதொரு அதிஅற்புத வைபவம் அடுத்த கும்பாபிஷேக சமயத்தில் மட்டுமே நடைபெறும். (கடந்த 1987 கும்பாபிஷேகத்திற்குப் பிறகு தற்போது 2015 ஆண்டுவரை, ஏறத்தாழ 28 ஆண்டுகளில் எவரும் காணாத மஹோன்னத வைபவம்)

தேவஸபை – தற்போது நடராஜர் இருப்பிடமாகிய சித்ஸபையிலிருந்து கிழக்கு நோக்கிய பிரகாரத்தில் மிக அருகில் அமைந்துள்ளது.

பக்தர்களுக்கு விரைவில்  தரிசனம் தந்து அருள் புரியும் வகையில், கோயிலின் கிழக்கு நுழைவாயிலாகிய 21 படி வாசலுக்கு மிக அருகாமையில் தேவஸபையில் - ஆனந்த திருநடனத்தைக் காண்பிக்கவே, நெருங்கி வருகின்றார்.

நெருங்கி வந்த நடராஜரை நெஞ்சம் நிறைய தரிசிக்க, தேவஸபையில், திருநடனம் புரியும் ஞானமா நடராஜப் பெருமானைக் கண்ணாரக் கண்டு களிக்க அனைவரையும் வரவேற்கின்றோம்.

சிறப்பு மிக்க வகையில் அமைந்த பாலாலய ஹோம பூஜைகளை தரிசிக்கவும், வேண்டிய வரங்களை விரைந்து அருளிடும், வேதநாயகர், தமிழ் மறைகள் போற்றும் தன்னிகரற்றவர், இசைக்கலைகள் இயம்பும் ஈஸ்வரர், பரதம் போற்றும் பரமேஸ்வரர், ஞாலம் போற்றும் ஞானமா நடராஜ ராஜப் பெருமானை – ஒரு புதிய இடத்தில் – தரிசித்து, பேரருள் பெறக் கோருகின்றோம்.


-         நி. த. நடராஜ தீக்‌ஷிதர்
-         சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜை
-         Mobile : 94434 79572, 93626 09299.

-         www.facebook.com/deekshidhar

Saturday, February 28, 2015

முன்நின்று அருளும் முக்குறுணி விநாயகர்

முன்நின்று அருளும்
முக்குறுணி விநாயகர்

 சிதம்பரம் பெரிய பிள்ளையார்


ஸ்ரீ விநாயக மூர்த்தி :
அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.

மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் என்று வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.

விநாயகர் தோற்றத்தினைப் பற்றி பல்வேறு விதமான புராணங்கள் அழகுறப் பகர்கின்றன. (விநாயகர் தோற்றம், விநாயகர் சதுர்த்தி போன்ற விபரங்களை இந்த லிங்க் சென்று படியுங்கள். http://natarajadeekshidhar.blogspot.in/2010/08/11092010.html

முன் நிற்கும் முதற்கடவுள் :
எந்தவொரு சைவ ஆலயங்களிலும் விநாயகருக்கு என்றே தனி இடம் உண்டு. அவரை வழிபட்ட பின்பு தான் மற்ற கடவுளரை வழிபடவேண்டும் என்ற வழக்கமும் உள்ளது.

உலகெங்கிலும் உள்ள ஆலயங்களில் பல்வேறு விதமான வடிவங்களில், எண்ணிலடங்கா நிலைகளில் விநாயகர் அருள்பாலிக்கின்றார்.

அதில், மிகவும் பிரசித்தி பெற்ற, வரங்களை உடன் வாரி வழங்கக் கூடிய, தோற்றத்தினைப் போல பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விதத்திலும் பெரியோனாக விளங்கும், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய பெரிய பிள்ளையார் என்று போற்றப்படும் முக்குறுணி விநாயகர் ஆலயம் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

முக்குறுணி விநாயகர் : 

(அருகிலிருப்பது அரிய பழைய புகைப்படம்)

சிதம்பரம் நடராஜர் கோயிலின் ராஜ கோபுரம் என போற்றக்கூடிய தெற்கு கோபுர வாயிலைத் தாண்டினோமானால், இடது பக்கம் தனியொரு அழகிய ஆலயம் கொண்டு ஸ்ரீ முக்குறுணி விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.


தெற்கு கோபுரத்திலிருந்து தரிசிக்க இருக்கும் முதலாமவர் என்பதால், பெரிய பிள்ளையாரான  இவரை முகக்கட்டணத்து விநாயகர் என்று போற்றியிருக்கின்றார்கள்.

(படம் : சற்றே பழைய படம், மூன்று வாசல்களில் கதவுகள் இல்லாத படம்.)

முகப்பு மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக்ருஹம் என்ற அழகியதொரு வரிசையில் ஆலயம் தனியாக அமைந்துள்ளது.

முகப்பு மண்டபத்தின் விதானத்தில் – மேற்கூரையில், விநாயகரின் 16 வடிவங்கள் (ஷோடச கணபதிகள்) எழில் கொஞ்ச வரையப்பட்டுள்ளன.


எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம், நெடிதுயர்ந்த தோற்றம், பெயருக்கேற்றார் போல் பெருத்த வடிவம், அழகியல் கொஞ்சும், பார்த்தவுடன் கண்களில் ஒற்றிக் கொள்ளும் விதத்தில், மூர்த்தியும் பெரிது, கீர்த்தியும் பெரிது என்ற வாக்கியத்திற்கு ஏற்றாற்போல் அமைந்த ஸ்ரீ முக்குறுணி விநாயகர் அருளே வடிவமாகக் காட்சி அளிக்கின்றார்.

பெரியதொரு தோற்றத்திற்கு ஸகல திரவிய அபிஷேகக் காட்சி ஆனந்தத்தை அளித்து, அளவில்லா பேறுகளை அள்ளித்தரும்.

(படம் : இன்றைய எழிலார்ந்த தோற்றம்)

அர்த்த மண்டபத்தின் தூணில், கல்வெட்டாக விநாயகர் அகவல் அமைந்திருப்பது, பக்தர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வசதியாக இருக்கும். (விநாயகர் அகவல் பற்றி தனியொரு பதிவாகவே எழுதவேண்டும். சைவத்திற்கு சித்தாந்த மார்க்கத்தில் அமைந்த தோத்திரம் - திருமந்திரம் போல, குமரனை வழிபடுவோருக்கு கச்சியப்பரின் கந்தபுராணம் & ஸ்கந்த குரு கவசம் (சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்) போல, காணாதிபத்யத்திற்கு விநாயகர் அகவல் ஒரு சித்தாந்த பெருந்தொகுப்பு ஆகும். அதுபற்றி பிறிதொரு பதிவில் காண்போம்.)

அர்த்த மண்டபத்தின் வாசலை விட பிள்ளையார் பெரியதாக இருப்பதால், விநாயகரை அமைத்து விட்டுப் பிறகு வாசல் படி அமைத்திருப்பார்களோ என தோன்றச் செய்யும்.

விநாயகி :

(படம் : இந்த ஆலயத்தில் எடுத்தது அல்ல. இதைப் போன்றதொரு சிலையை ஆலயத்தின் முகப்புத் தூணில் காணலாம்.  நன்றி : கூகிள்)
கணபதியே அனைத்திற்கும் மூல காரணம் என போற்றும் வகையில், விநாயகி எனும் கணபதியின் பெண் வடிவம் – முகப்பு மண்டப முன் பக்கத் தூணில் அமைந்திருப்பது சாலச் சிறந்தது.

குறுணி – மூன்று குறுணி – முக்குறுணி :
பழந்தமிழர் அளவை அலகுகளில் குறுணி என்பதற்கு தற்காலம் நான்கு படி அல்லது 6 கிலோவுக்கு சமமானது. விசேஷ காலங்களிலும், வேண்டுதலுக்காகவும் –  மூன்று குறுணி அல்லது முக்குறுணி அளவு, அதாவது பதினெட்டு கிலோ அரிசிமாவினால் – ஒரே பெரிய கொழுக்கட்டை பிடிக்கும் வழக்கம் இருப்பதாலும், 12 படி அரிசி அன்னத்தினை நிவேதனம் செய்யும் வழமையாலும் – இந்தப் பெரிய பிள்ளையாருக்கு முக்குறுணி விநாயகர் என்ற பெயர் வந்தமையை அறிய முடிகின்றது.

பனிரண்டு படி அரிசி சாப்பிடுபவரின் வயிறு போன்றதொரு சரியான அளவில் விநாயகர் அமைந்திருப்பதாக சிற்பி ஒருவர் சிறப்பாகக் கூறுவார்.

மூன்று என்ற எண்ணுக்கும் முக்குறுணி விநாயகருக்கும் அநேக தொடர்புகள் உண்டு. முகப்பு வாசல் மூன்று. விநாயகரின் மேலே அமைந்திருக்கும் விமானத்திற்கு கலசங்கள் மூன்று. பிரம்ம விஷ்ணு ஈசன் எனும் மும்மூர்த்திகளின் அம்சமாக அமைந்தவர். படைக்கப்படும் குறுணியின் அளவு மூன்று.

சிதம்பர (வி)நாயகர் :
சிதம்பர பூஜை பத்ததியின் படி, முக்குறுணி விநாயகர் ‘த்ரிசிவாக்ய கணபதி’ என்று போற்றப்பட்டு வழிபடப்படுகின்றார். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் அம்சமாக இந்த விநாயகர் விளங்குவதால், இவரே படைத்தல், காத்தல், அழித்தல்  எனும் முத்தொழிலுக்கும் வித்தகனாகின்றார். விநாயகர் அகவல் போற்றுவது போல, மும்மதச் சுவடு – சைவத்தின் திருநீறு, சாக்தத்தின் குங்குமம், காணாபத்யத்தின் நம்பிக்கை தரும் தும்பிக்கை எனும் மூன்று மத அடையாளங்களைக் கொண்டவர்.

விடல் தேங்காய் வழிபாடு :
தொடங்கிய காரியத்தை தொய்வில்லாமல் நடக்க அருள்பவர் என்பதால், சிதம்பரம் கோயிலின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் இங்கு செய்யப்படும் கணபதி ஹோமம் தான் ஆரம்பம்.

இங்கு விடல் தேங்காய் வழிபாடு சிறப்புக்குரியது. செயல்கள் சிறக்கவும், வேண்டிய காரியம் நிறைவேறினாலும் – பக்தர்கள் இங்கு 1008 தேங்காய்களை விடல் தேங்காயாக உடைக்கும் வழக்கம் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்தக் கோயிலின் உத்ஸவமாக கடந்த பல்லாண்டுகளுக்கு முன்னராக, விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் உத்ஸவம் சிறப்புற நடைபெற்றதாகவும், தொடர்ந்து அன்னதானம் மிக விமரிசையாக நடந்ததாகவும் பெரியோர்கள் சொல்வார்கள்.

ஆலய இருப்பிட வரலாறு :
பொதுவாக சிவ ஆலயங்களில், விநாயகர் மற்றும் முருகர் கோயில்கள் சிவ பெருமானுக்கு இரு புறமும் அமைந்திருக்கும். அது, கோஷ்டத்திலோ அல்லது தனிக்கோயிலாகவோ அமையலாம். விநாயகர், பிரகாரம், முருகர் என வலம் வந்து சிவனை வழிபட்டால் அது மஹா பிரணவ பிரகாரம் என்பதாகும்.

அதன்படி, சிதம்பரத்தின் ஆதி மூலவராகிய, ஸ்ரீ மூலநாதர் எனும் கிழக்கு நோக்கிய தெய்வத்திற்கு, இரு மருங்கும் விநாயகரும், பாண்டிய நாயகர் கோயிலில் உறையும் முருகப் பெருமானும் அமைந்திருக்கின்றார்கள்.

வரலாற்றுக் குறிப்புகள் :
முக்குறுணி விநாயகரைப் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் நேரடியாகக் கிடைக்கவில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178 – 1218)  காலத்தினதாக இருக்கும் என நம்புகின்றார்கள்.

தெற்கு திசையில் அமைந்த பிரம்மாண்ட விநாயகரைப் போலவே, வடக்கு திசையில் பிரம்மாண்ட – ஒரே கல்லினால் ஆன – பிரம்மாண்ட முருகர் – பாண்டிய நாயகர் சன்னிதி – மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டது என ஆய்வாளர்கள் அறுதியிடுகின்றார்கள். இந்த மூன்றாம் குலோத்துங்கன் தான், நடராஜர் அமைந்திருக்கும் கருவறைக்கு நேரெதிரே நிருத்த சபை எனும் பெரு மண்டபத்தைக் கட்டினான். இது தேர் வடிவில் இருக்கும். அதே போல பாண்டிய நாயகர் முருகர் கோயிலும் தேர் வடிவில் அமைந்திருப்பதை ஆய்வாளர்கள் சுட்டுகின்றார்கள்.
(சிதம்பரத்தின்  அருகில் இருக்கும் புவனகிரி எனும் ஊர் ‘புவனேச்சரம் கொண்டான்’ எனும் மூன்றாம் குலோத்துங்கன் பெயரால் அமைந்து, தற்போது புவனகிரி என்று வழங்கப்படுகின்றது. இம்மன்னன் காலத்தில் தான் கும்பகோணம் அருகில் இருக்கும் திருபுவனம் கோயில் பொலிவு பெற்றது. அங்கிருக்கும், சரபேஸ்வரரை தனது இஷ்ட தெய்வமாகக் கொண்டதால், நிருத்த ஸபையில் சரபேஸ்வரரை அமைத்தான் என்கிறது வரலாறு.)

ஆகையால், பிரம்மாண்ட விநாயகர், முருகர் சிலைகள் கொண்ட கோயில்கள் ஒரே காலத்தில் திட்டமிடப்பட்டிருக்கலாம்.
முக்குறுணி விநாயகர் ஆலய அமைப்பு பிற்காலச் சோழர்களின் கட்டிடக் கலையையே சார்ந்திருப்பதை பலரும் நிரூபித்திருக்கின்றார்கள்.

பொதுவாக பெரிய பிள்ளையார் சிலைகள் தென் தமிழகத்திலேயே காணப்படுகின்றன. பிள்ளையார்ப்பட்டி – குடைவரை கோயில்  ஏறத்தாழ 1600 ஆண்டுகள் பழமையானது என்கின்றார்கள்.
மூன்றாம் குலோத்துங்கன் பாண்டி நாடு வரை சென்று படையெடுத்து வென்றதன் நினைவாக – தென் தமிழகமான  பாண்டி நாட்டில் உள்ள (மதுரை, திருநெல்வேலி) பெரிய பிள்ளையாரைப் போன்றதொரு சிலையை சோழ நாட்டில் நிறுவ எண்ணியிருக்கலாம்.
(முக்குறுணி விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகர் ஏறக்குறைய உயரத்திலும், உருவத்திலும் ஒன்றுபட்டிருப்பதைக் காணலாம்.)

அதன் விளைவே, சிதம்பரத்தில் பெரிய பிள்ளையார் நமக்குக் காட்சி அளிக்கின்றார். சோழ சாம்ராஜ்யம் நலிவடைந்த பின் வந்த பாண்டிய மன்னர்களும் சிதம்பரத்திற்கு பெரும் தொண்டு ஆற்றியிருக்கின்றார்கள். ஆகவே, அவர்களும் இவ்வாலயங்களுக்கு தொண்டினைத் தொடர்ந்திருக்கலாம்.

வழிபடுவதால் வரும் வளம் :

சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகரை வழிபட்டு,

பிரம்ம, விஷ்ணு, சிவ மூர்த்திகளின் பரிபூரண கிருபையைப் பெற்று,
ஆணவம், கண்மம், மாயை எனும் மலங்கள் அறுபட்டு,
சூரியன், சந்திரன், அக்னி ஆகியோரைக் கண்களாகக் கொண்டதால், நவக்ரஹ தோஷங்கள் நீங்கப்பெற்று,
வாதம், பித்தம், கபம் எனும் நோய்கள் விலகப்பெற்று,
மனம், வாக்கு, காயம் எனும் முப்பொறிகளிலும் தூய்மை பெற்று,
உம்மை, இம்மை, மறுமை எனும் மூன்றிலும் புண்ணியம் பெற்று,
தூல, தூக்கும, காரண வடிவினராய் வழிபட்டு வரம் பெற்று,
யந்திரம், மந்திரம், தந்திரம் ஆகிய மூன்று ஸாதனை முறைகளாலும் திருப்தி பெறுபவர் என்பதனால்,
ஸத், சித், ஆனந்தம் – எனும் மூன்று பரமானந்த சக்திகளைப் பெற்று

வாழ்வாங்கு வாழ்ந்து, பெரிய பிள்ளையார் அருளும் பெரும் அருளும், செல்வங்களும் பெற்று, பெரிய பேறு பெறுவோமாக !

-         நி.த. நடராஜ தீக்‌ஷிதர்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
Mobile : 94434 79572, 93626 09299.








Thursday, January 1, 2015

வளரும் வேலவன் வடிவம்

வளரும் வேலவன் வடிவம்


சிதம்பரம்.

உலக இயக்கத்திற்கான இயங்கு விசையை வழங்கிடும் ஆடல் நாயகனாகிய நடராஜப் பெருமான் திருநடனம் புரிம் உன்னதமானதும், சைவர்களுக்கு முக்கிய தலமாகவும் விளங்குகின்றது.

காலத்தால் பழமை வாய்ந்ததும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று அம்சங்களிலும் பெருமை கொண்டது சிதம்பரம் தலம்.

சிதம்பரத்தில் விளங்கும் நடராஜர் ஆலயம் தெய்வீகம் ததும்பும் கோயிலாக மட்டுமல்லாமல், பற்பல அற்புதங்களை தன்னுள் கொண்டதாகும். அங்கிருக்கும் ஒவ்வொரு கல்லும் ஒரு சரித்திரம் சொல்லும்.

பல கலைகளின் உன்னத அடையாளங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன. தலைசிறந்த  கருங்கல் கட்டிட அமைப்புகள், வடிவங்கள்ஓவிய நுணுக்கங்கள் மற்றும் பிற கலைகளின் உச்சகட்ட நிலையை இன்றும் காண இயலும்.

எந்த ஒரு கலையை எடுத்துக்கொண்டாலும், அந்தக் கலையின் மேன்மை தன்மை சிதம்பரத்தில் விளங்குவதை உணரலாம்.

அனைத்து தெய்வங்களும் இந்த ஆலயத்தில் குடிகொண்டதாக சிதம்பர புராணங்கள் பகர்கின்றன. காசி அன்னபூரணி முதற்கொண்டு, சபரிமலை சாஸ்தா, திருக்கடையூர் காலஸம்ஹார மூர்த்தி  என பல தெய்வங்களின் சிலா ரூபங்கள் இங்கே அமையப் பெற்றிருக்கின்றன.

ஒரு தினத்தின் ஆறாவது காலமாகிய, இரவு 10 மணிக்கு நடைபெறும் அர்த்த ஜாம காலப் பொழுதில், அனைத்து தெய்வங்களின் தெய்வக்கலைகளும், சிதம்பர அம்பலவாணரிடம் சேர்ந்து, பிறகு காலை அங்கிருந்து செல்கின்றன என்று சிதம்பர புராணத்தினைப் புகழும் குஞ்சிதாங்கிரிஸ்தவம் எனும் நூலின் 175வது ஸ்லோகம் விவரிக்கின்றது. (ஆஸேதோ ... பஜேஹம்).
ஆகவே, பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தெய்வ வடிவங்கள் சிதம்பர ஆலயத்தில் காணப் பெறலாம்.

அவ்வகையில், சிதம்பரத்தின் அற்புத அமைப்பின் ஒன்றான  (பழனி) பால தண்டாயுதபாணி ஆலயம் பற்றியும் அதன் சிறப்புகளையும், அதிசய அடிப்படையிலான விபரம் பற்றியும் இந்தப் பதிவில் காணலாம்.


குமரன். ஷண்முகன். அழகன். தமிழ்க் கடவுள். ஓங்கார ரூபமாக விளங்குபவர்.
தந்தைக்கே உபதேசம் செய்து அறிவிற்கு வயது ஒரு தடையல்ல என்பதை உலகிற்குக் காட்டிய உன்னத தெய்வம். தமிழில் முருகு என்றால் மிகவும் அழகு என்று பொருள்.

முருகனையே முழு முதற்கடவுளாக வணங்க செய்யும் வகை கௌமாரம் ஆகும்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை அக்னி பகவான் கங்கையில் விட, கங்கை சரவணப்பொய்கையில் விட, அந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக, அந்த ஆறு குழந்தைகளுக்கும் கிருத்திகை முதலான நக்ஷத்ர தேவதைகள் பாலூட்ட, பார்வதி தேவியானவள் அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஸ்கந்தர் ஆக்கினள். (ஸ்கந்தம் என்பதற்கு சேர்த்தல் என்று பொருள்).

சிவபெருமான், முருகப் பெருமானிடம் பிரணவப் பொருள் கேட்டு உணர்ந்தார். பிரணவத்தை தந்தைக்கே உபதேசம் செய்தார்.

வேத மந்திரங்களில் ஓம் எனத் தொடங்கி ஓம் என முடியுமாறு இரண்டு தெய்வங்களுக்கு மட்டுமே அமைந்துள்ளன.

ஒன்று, 'ஓம் ஈசான .... ஸதாசிவோம்' என்று அமைந்த, ஓங்காரத்தின் விளக்கத்தை முருகப் பெருமானிடமிருந்து கேட்டறிந்த சிவபெருமானுக்கு உரியது.
மற்றொன்று, 'ஓம் குமாரஸ்சித் பிதரம் .... ஸுப்ரஹ்மண்யோம்' என்று அமைந்த பிரணவத்தை உபதேசித்த முருகப் பெருமானுக்கு உரியது.


ஒரு சமயம் கைலாயத்தில், நாரதர் அளித்த ஞான மாம்பழத்தை தாய் தந்தையரிடமிருந்து பெற, உலகை எவர் முதலில் சுற்றி வருகின்றாரோ அவருக்கே இந்த ஞானப் பழம் கிடைக்கும் என்பதால் விநாயகருக்கும், குமரனுக்கும் போட்டி ஏற்பட, அதில் பெற்றோரை வலம் வந்தாலே உலகம் முழுதையும் வலம் வந்த பலன் என்று கூறி விநாயகர் பார்வதி பரமேஸ்வரனை வலம் வந்து மாம்பழம் பெற்றிட, தாமதமாக வந்த குமரன் தனக்கு பழம் கிடைக்கவில்லையே என்ற கோபத்துடன் குன்று ஏறி ஆண்டிக் கோலத்தில், பழநி ஆண்டவராக வடிவம் கொண்டு அமர்ந்ததாக பழனி புராணம் கூறும்.

முருகன் மயிலுடன் பழனிக் குன்றில் இறங்கிய பால முருகர் வடிவத்தினை, சிதம்பரத்தில், பால தண்டாயுதபாணியாக, நடராஜர் வீற்றிருக்கும் பிரகாரத்துக்கு அடுத்ததாக உள்ள, குலோத்துங்கச் சோழன் திருமாளிகை என்று வரலாறு போற்றும் பிரகாரத்தில், கொடிமரத்திற்கு மேற்கில் சில அடிகள் கடந்தால் - தரிசிக்க இயலும்.

வரலாற்றின் படி பார்த்தோமானால்மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178 - 1216) காலத்தில் இந்த சன்னிதி உள்ள  பிரகாரம் கட்டப்பட்டமையாலும், குலோத்துங்கச் சோழன் திருமாளிகை என்று அழைக்கப்பட்டமையாலும், கி.பி. 11 - 12 ம் நூற்றாண்டில் - இந்த சன்னிதி அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. (17 அல்லது 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதும் சில அறிஞ்ர்கள் கருத்து.)


இந்த சன்னிதி பற்பல சிறப்புகளைக் கொண்டது.

முதலாவதாக, இந்த சன்னிதியின் மூல வடிவம்  - தனியானதொரு சிலை வடிவமாக அல்லாமல்மேற்கூரையைத் தாங்கிக்கொண்டிருக்கும் தூண் என்ற அமைப்பில் அமைந்தது. தூணில் அமைந்த ஒரு புடைப்பு சிற்பம் தான் இந்த ஸன்னிதியின் மூலவர். ஆகவே, இவரை கம்பத்தடியார், கம்பத்து இளையனார் என்றும் பக்தர்கள் அன்புடன் அழைப்பதுண்டு. (கம்பத்து இளையனார் சன்னிதி - இங்கு இருப்பது போலவே திருவண்ணாமலையிலும் தூணில் முருகர் காட்சி அளிக்கின்றார்).

மயிலின் கழுத்தைக் கையால்  வாஞ்சையாய் வளைத்த கோலம்  கொண்டு காட்சி அருள்பவர்.

பழனி மலையை நினைவு படுத்தும் வண்ணம் சற்றே உயரத்தில் மேடான இடத்தில் அமைந்திருப்பவர்இவரை வலம் வர வேண்டும் எனில் பழனிப் படியை ஏறுவது போல சில படிகள் ஏறி, பிறகு சில படிகள் கீழிறங்கும் அமைப்பில் அமைந்தது.

விதானம் எனும் மேற்கூரையில் ஓவியங்கள் முருகப் பெருமானின் அருளாடல்களை அழகுற அறிவிக்கின்றன.

பால தண்டாயுதபாணி ஸ்வாமி தூணில் அமைந்து பகதர்களின் துயர் துடைப்பவர்குழந்தைச் செல்வம் அருளும் குமரனாக விளங்குபவர். இரு மனம் கூடும் திருமணம் அமைய அருள்பவர். நோய்களை நீக்கக் கூடியவர்இல்லறம் நல்லறமாக விளங்க அருள் பாலிப்பவர். உருவில் சிறிதானாலும் அருள்  அளிப்பதில் வள்ளலாக விளங்குபவர்.

சிதம்பரம் கோயிலில் மேலும் சில முருக வடிவங்கள் இருந்தாலும், இந்த சன்னிதிக்கு மட்டுமே பெரும்பான்மை மக்கள் காவடி எடுக்கும் வழக்கம் உள்ளது. (பழநியில் தான் முதன் முதலில் காவடி எடுக்கும் வழக்கம் வந்தது என்று பெரியோர்கள் கூறுவார்கள்.) அக்னி நக்ஷத்திர நிவர்த்தி நாளில் - கத்திரி காலம் முடியும் சமயம் - (மே மாதம்), இந்த சன்னிதிக்கு காவடி ஆடியபடி பக்தர்கள் வரும் காட்சி காணக் கிடைக்காத ஒரு அழகிய நிகழ்வாகும்.

இந்த சன்னதியின் சிறப்பம்சம் : தூணில் அமைந்த பால தண்டாயுதபாணியின் வடிவம் வருடாவருடம் வளர்ந்து கொண்டேயிருக்கினது.

இவருக்குச் சாற்றப்படும் வெள்ளி மற்றும் தங்கக் கவசங்கள் சில வருடங்களுக்குப் பிறகு அதை அணிவிக்க இயலாத வண்ணம் சிலையுடன் பொருந்தாமல் போய்விடுகின்றது. சிலை வடிவம் பெருத்து, கவசம் சிறுத்துப் போனதால் அணிவிக்க முடியாமல், பிறகு புதியதாக கவசம் செய்ய வேண்டியிருக்கின்றது

உலகில் பற்பல விஷயங்கள் மனித அறிவுக்குப் புலனாகாமலே உள்ளன. விஞ்ஞான அறிவிற்கு எல்லைகள் உண்டு. அனைத்தையும் விஞ்ஞானம் கொண்டு விளக்கிவிட முடியாது.

என்றாலும், வளரும் கல் சிலை பற்றி காண்போம்.

சிதம்பரத்தில் இருப்பது போன்ற தண்டாயுதபாணி வடிவம் வளர்வது போல, பாரத தேசத்தில் பல இடங்களில் தெய்வச் சிலைகள் வளர்கின்றன என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு உண்டு.

மதுரை ஆலயத்திலிருக்கும் அனுமன், நாமக்கல் ஆஞ்சநேயர், கர்நாடகாவில் உள்ள நந்தி, வட இந்தியாவில் உள்ள சிவ லிங்கம் முதலான வடிவங்கள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன என்பது பக்தர்கள் பலர் அறிந்தது.

பாரத தேசத்தின் வட எல்லையில் அமைந்துள்ள கைலாய மலைச் சாரலான இமயமலை வருடாவருடம் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. கல் எப்படி வளரும் ? மலை எப்படி வளரும் ? என்பன போன்ற கேள்விகளுக்கு நில இயலாளர்கள்  (geologists) - பூமிக்கு அடியிலிருக்கும் டெக்டானிக் ப்ளேட்கள் எனும் பாறை அடுக்குகள் இமயமலையைத் தொடர்ந்து கீழ்ப்பக்கத்திலிருந்து நெருக்குவதால், மலை வருடத்திற்கு 5 மி.மீ. உயர்ந்து வளர்வதாக  - பதில் அளிக்கின்றார்கள்.

கல் மலை வளர்வதற்கும் கற்சிலை வளர்வதற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

கல்மலை வளர்வதற்கு டெக்டானிக் ப்ளேட் காரணம். கற்சிலை வளர்வதற்கு காரணம் என்ன?

ஆன்றோர்கள், கல்லுக்குள் தேரை எனும் உயிரினம் இருந்தால் அது வளரும் போது கல்லும் வளரும் என்பார்கள்

ரொமானியாவில் காணக்கிடைக்கப் பெறும் வளரும் கற்களை ட்ரொவான்ட் என்று அழைக்கின்றார்கள்

சில குறிப்பிட்ட சிறப்பு  வகைக் கலலின் மேல் பரப்பானது, காற்று அல்லது அக்கல்லின் மீது படும் தண்ணீர் ஆகியவற்றில் உள்ள தாதுப் பொருட்களைத் தன்னுடனே ஒட்டிவைத்துக் கொள்கின்றது. நாளாக நாளாக அந்தப் படிமம் (அழுக்கு அல்ல) கல்லோடு சேர்ந்து கல்லாகின்றது. (மேலும் விளக்கப் போனாமானால் கால்ஷியம் கார்போனேட், ஹை-போரோஸ் சான்ட் என வேதியியல் பாடமாகப் போய்விடும்.)

(மரமே கல்லான அதிசயம் - திருவக்கரையில் காணலாம்.)

இங்கே குறிப்பிட்ட விஞ்ஞான விஷயங்கள், பால தண்டாயுதபாணி சிலை வளர்வதற்கான ஆய்வுக் கூறுகளே தவிர, இவை தான் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

நமது முன்னோர்கள்  ஆழந்த ஞானம் கொண்டவர்கள். கல்லையே ஆண் கல், பெண் கல், அலிக் கல் என்று பகுக்கத் தெரிந்தவர்கள். அவற்றைக் கொண்டுஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள், தரையில் அமைக்க வேண்டிய கற்கள் என அமைக்கத் தெரிந்தவர்கள். இந்த பகுப்பு முறையினால்தான், ஆயிரம் ஆண்டுகளானாலும், காலத்தைக் காட்டும் கண்ணாடியாக, ஆலயங்கள் விளங்குகின்றன.

இதிலும் மேலும் நுட்பமாக, ஸப்தஸ்வர ஒலியைத் தரும் கற்களைக் கண்டுகொண்டு சங்கீதத் தூண்களை அமைத்தவர்கள்.

அதிநுட்பமாக ஆய்வுகள் செய்ததன் பலனாக, வளரும் கற்களைக் கண்டறிந்து சிலைகளாக வடித்துள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் சிதம்பர ஆலயத்தில் அமைந்துள்ள - பால தண்டாயுதபாணி தெய்வம்..

இவ்வாலயத்தைப் பற்றி செவி வழிச் செய்திகள் பல உண்டு.

இந்த சன்னிதியில் உள்ள பால தண்டாயுதபாணியை வழிபட்டு, அபிஷேக ஆராதனைகள் செய்து பலன் பெற்றோர் பலர் உண்டு. இத்தெய்வத்தைக் குல தெய்வமாகக் கொண்டவர்களும் பலர் உணடு.

குழந்தைப் பேறு அருளும் குமரன், தள்ளிப் போகும் திருமண பாக்கியத்தை கூட்டுவிக்கும் வேலவன், குடும்பம் நல்லபடியாக நடக்க உதவும் ஸ்கந்தன், குழந்தைகளின் படிப்பில் மேன்மை அருளும் குகன் - சிதம்பர ஆலய பால தண்டாயுதபாணியை வழிபட்டு பெரும் பேறுகள் பல பெறுவோம்.

பி.கு. : சிதம்பர ஆலய அமைப்பில் பல சூட்சுமங்கள் உள்ளன
கிழக்கு கோபுரம் வழியாக, நடராஜர் ஆலயத்திற்குச் செல்லும் பாதையான 21 படிகள் என்னும் வாயிலைக் கடந்தால், முதலில் வருவது, தண்டாயுதபாணி சன்னிதி அமைந்த குலோத்துங்கச் சோழன் திருமாளிகை பிரகாரம் வரும்.
அங்கு, வலம் வரும் முன், நாம் முதலில் தரிசிக்க வேண்டியது - மாம்பழ விநாயகரைத் தான். கையில் மாம்பழம் ஏந்திய கோலத்தில் அழகிய உருவில் விநாயகப் பெருமான் அமைந்திருப்பார். (இவர் தான் பார்வதி பரமேஸ்வரை வலம் வந்து பழம் வாங்கியவர். ஆகையாலேயே, இந்த மாம்பழ விநாயகர், நடராஜர் சிவகாமி சன்னிதிக்கு வெகு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது. மாம்பழ விநாயகரும், பால தண்டாயுதபாணியும் - புராணங்களில் கூறப்பட்டுள்ள மாம்பழ சம்பவத்தை நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளது.)  அவரை தரிசித்து, பிரகாரம் வலம் வந்தால் கொடி மரம் - அதன் அருகே பால தண்டாயுதபாணி சன்னிதி - பிறகு பிரகார வலம் முடித்து, நடராஜரை தரிசிக்கச் செல்ல வேண்டும் என்பது மரபு.

- நி.. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி, பூஜா ஸ்தானிகர்
நெய்வேலி ஸத்சங்கம் - மணித்வீபம் ஆலய பூஜகர்
yanthralaya@gmail.com, yanthralaya@yahoo.co.in
www.facebook.com/deekshidhar

Mobile : 94434 79572, 93626 09299.